என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • 18ம்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு
    • மாவட்ட கலெக்டர் அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 18 ம்தேதி அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து முதல்வரின் ஒப்பம் பெற்று கல்லூரி மூலமாக adtamildept@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9. மணிக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று போட்டிக்கும் மூன்று மாணவர்கள் மட்டும் ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் படி கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநிலப் போட்டிகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாநில அணிகளுக்கு பரிசு

    பெரம்பலூர், 

    தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், ஈரோடு மாவட்ட வாலிபால் சங்கம், உணர்வுகள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023 போட்டி பெரம்பலூரில் 2 நாட்கள் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டிக்கான தொடக்க விழாவில், ஆல்மைட்டி பள்ளி தாளாளர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் மக்கள்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல் நாள் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கன்னி துவக்கி வைத்தார். இதில் ஜார்கண்ட், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஹிரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கனா உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.ஆண்கள் பாராவாலி போட்டியில் கர்நாடகா முதல் இடமும், ராஜஸ்தான் 2ம் இடமும், தமிழ்நாடு 3ம் இடமும், ஹரியானா 4ம் இடமும் பெற்றன. பெண்கள் பாரா வாலி போட்டியில் ராஜஸ்தான் முதலிடமும், ஜார்கண்ட 2-ம் இடமும், கர்நாடகா 3-ம் இடமும், ஹரியானா 4-ம் இடமும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயங்களும், பெரம்பலூர் ஐஓபி, அஸ்வின்ஸ் குழுமம், உதவியுடன் வழங்கப்பட்டது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தமிழ்நாடு பாரா வாலி சங்க துணைசெயலாளர்கள் ஜெயபிரபா, கண்ணன், மாநில நடுவர்குழு தலைவர் ஜாபர், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பாராவாலி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமரன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சீனீவாசன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி துணைத்தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், சங்கீதா கோபிநாத், பள்ளி முதல்வர் ஹேமா, ஆசிரியர்கள் சந்திரோதயம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நாய் குறுக்கே ஓடியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(வயது 65). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் காருகுடி மெயின் ரோட்டில் உள்ள தனது வயல்காட்டிற்கு சென்று விட்டு, பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால், சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி வடிவேல் கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே அதே ஊரை சேர்ந்த துரைராஜின் மகன் சத்யா(26) ஓட்டி வந்த டிராக்டர், வடிவேல் மீது ஏறி இறங்கியது.இதில் வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த மங்களமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது
    • கலெக்டர்,நகர்மன்ற தலைவர், ஆணையர்உள்ளிட்டோர் பங்கேற்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில் நகரப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய்மையான சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாதமும் 3-வது புதன்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் ராதா மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
    • 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட கோரிக்கை

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மருதமுத்து, மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் கோசிபா, ஓய்வு பெற்ற அலுவலர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியத்தை அனுமதித்து வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் மற்றும் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திட்டத்தை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தை, புதிய கட்டிடத்துக்கு மாற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு 1.1.2023 முதல் 4 சதவீத அகவிலைப் படியை நிலுவையுடன் வழங்கியது போல, தமிழக அரசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். முடிவில் மகளிரணி தலைவி வசந்தா நன்றி கூறினார்.

    • 7500 உறுப்பினர்களை சேர்க்க முடிவு
    • எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உடன்பிறப்புகளால் இணைவோம் என்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணி அடைக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சோமு மதியழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், மாநில விவசாய அணி செயலாளருமான அன்னியூர் சிவா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 50 பூத்துகளில் ஒரு பூத்துக்கு 150 புதிய உறுப்பினர்கள் வீதம், மொத்தம் மேற்கு ஒன்றியத்தில் 7500 தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அருண், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, லோகநாதன், சிறு வயலூர் ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர், ேவப்பூர், அசூர் கிராமத்தில் நடைபெற்றது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியம், அசூர் கிராமத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் செ.வல்லபன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், டாக்டர் செ.செங்குட்டுவன், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.ராஜேந்திரன், தி.மதியழகன், ஒன்றிய தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாளை.மணிவண்ணன், அசூர் கிளைக் கழக செயலாளர் ந.செல்லப்பிள்ளை, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கு.க.அன்பழகன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் அசூர் ந.முத்துச்செல்வன், வேப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மா.பிரபாகரன், அசூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.ரவி, குன்னம் ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார், தேவா, தர்மராஜ், முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு மலையேறும் பயிற்சி அளிக்கபட்டது
    • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு பணிகளுக்கு இடையில் அவர்களது உடலுக்கும் மனதிற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷ்யாம்ளா தேவி மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மலையேற்ற பயிற்சி பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்மரிஷி மலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைப்பெற்றது.

    இந்த பயிற்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு மாவட்ட காவல்துறையினரோடு இணைந்து மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டார்கள். பயிற்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் மதியழகன் (தலைமையிடம்), பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி (பயிற்சி), துணைக் காவல் கண்காணிப்பாளர் மதுமதி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினர் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அன்னை சித்தர் ராஜகுமார் குருஜியின் சமாதிக்கு சென்றனர். அப்போது மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி தவசிநாதன் ஆகியோர் உடன் சென்றனர். இந்நிகழ்ச்சியின் போது மகா சித்தர்கள் அறக்கட்டளையின் சார்பாக அனைவருக்கும் தேநீர் மற்றும் வேற்கடலை, சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தீப்பிடித்து 3 வீடுகள் சாம்பல் ஆகின
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூரை சேர்ந்தவர்கள் மாரிமுத்து (வயது 62), கருப்பாயி (69), சின்னமுத்து(68) ஆகியோரின் கூரை வீடுகள் அருகருகே உள்ளன. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மாரிமுத்துவின் வீட்டில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது. இந்த தீ பரவி கருப்பாயி மற்றும் சின்னமுத்து ஆகியோரின் வீடுகளிலும் பரவியது. இதில் 3 வீடுகளும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்து பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேரின் வீடுகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா நடைபெற்றது
    • ழாவிற்கு கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகம் தலைமை வகித்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டுமையம், மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா நடந்தது. விழாவிற்கு கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகம் தலைமை வகித்து தமிழிசை விழாவை தொடங்கி வைத்து பேசினார். இதில் குமாரவயலூர் திருஞானசம்பந்த ஓதுவார் குழுவினரின் தேவார, திருவாசக குரலிசை நிகழ்ச்சியும், அய்யாமலை செல்வம் குழுவினரின் நாதசுர தவில் இசை நிகழ்ச்சியும் நடந்தன. மேலும் நெடுமறம் முத்தழகு, ஸ்ரீரங்கம் லெட்சுமிநாராயணன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும் நடந்தன. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். முடிவில் தேவார ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.




    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர்
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கலையரசன், மன்னர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாய அணி மாநில செயலாளர் வீரசெங்கோலன் கலந்துகொண்டு பேசினார்.

    கூட்டத்தில் வரும் 14ம்தேதி அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாளாக கொண்டாடி ஜனநாயகம் காப்போம் என்ற வாசகங்களுடன் விடுதலை சிறுத்தைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, 16ம் தேதி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடத்துவது. மே மாதம் 5ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சியின் மாநில வணிகர் அணி மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் திரளாக கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரத்தினவேல், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் வக்கீல் ஸ்டாலின், உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    • மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 11ம்தேதி நடைபெறுகிறது.
    • மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களை அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 11ம்தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்களின் குறை தீர்க்கும் பொருட்டு குறைதீர் நாள் கூட்டம் பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 11ம்தேதி காலை 11மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.கூட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை வகித்து மின்நுகர்வோர்களிடம் மனுக்களை பெறுகிறார். எனவே இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களை அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.




    ×