search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவர் மதுகுடித்து விட்டு தகராறு - 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
    X

    கணவர் மதுகுடித்து விட்டு தகராறு - 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

    கணவர் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி தனது 4 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தானும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காட்டு கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 37) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி(28). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு நிதிஷ் குமார்(8),நிஷாந்த்(7), என்ற மகன்களும், ஸ்ரீமதி(3), ஸ்ரீநிதி(3) என்ற மகள்களும் உள்ளனர்.

    கனகராஜிக்கு மது குடிக்கம் பழக்கம் உள்ளது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ள தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    கனகராஜ் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரின் மனைவி செல்வராணி தனது குழந்தைகளை வளர்க்க முடியாமல் பெரிதும் அவதிபட்டு வந்தார்.

    இந்த நிலையில் கனகராஜ் நேற்று இரவும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அவரது மனைவி செல்வராணி எதற்காக இப்படி தினமும் மது குடிக்கிறீர்கள் என கணவரிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி செல்வராணியை சரமாரியாக தாக்கினார்.

    இதை பார்த்த அவர்களின் குழந்தைகள் கனகராஜை தடுக்க முயன்றனர். குடிபோதையில் இருந்த கனகராஜ் குழந்தைகளையும் தாக்கினார். சிறிது நேரத்தில் கனகராஜ் தூங்க சென்றுவிட்டார். செல்வராணியும் அவரது குழந்தைகளும் இரவில் நீண்ட நேரம் தூங்காமல் அழுது கொண்டிருந்தனர்.

    கணவர் தினமும் மதுகுடித்து விட்டு தகராறு செய்வதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வராணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    குடிகார கணவரிடம் தனது குழந்தைகளை விட்டு செல்ல மனமில்லாத செல்வராணி அவரது குழந்தைகள் 4 பேருக்கும் முதலில் வி‌ஷம் கொடுத்தார். பின்னர் அவரும் வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    இன்று அதிகாலை செல்வராணியின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்திருந்தார். அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது செல்வராணியும் அவரது குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வராணி மற்றும் அவரது குழந்தைகள் நிதிஷ் குமார், நிஷாந்த், ஸ்ரீமதி, ஸ்ரீநிதி ஆகிய 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் தலைமையில் கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×