என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் நடைபெறும் சோதனைகள் உள்நோக்கத்துடன் நடக்கிறது- மத்திய அரசு மீது அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் தாக்கு
- பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது.
- பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் உள்நோக்கம் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது ஓபன் சீக்ரெட் ஆகும். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராகவும், டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
பாரதிய ஜனதா அரசு, நீண்ட நெடுங்கால பாரம்பரியமிக்க அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருகிறது. பாரதிய ஜனதா அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சோதனை நடத்தப்படவில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
தமிழக கவர்னர் ரவி ஏராளமான கோப்புகளில் கையெழுத்து போடாமல் உள்ளார். தி.மு.க., மிசா உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை கண்ட கட்சியாகும். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. தி.மு.க. எதனை கண்டும் அஞ்சப்போவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட ரீதியாக இதை அணுகுவார்கள்.
இந்த சோதனைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநரும், மத்திய அரசும் தேர்தல் பிரசாரத்தை தி.மு.க.விற்கான தேர்தல் பிரசாரமாக செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






