என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் தொடர் குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க செங்கல்பட்டு டவுன் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போலீசார் பச்சையம்மன் கோவில் மலையடிவாரத்தில் பகுதிக்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் 3 பேர் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைத்த போலீசார் தப்பி ஓடியவர்களை விரட்டி சென்றனர். அதில் 2 பேர் பிடிப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 19) என்பதும் மற்றொருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் (19) என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர் தப்பி ஓடிய நரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
    உத்திரமேரூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி அருகே உத்திரமேரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் விசாரித்தபோது அவர் உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி கிராமத்தை சேர்ந்த சீதாபதி(வயது 30) என்பது தெரியவந்தது. மணல் கடத்தியதை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.
    திருக்கழுக்குன்றம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 18-ந் தேதி திடீரென மாயமானார். திருக்கழுக்குன்றம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது கருமாரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான குமரேசன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். குமரேசனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை கத்தியால் வெட்டி விட்டு செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 26), டிரைவரான இவர் நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி அருகே சாலை ஓரமாக செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் விட்டுவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுந்தரமூர்த்தி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கல்பாக்கம் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் மார்க்கெட் வீதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நகைகடை உள்ளது. நேற்று மாலை அவர் கடையில் இல்லாத நேரத்தில் 3 பெண்கள் திருமணத்திற்கு நகை வாங்குவது போல் வந்தனர். அவர்களுக்கு நகைகளை கடையில் இருந்த ஊழியர்கள் காண்பித்தனர். சிறிது நேரம் நகையை பார்த்து விட்டு 3 பெண்களும் பில் போட்டு வைக்குமாறு கூறி வெளியே சென்று விட்டனர்.

    ஊழியர்கள் நகைகளை சரிபார்த்த போது ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானது தெரியவந்தது. அதனை நகை வாங்குவது போல் கடைக்கு வந்த 3 பெண்களும் கொள்ளை அடித்துச்சென்று இருப்பது தெரிந்தது.

    இது குறித்து கல்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மார்கெட் பகுதி மற்றும் நகைக்கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து 3 பெண்களையும் தேடி வருகின்றனர்.

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் வருகிற 2-ந் தேதி பதவியேற்கிறார்கள். அதன்பிறகு 4-ந் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடத்தப்படும்.

    இந்த பதவிகளை கைப்பற்ற பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக காய்களையும் நகர்த்தி வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சீபுரம் மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர், மண்டல குழு தலைவர் பதவிகளை கைப்பற்றவும் அக்கட்சியில் முக்கிய பிரமுகர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கட்சி தலைமை இந்த பதவிகளுக்கான வேட்பாளர்களை முன்கூட்டியே முடிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு கட்சி தலைமையால் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கவுன்சிலர்கள் மற்ற கவுன்சிலர்களை உற்சாகப்படுத்த அவர்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்து விருந்து கொடுத்து வருகிறார்கள்.

    சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டுகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்த நகர்ப்புற வார்டு கவுன்சிலர்கள் பலரை தங்க வைத்து இருப்பதாகவும், அவர்களிடம் ஆதரவு பெற கட்சி பிரமுகர்கள் ஆலோசனை நடத்தி பேரம்பேசி கேளிக்கை, மது விருந்து என குஷிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    நேற்று இரவு கட்சி கொடிகளுடன், பல வெளி மாவட்ட சிறப்பு பதிவு எண் கொண்டகார்கள் பல மாமல்லபுரம் நகரப்பகுதிகளுக்குள் சுற்றியது.

    உளவுத்துறை போலீசார் கோவளம், மாமல்லபுரம், கூவத்தூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய ரிசார்ட்டுகள் மற்றும் ஓட்டல்களை ரோந்து போலீசார் உதவியுடன் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
    பல்லாவரம் அருகே ஆவின் பால் பூத் கடையை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பம்மலில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் பிரதான சாலையில் நான்கு ஆவின் பால் பூத்துகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அதன் உரிமையாளர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மீண்டும் நேற்று காலையில் கடையை திறக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    கடையின் பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த பணம் ஐம்பதாயிரம் திருடு போய் இருந்தது தெரிய வந்தது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, மூன்று மர்மநபர்கள் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது.

    இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாமண்டூர் பாலாற்று பழைய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. மற்றொரு பாலத்தில் சீரமைப்பு பணி ஆரம்பித்துள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றம்பள்ளி - மாமண்டூர் இடையில் 633 மீட்டர் தூர பாலம் உள்ளது. இந்த பாலமானது சென்னை - திருச்சி, திருச்சி-சென்னை என இரு மார்க்கத்தின் வழியாக செல்லும் பாலமாக அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது பழுதடைந்தது. முதல் கட்டமாக சென்னை திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய சாலை பாலம் சீரமைப்பு பணிகள் கடந்த 7-ந்தேதி தொடங்கி முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து பழைய பாலாறு பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    மேலும் அதன் அருகே உள்ள மற்றொரு பாலம் சீரமைக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளது. அதேசமயம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன டிரைவர்கள் திண்டிவனத்துக்கு 10 கி.மீ. முன்னதாகவே கூட்டேரிப்பட்டு, வெள்ளிமேடு பேட்டை, வந்தவாசி, காஞ்சிபுரம், செவிலிமேடு, வாலாஜாபாத், தாம்பரம் வழியாக சென்னை செல்லலாம்.

    2-வது வழித்தடமாக படாளம் மற்றும் புக்கத்துறை கூட்ரோட்டிலிருந்து பழையசீவரம், காஞ்சிபுரம் செங்கல்பட்டு இணைப்பு சாலை வழியாக சென்னை செல்லலாம்.

    அல்லது கருங்குழி வழியாக திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம் வழியாக சென்னை செல்லவும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    3-வது வழித்தடமாக மெய்யூர், பிலாப்பூர், பழத்தோட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இணைப்பு சாலை வழியாக தாம்பரம் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11¼ பவுன் தங்க நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பேரமனூர் பேங்க் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42), இவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11¼ பவுன் தங்க நகை திருட்டு்போனது தெரியவந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
    கூவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி வங்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 29). தனியார் வங்கியில் வாகன கடன் வழங்கும் பிரிவில் ஊழியராக பணி செய்து வந்தார்.

    இவர் இரவு வங்கி வேலை சம்பந்தமாக நண்பர்களுடன் காரில் பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கூவத்தூர் அடுத்த சீக்கினாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாபு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பராமரிப்பு பணி நடைபெற்ற மேம்பாலத்தில் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது. நேற்று மாலை சீரமைப்பு பணி நடந்த பாலத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகே பாலாற்றின் மீது இரண்டு மேம்பாலங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த பாலங்கள் சேதம் அடைந்தன.

    மேலும் பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் மேம்பாலத்தில் முதல் கட்டமாக கடந்த 7-ந் தேதி முதல் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

    இதையடுத்து சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அருகே உள்ள மற்றொரு பாலத்தின் வழியாக திருப்பிவிடப்பட்டது. ஏற்கனவே அந்த பாலத்தின் வழியாக இயக்கப் பட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மாமண்டூர் அருகே மெய்யூர் வழியாக திருப்பி விடப்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றி வந்தன.

    பிலாப்பூர், காவூர், காவிய தண்டலம், ஒரக்காட்டு பேட்டை மேம்பாலம் வழியாக பழத்தோட்டம் சென்று காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையை அடைந்து சென்னை நகருக்கு போக்குவரத்து இயக்கப்படுகின்றன.

