search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார்: நடராஜன் பேட்டி
    X

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார்: நடராஜன் பேட்டி

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டால் சசிகலா மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் என நடராஜன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    எழுத்தாளரும், சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்று கூறி இருக்கிறார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு தொடர்ந்து தர்மயுத்தம் நடத்துவோம் என்று கூறி வருகிறார். ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று சொல்லப் போகிறீர்களா?

    பதில்:- இப்போதும் கூட ஜெயலலிதா இறந்து விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட தலைவி இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதே சமயத்தில் அவருடைய உடல் நிலையை அவர் கவனித்துக் கொள்ள மறுத்து விட்டார்.

    கே:- ஜெயலலிதாவுக்கு எல்லா விதத்திலும் உடன் இருந்தவர் சசிகலா. அப்படியானால் ஜெயலலிதா உடல் நலத்தை கவனிக்காமல் இருந்து விட்டார் என்றால் அதில் சசிகலாவுக்கு பங்கு இல்லையா?

    ப:- 24 மணி நேரத்தில் அரசாங்கத்துக்காக 20 மணி நேரம் உழைத்தார். அவருக்கு 5 செயலாளர்கள் இருந்தார்கள். நாம் தூரத்தில் இருக்கிறோம். அவருக்கு என்ன ஆகி இருக்கிறது என்பது தெரியாது. தலைமைச் செயலகம் வருகிறார். அமைச்சர்களுடன் இருக்கிறார். அப்போது அவர்களில் யாராவது ஒருவர் அம்மா உங்கள் உடல் ஒரு மாதிரி இருக்கிறது, ஆஸ்பத்திரியில் போய் பார்ப்போம் என்று ஒருவரும் சொன்னதில்லை. இவ்வளவு அதிகாரிகள், மந்திரிகள் இருந்தும் யாரும் சொல்லவில்லை.

    கே:- ஜெயலலிதாவுடன் நிழலாக இருந்தவர் சசிகலா, அவர்தான் அக்கறை செலுத்த வேண்டும்.

    ப:- எப்படி அக்கறை செலுத்த முடியும். ஜெயலலிதா முதல்- அமைச்சர். அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்த நிற்க கூட முடியாமல் முன்னுக்கு தள்ளப்படுகிறார். தலைமைச் செயலகத்தில் படிக்கட்டில் வரும்போது கைவைத்து ஏறும்போது தடுமாறிய போது அவர் அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கைகொடுத்து உதவுகிறார். இதெல்லாம் உடல்நிலை சரியில்லை என்பதற்கான அறிகுறி.

    கே:- இது நாம் டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டது. இது எல்லாவற்றையும் விட சசிகலா உடன் இருக்கிறார். உடல்நலம் குறைகிறது என்றால் சசிகலாவுக்கு அல்லவா தெரிந்து இருக்க வேண்டும்? ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் முன்பு மயக்க நிலையை அடைந்து சர்க்கரை அளவு உச்சக் கட்டத்தை அடைந்து இருப்பது மற்றவர்களை விட சசிகலாவுக்குதானே அதிகம் தெரிந்து இருக்க வேண்டும்?


    ப:- நோயாளி முதலில் ஒத்துழைக்க வேண்டும். அவர் நோயாளிதான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சசிகலா சொல்வதை எப்போதும் ஜெயலலிதா கேட்பார் என்று சொல்ல முடியாது. ஏன் சசிகலாவை சில காலம் வெளியில் அனுப்பினார். எல்லாவற்றிலும் அவர்களுக்கிடையே முரண்பாடு உள்ளது.

    கே:- ஜெயலலிதா உடல் நிலை இந்த அளவுக்கு ஏற்பட்டதை சசிகலாவால் தடுத்து இருக்க முடியாதா?

    ப:- சசிகலா அக்கறை காட்டினாரா? காட்டவில்லையா? என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். வேண்டுமானால் ஜெயிலில் பேட்டி வாங்கி தருகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் விளக்கம் கிடைக்கும்.

