என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #NEET #DMK #MKStalin
    சென்னை:

    நீட் தேர்வால் பலியான மாணவி பிரதீபா குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நேற்று வெளியான நீட் தேர்வு முடிவை பார்த்ததும் விழுப்புரம் மாவட்டம் பெரவள்ளூர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகள் பிரதீபா தற்கொலை செய்துள்ளார். தனது நீண்ட நாள் கனவான டாக்டர்ஆக வேண்டும் என்ற லட்சியம் பொய்த்து போகும் நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார்.

    அதே விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடியபடி உள்ளார்.

    சென்ற ஆண்டு நீட் தேர்வால் அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழில் எழுதிய பிரதீபாவை இழந்துள்ளோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.

    நீட் நுழைவுத்தேர்வு குறித்து நமது உணர்வுகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுதியதை தவறாக மொழி பெயர்த்ததால் மதிப்பெண்கள் குறைந்து பாதிக்கப்பட்டதாக பிரதீபா கடிதம் எழுதியுள்ளார்.

    தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா

    நீட் தேர்வு கொடுக்கும் மன அழுத்தத்தால் அவர் இறந்துள்ளார். இந்த தேர்வு தென் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. மிக குறைந்த எண்ணிக்கையில் தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    வடமாநில மாணவர்கள் தான் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களில் தமிழகத்தின் கீர்த்தனா 12-வது இடத்தில் உள்ளார்.

    தமிழக மாணவர்களின் 2 ஆண்டு டாக்டர் கனவு சின்னாபின்னமாகி சிதைந்து போய் உள்ளது. ஏழை-எளிய மாணவர்கள், கிராமப்பகுதி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கேட்டு அனைவரும் ஒருமனதாக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினோம்.

    அந்த மசோதாக்கள் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதை தட்டி கேட்க நாதி இல்லாததால் அந்த மசோதா அதோ கதியாக உள்ளது.

    இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற தமிழக அரசு என்ன செய்தது என்பதை முதல்- அமைச்சரும் தெரிவிக்க வேண்டும்.

    அந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும்.

    இதே போல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி நீட்டை எதிர்த்து பேசினார். #NEET #DMK #MKStalin
    Next Story
    ×