search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடோன் உரிமையாளரின் 3-வது மகளும் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
    X

    குடோன் உரிமையாளரின் 3-வது மகளும் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

    • சிலிண்டர் விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் அவரது 3 மகள்களும் பலியாகி விட்டனர்.
    • சிலிண்டர்கள் வெடித்த நாள் அன்று ஜீவானந்தத்தின் மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்று இருந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள தேவேரியம்பாக்கத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் இருந்தது. இதனை அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் நடத்தி வந்தார்.

    இதில் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள்கள் நிவேதிதா (வயது24), சந்தியா, பூஜா மற்றும் ஊழியர்கள் உள்பட 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் அவரது மகள்கள் பூஜா, சந்தியா உள்பட 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    ஜீவானந்தத்தின் மூத்த மகள் நிவேதிதாவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை நிவேதிதாவும் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலியான நிவேதிதா சென்னையில் உள்ள கல்லூரியில் பி.எச்.டி. படித்து வந்தார். இதேபோல் இறந்த அவரது சகோதரிகள் பூஜாவும், முதுநிலை படிப்பும், சந்தியா இளநிலை பட்டப்படிப்பும் படித்து வந்துள்ளனர்.

    சிலிண்டர் விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் அவரது 3 மகள்களும் பலியாகி விட்டனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிலிண்டர்கள் வெடித்த நாள் அன்று ஜீவானந்தத்தின் மனைவி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியில் சென்று இருந்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.

    மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கும்பகோணத்தை சேர்ந்த ஊழியரான சக்திவேல் என்பவர் மட்டும் உயிர் தப்பினார். அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.

    Next Story
    ×