    சசிகலா சுயசரிதை எழுதிக் கொண்டு இருக்கிறார். அதில் எல்லாம் தெரியவரும். ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் முன்பு படுக்கையில் லேசாக சாய்வதுபோல் இருந்திருக்கிறது. அப்போது அவரது தனி பாதுகாப்பு அதிகாரி உடன் இருந்திருக்கிறார். அந்த அதிகாரிகளை கேட்டாலே உண்மையை சொல்வார்களே ஏன் அவர்கள் உண்மையை சொல்ல மறுக்கிறார்கள்.

    எல்லாவற்றையும் விட பிரதமர் மோடி இதுபற்றி அறிந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதில் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பல்லோ நிர்வாகமும், எய்ம்ஸ் டாக்டர்களும், பிரதமரிடம் நேரடியாக அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.

    அதில் மர்மம் எதுவும் இல்லை. லண்டனில் இருந்து வந்த டாக்டர் யாருக்கும் பயப்பட மாட் டார். அவர் ஒருபோதும் ஜெயலலிதா நன்றாக இல்லை, அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று சொல்லவில்லையே, அவர் திருப்தி தெரிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. சொந்த மாவட்டத்திலேயே அவர் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. சொந்த மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவருடன் இல்லை.

    ஒரு குடும்பத்தில் சொந்த தாய் குடும்ப பிரச்சனையால் திடீர் என்று இறந்து போய் இருப்பார். உணர்ச்சி மேலிட்டு தாயை கொன்று விட்டான் என்று மகன் மீது குற்றம் சாட்டுவார்கள். அது உண்மையல்ல. அதுபோல் இது ஒரு அரசியல் ரீதியான குற்றச்சாட்டு.

    பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக இருந்தபோது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு கையெழுத்து போட்டு இருக்கலாமே. இப்போதும் சி.பி.ஐ. விசாரிக்கட்டும். யாரும் கவலைப்படவில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்களிடையே வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார். அவர் என்ன நீதி கேட்கிறார்? எதுக்கு நீதி கேட்கிறார்? நாட்டுக்கு சொல்வாரா? தேர்தலுக்கு முன்பு அவர் 5 நாள் வீட்டுக் காவலில் இருந்ததாக சொல்கிறார்களே, ஏன் இருந்தார் என்று சொல்வாரா? ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பில் இருந்தாரே? இப்போது பன்னீர்செல்வம் பொய் சொல்கிறார்.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது சசிகலா நிர்வாகப் பகுதிக்கு போனதில்லை. தனக்கு உட்பட்ட வளையத்துக்குள் தான் சசிகலா செயல்பட்டார்.

    கே:- இரட்டை இலை சின்னம் 2-வது முறையாக முடக்கி விடப்பட்டுள்ளதே?

    ப:- சசிகலா தலைமையிலான அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். தேர்தல் கமி‌ஷனில் இருதரப்பினர் கொடுத்துள்ள பிரமாண பத்திரத்தை நான் பார்த்தேன். அந்த அடிப்படையில் கிடைக்கும்.

    பொதுச்செயலாளரை ஒரு கட்சி எப்படி தேர்வு செய்கிறது என்பதை கண்காணிப்பது தேர்தல் கமி‌ஷனின் வேலையே அல்ல. தகவல் மட்டுமே பரிமாறிக் கொள்ள வேண்டும். தேர்தல் கமி‌ஷன் முடிவை எடுத்து சுப்ரீம் கோர்ட்டு சென்று இருக்க வேண்டும்.

    இரட்டை இலை சின்னம் கிடையாது என்றோ, பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது என்றோ தேர்தல் கமி‌ஷன் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒருவேளை அது போன்று உத்தரவு வந்தால் சசிகலா மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார்.

    முதல்-அமைச்சராக செயல்படும் எடப்பாடி பழனிசாமி மீது பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா நம்பிக்கை வைத்து இருக்கிறார்.

    இவ்வாறு நடராஜன் கூறினார்.
    Next Story
    ×