என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் 247 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 50 வகையான பறவைகள் நிலப்பறவைகள் ஆகும். 200-க்கும் மேற்பட்டவை நீர் பறவைகள் ஆகும்.
உலகின் மிக உயரத்தில் பறக்கக்கூடிய பறவையினங்களுள் ஒன்றான இந்த வரித்தலை வாத்துகள் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இருந்து கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வந்து செல்லும். இந்தநிலையில் கஜா புயல் காரணமாக கோடியக்கரை பகுதிக்கு வாராமல் இருந்த வரித்தலை வாத்துகள், 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து உள்ளன.
மிக அதிக உயரத்தில் 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் இந்த பறவைகள் பறக்கும் திறன் கொண்டவை என பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
புல் பூண்டுகளை உணவாக உட்கொள்ளும் இந்த வரித்தலை வாத்துகள் மத்திய ஆசிய நாடுகளான மங்கோலியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், திபெத், இந்தியாவின் லடாக் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண்டுதோறும்
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு குளிர் காலத்தில் வரும் இந்தப் பறவைகள் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு தங்கி ஹிமாலயன் மலைப்பகுதிக்கு சென்றுவிடும்.
சாம்பல் வெள்ளை நிறம் கலந்த நிறம் கொண்ட இந்த பறவைகள் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சி அளிக்கும்.
மற்ற பறவைகளை ஒப்பிடும் பொழுது இந்த வரித்தலை வாத்துகள் அதிகளவில் ஆக்சிஜனை உட்கொள்ளும் திறன் கொண்டமையால், நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்டது என தஞ்சை சரக வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த வரித்தலை வாத்துகள் கஜா புயல் தாக்கத்துக்கு பின் 3 ஆண்டுகளுக்கு பிறகு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பறவை ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பறவைகளை அதிகாலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் நண்டு பள்ளம், முனியப்பன் ஏரி, காலவாய்க்கரை, சோழா கலங்கரை விளக்கம் பகுதி, சவுக்கு பிளட்டு, அலைவாரிப்பகுதிகளில் அதிகமாக சுற்றுத்திரிகின்றன. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அடுத்த வாரம் திறக்கப்படும். சரணாலயம் திறந்த உடன் இந்த பறவைகளை பார்த்து ரசிக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் 247 வகையான பறவைகள் வந்து செல்லும். 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளில் 4 அடி உயரம் உள்ள அழகுமிகு பூநாரை(பிளமிங்கோ) சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்க்கும். மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல் காகம், ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வரும் ஆர்க்டிக்டேன்(ஆலா) இமாச்சல பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா(காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.
கடந்த 1963-ம் ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமயமலையில் இருந்து “ஹிமாலய கிரிபன் கழுகு” வந்து சென்றது. தற்போது 58 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோடியக்கரைக்கு மீண்டும் “ஹிமாலய கிரிபன் கழுகு” வந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 9 வகையான கழுகுகள் காணப்படுகின்றன. இதில் யூரேசியன் கிரிபன் கழுகு மற்றும் ஹிமாலய கிரிபன் கழுகுகள் உலகில் பழமை வாய்ந்ததாகவும், அழியும் தருவாயிலும் உள்ளன.
இந்த பழமை வாய்ந்த ஹிமாலய கிரிபன் வகையை சேர்ந்த கழுகுகள், பருவ நிலை மாற்றத்தால் உடலின் சீதோஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள தற்போது ஹிமாலயன் மலைப்பகுதிகளில் இருந்து வேதாரண்யம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு புலம் பெயர்ந்து வந்துள்ளன.
