என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- வருகிற பருவ மழைக்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற பருவ மழைக்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மழைநீர் கால்வாய் பணிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர், மங்களதீர்த்தம். உலகளந்த பெருமாள் கோவில் குளம், ரங்கசாமி குளம் மற்றும் மேட்டு தெருவில் நடை பெறும் பணிகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் உத்தரவிட்டார்.
அப்போது மாநகராட்சி ஆணையர் கண்ணன், பணிக்குழு தலைவர் சுரேஷ், மண்டல தலைவர் சாந்தி சீனிவாசன், கவுன்சிலர்கள் சோபனா, கண் ணன், கார்த்திக்,சுப்புராயன், மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
- 2 சுடுகாட்டிலும் குமாரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
- கடந்த 3 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வேகவதி ஆற்றின் கரையோரம் இருந்த சுமார் 700 வீடுகள் அகற்றப்பட்டு அதில் குடியிருந்தவர்களுக்கு கீழ்கதீர்பூர் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.மேலும் வீடுகள் இல்லாதவர்களுக்கும் அங்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குடியேறினர். இந்த வளாகத்தின் 8-வது பிளாக்கில் தச்சு தொழிலாளியான குமார் என்பவர் தனது மனைவி தேவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி சரக்கு வாகனம் ஏறி இறங்கியதில் குமார் படுகாயம் அடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள 2 சுடுகாட்டிலும் குமாரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
இதனால் உடலை சென்னையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியிலேயே உடல் இருந்தது. இதனால் குடும்பத்தினர் மிகவும் மனவேதனை அடைந்தனர். இது பற்றி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட நிர்வாகம் குமாரின் உடலை தாயாரம்மன் குளம் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய அனுமதி அளித்தது.
இதையடுத்து குமாரின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு கீழ்கதிர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் தாயார் அம்மன் பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து கீழ்கதீர்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது:-
நாங்கள் வேகவதி நதிக்கரை யோரம் சொந்தமாக வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எந்தவித நிவாரணமும் அளிக்காமல் வேகவதி நதியோரம் இருந்த வீடுகளை இடித்து தள்ளி விட்டு, நபருக்கு ரூ.1.50 லட்சம் பெற்றுக் கொண்டு இந்த குடியிருப்பு பகுதியில் குடியேற அனுமதித்தனர்.
இந்த குடியிருப்பில் சமுதாயக்கூடம், கால்வாய் வசதி, கழிவு நீர் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சுடுகாடு என்பது மிக மிக அவசியமானது.
அதைக் கூட இந்த செய்யாமல் விட்டு உள்ளனர். பகுதியில் மின் மயானம் அமைத்து தர வேண்டும். அப்படி இல்லாவிடில் ஏற்கனவே தந்த வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி விடுவோம். அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு என்னென்ன பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது.
- லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மர்ம நபர்கள் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றனர். திடீர் என லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது. ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி ஏரி பகுதியில் கவிழ்ந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சோமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். லாரியில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ்சில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படிக்கட்டில் நின்று தொங்கியபடி வந்தனர்.
- பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறிஅனுப்பினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் இருந்து மாகரல் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்கள் படிக்கட்டில் நின்று தொங்கியபடி வந்தனர்.
இதனை பஸ் டிரைவரும், கண்டக்டரும் கண்டித்தனர். ஆனால் மாணவர்கள் பஸ்சுக்குள் வர மறுத்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறிஅனுப்பினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.
பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி அரசு பஸ் (558பி) சென்றது. பொன்னேரி பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறி படிக்கட்டில் நின்று பயணம் செய்தனர். அவர்கள் மூடப்பட்ட படிக்கட்டு கதவை திறக்குமாறு கூறி டிரைவரிடம் ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அரசு பஸ்சை பொன்னேரி போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிசென்று டிரைவர் நிறுத்தினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் மற்றும் வாசுகி ஆகியோர் பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை கீழே இறக்கி அறிவுரை கூறி எச்சரித்தனர்.
மீண்டும் இது போல் செய்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சிலிண்டர் விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் அவரது 3 மகள்களும் பலியாகி விட்டனர்.
- சிலிண்டர்கள் வெடித்த நாள் அன்று ஜீவானந்தத்தின் மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்று இருந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள தேவேரியம்பாக்கத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் இருந்தது. இதனை அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் நடத்தி வந்தார்.
இதில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள்கள் நிவேதிதா (வயது24), சந்தியா, பூஜா மற்றும் ஊழியர்கள் உள்பட 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் அவரது மகள்கள் பூஜா, சந்தியா உள்பட 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஜீவானந்தத்தின் மூத்த மகள் நிவேதிதாவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை நிவேதிதாவும் பரிதாபமாக இறந்தார்.
இதனால் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலியான நிவேதிதா சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எச்.டி. படித்து வந்தார். இதேபோல் இறந்த அவரது சகோதரிகள் பூஜாவும், முதுநிலை படிப்பும், சந்தியா இளநிலை பட்டப்படிப்பும் படித்து வந்துள்ளனர்.
சிலிண்டர் விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் அவரது 3 மகள்களும் பலியாகி விட்டனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிலிண்டர்கள் வெடித்த நாள் அன்று ஜீவானந்தத்தின் மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்று இருந்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.
மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கும்பகோணத்தை சேர்ந்த ஊழியரான சக்திவேல் என்பவர் மட்டும் உயிர் தப்பினார். அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.
- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது.
- தொடர் கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சிபுரம்:
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்கிறது.
இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் திடீரென கன மழை கொட்டித்தீர்த்தது.
ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் பகுதி, பஸ் நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
தொடர் கனமழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டு வருகிறது.
- வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சிமில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
- 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் செல்லுகின்ற நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சிமில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடம் மிகுந்த சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நீந்தி செல்லும் அவல நிலை உள்ளது. துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களாக காட்சி அளிக்கிறது. இதனால் துணை சுகாதார நிலையத்துக்கு வர பொதுமக்கள் அச்சப்படுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ஏனாத்தூர் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் செல்லுகின்ற நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கடந்த தேர்தலின் போது இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தருவதாக திமுகவினர் வாக்குறுதி அளித்த நிலையில் பல மாதங்கள் கடந்தும் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகமோ அல்லது மாவட்ட சுகாதாரத்துறையே எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், பெட்ரோல் நிலையம் அருகே பட்டாசு கடைகள் நடத்த அனுமதியில்லை.
- பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படை பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே பட்டாசுக்கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி பேசியதாவது:-
அரசு அனுமதி பெற்று பட்டாசு கடைகள் நடத்தினாலும் அங்கு எந்த காரணத்தை முன்னிட்டும் வேறு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் பட்டாசு கடைகள் நடத்த கூடாது.
கியாஸ் சிலிண்டர் கிடங்குகள், பெட்ரோல் நிலையம் அருகே பட்டாசு கடைகள் நடத்த அனுமதியில்லை. பட்டாசு கடைகளில் புகைப்பிடிக்க கூடாது என்று எழுதப்பட்ட வாசகம் அவசியம் இருக்க வேண்டும். பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படை பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பட்டாசுக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.சம்பத், செயலாளர் துளசிநாதன், பொருளாளர் நரேந்திரன் உள்பட பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- 12 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியதில், மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த 12 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் (வயது 25), சந்தியா (21), ஜீவானந்தம் (50), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (13), சண்முகப்பிரியன் (17), கோகுல் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (23), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (11) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூஜா (வயது 11) என்ற சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், கியாஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
- 157-வது வார்டில் குடிநீர் வாரியம் சார்பில் நடந்த பணியால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலை யிலே உள்ளன.
- ஆலந்தூர் பகுதி, நேரு நெடுஞ்சாலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலந்தூர்:
ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் பேசும்போது, 165-வது வார்டில் புதிதாக சேர்க்கப்பட்ட 7 தெருக்கள் இன்னும் என்னுடைய வார்டில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து நடந்து முடிந்த 6 மண்டல கூட்டத்திலும் பேசிவிட்டேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் உஷா கூறும்போது, 157-வது வார்டில் குடிநீர் வாரியம் சார்பில் நடந்த பணியால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலை யிலே உள்ளன. இதனால் ஆய்வுக்கு செல்லும்போது 2 முறை வழுக்கி விழுந்து விட்டேன் என்றார்.
இதுகுறித்து கேள்வி நேரத்தின் போது மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தான் இதற்கு காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பாக இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆலந்தூர் பகுதி, நேரு நெடுஞ்சாலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
- வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது
- ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரையில் வாலாஜாபாத், புத்தகரம், ஊத்துக்காடு, நத்தாநல்லூர், தேவரியம்பாக்கம், வாரணவாசி, தென்னேரி, கட்டவாக்கம், புளியம்பாக்கம், சங்கராபுரம், தொள்ளாழி, களியனூர், தம்மனூர், அவளுர், அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், வரதராஜபுரம், வெங்குடி, பூசிவாக்கம், ஒட்டிவாக்கம், தாங்கி, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை மற்றும் அவைகளை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும்.
இந்த தகவலை செயற்பொறியாளர் பிரசாந் தெரிவித்து உள்ளார்.
- காஞ்சிபுரம் சந்தையில் அதிகமாக பூ வியாபாரம் நடைபெறுவது வழக்கம்.
- சாமந்திப்பூ மட்டும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து வருகின்றன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனை தவிர்த்தால் வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் அல்லது வேலூர் பூ மார்க்கெட்டுக்கு தான் செல்ல வேண்டும்.
இதனால் காஞ்சிபுரம் சந்தையில் அதிகமாக பூ வியாபாரம் நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும் ஓசூர் பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இதேபோல் மல்லி, முல்லை ஆகிய பூக்கள் காஞ்சிபுரம் அருகே புரிசை, சந்தவேலுர், பிச்சிவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வர வைக்கப்ப டுகிறது. சாமந்திப்பூ மட்டும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து வருகின்றன.
கடந்த வாரம் ஆயுத பூஜை தினத்தன்று 1500 வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ விலை தற்போது சரிந்து ரூ.200-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ரூ.250-க்கு விற்ற சம்பங்கி பூ இன்று ரூ.20-க்கும், ரூ.400-க்கு விற்பனை செய்த சாமந்தி பூ விலை இன்று ரூ.50-க்கும் விற்கப்படுகிறது. திருமணம் மற்றும் முக்கிய விசேஷ நிகழ்ச்சிகள் இல்லாததால் தற்போது பூக்களின் விலை சரிந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






