என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக பரங்கிமலை பகுதியில் 158 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பல்லாவரத்தில் 135 பேரும், காட்டாங்குளத்தூரில் 79 பேரும், திருப்போரூரில் 74 பேரும், பெருங்களத்தூரில் 41 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தாம்பரத்தில் 72 பேரும், பம்மலில் 43 பேரும், கன்டோன்மென்ட்டில் 34 பேரும், மறைமலை நகரில் 25 பேரும், மதுராந்தகத்தில் 21 பேரும், செம்பாக்கத்தில் 25 பேரும், கூடுவாஞ்சேரியில் 24 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த தென்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகநாதன் (வயது 26). இவர் நாகமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இவர் நேற்று காலை பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகமலையிலிருந்து ஓணம்பாக்கம் கல்குவாரிக்கு சென்ற லாரி, லோகநாதன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர், அவர்கள் ஆத்திரமடைந்து கல்குவாரியை மூடக்கோரி சித்தாமூர் செய்யூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரியும், லாரி உரிமையாளர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் செய்யூரில் இதே கல்குவாரிக்கு சொந்தமான லாரி மோதி ஒரு பெண் பலியான நிலையில், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.