இங்கு வந்துள்ள கழுகு சுமார் 25 கிலோ எடை கொண்டது எனவும், இறந்த ஒரு மாட்டை அரை மணி நேரத்தில் உண்ணக்கூடியவை என்றும், இமயமலையில் பருவ நிலை மாற்றம், பனிப்புயல் காரணமாக இடம் பெயர்ந்து கோடியக்கரைக்கு வந்துள்ளது. இவை ஒரு சில நாட்கள் இங்கு தங்கி விட்டு மீண்டும் இமயமலைக்கே சென்று விடும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வகை கிரிபன் கழுகுகள் இறந்த உயிரினங்களின் உடல்களை பிரதானமான உணவாக உண்ணக் கூடியவை. மேலும் இந்த கழுகுகள் ஹிமாலய மலைப்பகுதிகளில், மலையின் உச்சிகளில் 1500 மீட்டர் முதல் 5500 மீட்டர் உயரங்களில் கூடு கட்டி வசிக்கக் கூடியவை. இந்த கழுகுகள் சுமார் 6 கிலோவில் இருந்து 25 கிலோ வரை உடல் எடை கொண்டதாக இருக்கும்.
இந்த வகை கழுகுகள் கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபால், சீனா மற்றும் மங்கோலியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. கோடியக்கரைக்கு வந்த ஹிமாலய கிரிபன் கழுகை வனத்துறையினரும், பொதுமக்களும் பார்த்து ரசித்தனர்.
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு குடிசைகள் அமைத்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்காமீன், ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகை கருவாடுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கருவாடுகள் திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும். நாகையில் தயாரிக்கப்படும் கருவாடுக்கு தனி மவுசு உண்டு.
இந்த நிலையில் நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக நாகை விசைப்படகு மீனவர்கள் கடந்த 15 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கனமழையால் நாகை அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் கருவாடு உற்பத்தி மொத்தமாக முடங்கியது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றதால் கருவாடு தயாரிக்க தேவையான அனைத்து வகையான மீன்களும் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தது. இதை வைத்து தற்போது கருவாடு தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கருவாடு உற்பத்தியாளர் சத்யா கூறியதாவது:-
நிவர், புரெவி என தொடர் புயல்கள் காரணமாக கருவாடு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. தற்போது விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதால் கருவாடுக்கு தேவையான மீன்கள் கிடைக்கிறது. இதை வைத்து கருவாடு உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இங்கு இருந்து பல்வேவறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர் உள்ளூர் மக்களும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக ஓட்டம் பாறை கருவாடு அதிக அளவில் விற்பனையாகிறது.
மழை காரணமாக கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரூ.150-க்கு விற்ற பாறை கருவாடு ரூ.250-க்கும், ரூ.30-க்கு விற்ற கெளுத்தி கருவாடு ரூ.70-க்கும், ரூ.110-க்கு விற்ற வாளை ரூ.150-க்கும், ரூ.40-க்கு விற்ற ஓட்டாம்பாறை ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழைக்காலங்களில் கருவாடு காயவைக்கும் தளத்தில் தண்ணீர் தேங்குவதால் தொழில் முற்றிலுமாக முடங்கி் போகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தண்ணீரை வெளியேற்ற வேண்டியுள்ளது. அதுவரை சாலையில் கருவாட்டை காய வைக்கும் நிலை உள்ளது. எனவே கருவாடு காய வைக்கும் தளத்தில் மழை நீர் தேங்காதவாறு மேடுப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இருந்து புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை இந்த மழை காலங்களில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து வரும் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீரோட்டத்திற்கு தகுந்தவாறு கடந்து இப்பகுதிக்கு வந்து, மேடான மணல் பரப்பில் குழி தோண்டி 15 முதல் 25 வரை முட்டைகள் இட்டு மூடிவிட்டு சென்றுவிடும். சமூக விரோதிகள் இந்த ஆமை முட்டைகளை, திருடிச் சென்று இதை சாப்பிட்டால் ஆண்மை அதிகமாகும் எனக்கூறி அதிக விலைக்கு விற்று விடுவார்கள்.
வனத்துறையினர் அந்த முட்டைகளை சேகரித்து கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதியில் உள்ள ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாத்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் சுமார் 15 நாட்களுக்கு குறையாமல் பொறிப்பகத்தில் வளர்த்து கடலில் பின்னர் விடுவர்.
இந்த நிலையில் புஷ்பவனம் கடற்கரை பகுதியில் சுமார் 30 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கியது. இயற்கை சீற்றம், கப்பல் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபட்டு ஆமை கரை ஒதுங்குவது வழக்கம் என மீனவர்கள் தெரிவித்தனர்.






