என் மலர்tooltip icon

    விருதுநகர்

    அருப்புக்கோட்டைக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வந்தார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் திளைத்தனர்.
    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் ரமேஷ் போட்டியிடுகிறார்.

    இவரை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அருப்புக்கோட்டையில் திருச்சுழி ரோட்டில் உள்ள மரக்கடை பஸ் நிலையம் அருகே நேற்று இரவு வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் வேனில் இருந்த படியே முரசு சின்னத்தை காண்பித்து மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

    விஜயகாந்தை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்த தொண்டர்கள் ஆரவாரமிட்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள். சற்று நேரம் அங்கு நின்று தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் தொண்டர்களை நோக்கி கை காண்பித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சென்றார்.

    விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று (புதன்கிழமை) விருதுநகர் வருகிறார்.
    விருதுநகர்:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று (புதன்கிழமை) விருதுநகர், ராமேசுவரத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று (புதன்கிழமை) விருதுநகர் வருகிறார். இதற்காக அவர் மதுரை வந்து, இன்று பிற்பகல் 3 மணி அளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் -அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி திடலில் இறங்குகிறார்.

    அங்கிருந்து விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோடு அருகே உள்ள நகராட்சி திடலுக்கு வந்து பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

    விருதுநகர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அவர் ஹெலிகாப்டரில் ராமேசுவரம் புறப்பட்டு செல்கிறார். மாலை 5 மணி அளவில் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர், அங்கிருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் பாம்பன், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் வந்து பேசுகிறார். இரவில் அங்குள்ள ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை(வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் ராமேசுவரம் கோவிலில் ஸ்படிக லிங்க தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் 6 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்கிறார். சாமி தரிசனம் முடித்த பின்னர் கார் மூலமாக தனுஷ்கோடி செல்ல உள்ளார். இந்த தகவலை பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் தெரிவித்தார்.

    யோகி ஆதித்யநாத் விருதுநகர், ராமேசுவரம் வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    புகைப்பட கண்காட்சியில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி வாக்காளர்களை கவரும் வகையில் நாள்தோறும் பல்வேறு அரசுத் துறையின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று தேசபந்து மைதானத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பாக வடிவமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியினை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்தார்.

    இந்த புகைப்பட கண்காட்சியில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.

    தேர்தலில் வாக்களிப்பதன்அவசியம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சவால் சக்கரம் விளையாட்டினை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த சவால் சக்கரத்தில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுக்கும் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டில் பங்கு பெற்றவர்களுக்கு மதிப்பெண்களுக்கு ஏற்ப வாக்காளர் விழிப்புணர்வு டி சார்ட், தொப்பி உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

    முன்னதாக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி போடப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தினையும் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டதையும் மகளிர் திட்டத்தினால் அமைக்கப்பட்ட காய்கறி கண்காட்சியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சிவகாசி:

    திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் இந்திரா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. துப்புரவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 28). 2 குழந்தைகள் உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காளீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காளீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பஸ்சில் ஏற்பட்ட தகராறில் தணிகைராஜ், ஆனந்தகுமார் ஆகிய இருவரும் பஸ் கண்டக்டர் தங்கராஜை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    விருதுநகர்:

    சிவகாசியில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ்சில் திருத்தங்கல்லை சேர்ந்த தணிகைராஜ் (வயது 28), ஆனந்தகுமார் (29) ஆகிய இருவரும் பயணம் செய்தனர். இவர்கள் இருவரும் பஸ்சின் பின் படிக்கட்டில் நின்றபடியே பயணம் செய்ததால் பஸ் கண்டக்டர் தங்கராஜ் (28) அவர்கள் இருவரையும் பஸ்சிற்குள் வந்து அமருமாறு கூறினார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் தணிகைராஜ், ஆனந்தகுமார் ஆகிய இருவரும் பஸ் கண்டக்டர் தங்கராஜை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகைராஜ், ஆனந்தகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர்.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு தற்போது 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

    இந்த வாக்குச்சாவடிகளில் 201 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த தேர்தல்களில் 75 சதவீத வாக்காளர்களுக்கு மேல் ஒரே வேட்பாளருக்கு வாக்கு பதிவான வாக்குச்சாவடிகளும் கணக்கில் எடுக்கப்பட்டு மொத்தம் 1,185 வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட வேண்டுமென மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து 7 சட்டமன்றத்தொகுதிகளிலும் 1,185 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுமையாக கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். முறைகேடுகளை தவிர்க்கவும், பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 25-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 26 பேர் இறந்தனர். மேலும் சிலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சாத்தூர் படந்தாள் பகுதியைச் சேர்ந்த வீரலட்சுமி (வயது 40) என்ற பெண் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

    இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.
    7 சட்டமன்ற தொகுதிகளில் 9,006 தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6,888 பேருக்கு தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    தேர்தல்ஆணையம் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது.

    அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 11,376 பேர் தேர்தல் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்களில் 9,006 பேருக்கு மட்டுமே இம்மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.

    அதுதவிர 2,370 பேர் பிற மாவட்டங்களில் வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் ராஜபாளையம் தொகுதியில் 1,200 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 1,526 பேரும், சாத்தூர் தொகுதியில் 1,310 பேரும், சிவகாசி தொகுதியில் 1,113 பேரும், விருதுநகர் தொகுதியில் 1,170 பேரும், அருப்புக்கோட்டை தொகுதியில் 1,236 பேரும், திருச்சுழி தொகுதியில் 1,451 பேரும் ஆக 7 தொகுதிகளிலும் 9,006 பணியாளர்கள் தபால் வாக்குப்பதிவு செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்.

    இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி பணியாளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு சீட்டு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

    பயிற்சி வகுப்புக்கு வந்த தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. 6,888 பேருக்கு இது வரை தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜபாளையத்தில் 1,170 பேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 1,067 பேருக்கும், சாத்தூர் தொகுதியில் 1,004 பேருக்கும், சிவகாசி தொகுதியில் 728 பேருக்கும், விருதுநகர் தொகுதியில் 1,0 28 பேருக்கும், அருப்புக்கோட்டை தொகுதியில் 1,396 பேருக்கும், திருச்சுழி தொகுதியில் 495 பேருக்கும் தபால் வாக்குச்சீட்டுவழங்கப்பட்டுள்ளது.

    ஆக மொத்தம் 7 தொகுதிகளிலும் சேர்த்து 6088 பேருக்கு தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
    ஆ.ராசாவை கண்டித்து சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. மகளிர் அணியினர் சிவகாசி பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகாசி:

    தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அவரது தாயாரை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் ஆ.ராசாவை கண்டித்து சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. மகளிர் அணியினர் நேற்று பல்வேறு இடங்களில் இருந்து சிவகாசி பஸ் நிலையம் அருகில்திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து விருதுகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி தலைமையில் மகளிர் அணியினர் சாத்தூர் ரோட்டில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் நின்றபடி ஆ.ராசாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிக்குமார், சசிமலர் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகளிர் அணியினரை கலைந்து போக செய்தார்.

    அதேபோல விருதுநகரில் முன்னாள் நகரசபை தலைவர் சாந்தி மாரியப்பன், அ.தி.மு.க. நகர மகளிரணி செயலாளர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் பிரேமா தலைமையிலும், ஆலங்குளத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் பரமேஸ்வரி தலைமையிலும், ராஜபாளையத்தில் அ.தி.மு.க. மகளிர் அணியினர், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சிவகாசி அருகே முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்ததாக தந்தை- மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). முன்னாள் ராணுவ வீரரான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மகன் சீனிவாசன் ஆகியோர் ரூ.44 லட்சத்தை பல்வேறு தவணைகளில் வாங்கியதாக தெரிகிறது. பணத்தை பெற்றவர்கள் ஒரு வருடத்திற்குள் திருப்பி தருவதாக கூறி விட்டு பின்னர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

    இதை தொடர்ந்து முன்னாள் ராணுவவீரர் ரமேஷ், சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், முன்னாள் ராணுவவீரர் ரமேஷின் புகார் மனுவின் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருத்தங்கல் போலீசார் ராதாகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகாசி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார் மனைவி ஈஸ்வரி (வயது 27). இவருக்கும் இவரது கணவன் சரவணக்குமாருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஈஸ்வரி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கணவன், குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்தவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஈஸ்வரியை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரியின் தங்கை மல்லிகா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேர்தலின் போது ஏற்படும் கலவரங்களை தடுக்க போலீசார் உடன் இணைந்து பணியாற்ற துணை ராணுவத்தினர் மற்றும் எல்லைப்பாதுகாப்பு படையினரும் பல்வேறு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தேர்தலின் போது ஏற்படும் கலவரங்களை தடுக்க போலீசார் உடன் இணைந்து பணியாற்ற துணை ராணுவத்தினர் மற்றும் எல்லைப்பாதுகாப்பு படையினரும் பல்வேறு பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு குஜராத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று பாதுகாப்பு பணிக்காக வந்தனர். அவர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் இணைந்து அணிவகுப்பு நடத்தினர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் நகர் இன்ஸ்பெக்டர் வினோதா, கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் சிவலிங்க சேகர், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    ×