    பஸ், கார் மற்றும் பொதுவாகனங்கள் செல்ல ஒரு வழியும், கனரக வாகனங்கள் செல்ல மற்றொரு வழியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக வரும் அனைத்து கனரக வாகனங்களும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள புக்கத்துறை அருகே இடதுபுறமாக திரும்பி நெல்வாய்கூட்டுச்சாலை, வளத்தோடு, ஆலஞ்சேரி, குன்னவாக்கம், மதூர், அருங்குன்றம், திரும்புக்கூடல் மேம்பாலம் வழியாக பழசீவரம் அருகே காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் இணைகிறது.

    நெல்வாய்கூட்டுச் சாலையில் தொடங்கி பழையசீவரம் வரையிலான சாலைகள் குறுகியது என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பராமரிப்பு பணி நடைபெற்ற மேம்பாலத்தில் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது. நேற்று மாலை சீரமைப்பு பணி நடந்த பாலத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    இன்று மாலை அந்த பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்து போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியாக சென்னை - திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.

    எனினும் அருகே உள்ள 2-வது பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கப்பட இருக்கிறது. எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சென்னை மார்க்கமாக வரும் வாகனங்கள் பழைய முறையிலேயேவரும்.

    2-வது பாலம் பராமரிப்பு பணி மார்ச் 20-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. இதன் பின்னரே 2-வது பாலத்திலும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இதன் பிறகு தான் போக்குவரத்து சீராகும்.
    தி.மு.க.வில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கிய கிரிஜா சந்திரன் என்பவர் 39-வது வார்டில் சுயேட்சையாக வெற்றிபெற்றுள்ளார்.


    தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் 70 வார்டுகளில் அ.தி.மு.க. 8 இடங்களில் தான் வெற்றிபெற்றது. இந்த கட்சியில் வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    தாம்பரம் 10-வது வார்டு பம்மலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு என்கிற வெங்கடேசன் பம்மல் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர். அனைவராலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க் கப்பட்ட இவர் 1000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    இதேபோல் அனகாபுத்தூர் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்த அனகாபுத்தூர் வேலாயுதம் என்பவரும் தோல்வி அடைந்தார்.

    தாம்பரத்தில் முன்னாள் துணைத்தலைவர் கோபியும் தோல்வி அடைந்துவிட்டார். பீர்க்கங்கரணை பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத் குமாரும் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    40-வது வார்டு அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சாந்தகுமார், செம்பாக்கம் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் இவரும் தோல்வி அடைந்துவிட்டார். சிட்லபாக்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரான மோகன் என்பவரும் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

    பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி தனம் 13-வது வார்டிலும், அவரது மகன் ஜெயபிரகாஷ் 22-வது வார்டிலும் போட்டியிட்டனர். இருவருமே தோல்வி அடைந்துவிட்டனர். ஜெயபிரகாஷ் பல்லாவரம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். இவர்களது தோல்வி அ.தி.மு.க.வில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    தாம்பரம் மாநகராட்சி பீர்க்கங்கரணை வார்டு 59-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் கங்காதேவி. இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வகித்தார். இவர் அப்பகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் தேர்தலுக்கு முன்பு தனக்கு சீட் கிடைக்காது என தெரிந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து போட்டியிட்டார். ஆனாலும் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

    தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் அண்ணன் ஜோசப் அண்ணாதுரை 17-வது வார்டில் போட்டியிட்டு 3,731 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இதேபோல் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜ், 49-வது வார்டில் போட்டியிட்டு 2,759 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

    ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் மைத்துனர் காமராஜ் 30-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் அவரது உறவினர் ரமாதேவி என்பவரும் வெற்றிபெற்றுள்ளார்.

    தி.மு.க.வில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கிய கிரிஜா சந்திரன் என்பவர் 39-வது வார்டில் சுயேட்சையாக வெற்றிபெற்றுள்ளார். இதேபோல் இவரது மகன் ஜெயபிரதிப் சங்கரன் 40-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

    தி.மு.க.வில் சீட் கிடைக்காத தாய்-மகன் இருவரும் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பல்லாவரத்தில் 20-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துக்குமார் என்பவர் போட்டியிட்டார். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இவர் 165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

    ×