search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்? எந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது நல்லது? என்பது குறித்து அறிந்த கொள்ளலாம்.
    பிறப்புறுப்பை சுத்தம் செய்யும்போது, பிறப்புறுப்புக்குள் விரலைவிட்டு சுத்தப்படுத்துவது தவறானது. ஏனெனில் பிறப்புறுப்புக்குள் எந்த திரவமும், அல்லது திடப் பொருளாக அழுக்கும் சென்று சேர்வதில்லை. விரல்களை உள்ளே விட்டு சுத்தம் செய்வதால் தேவையற்ற தொற்று ஏற்படலாம். பிறப்புறுப்பின் பக்கவாட்டு பகுதி, அதாவது உதடு போன்ற பகுதியை மட்டுமே சுத்தம்செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும், சிலருக்கு சோப்பு பயன்படுத்துவது அரிப்பு ஏற்படுத்தலாம் என்பதால், மிதமாக சூடு செய்யப்பட்ட நீரையே பயன்படுத்தி பிறப்புறுப்பைச் சுத்தப்படுத்தலாம்.

    மேலும், மிதமான, அதிக வேதிப்பொருட்கள் அற்ற சோப்பைப் பயன்படுத்தலாம். அல்லது மிதமான Intimate Wash பயன்படுத்தலாம். ஆனால் அதில் எந்த நறுமணமும், அல்லது க்ளிட்டர் போன்ற தயாரிப்புகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில்,  நறுமணமூட்டப்பட்ட வாஷ்கள் நிச்சயம் அரிப்பை ஏற்படுத்தும்என்கின்றனர் நிபுணர்கள்.

    நம் சருமத்தில் எங்கெல்லாம் சூரிய ஒளிபடவில்லையோ, அங்கெல்லாம் ஈரம், வியர்வை ஆகியவை தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால், அந்தப் பகுதிகளில் கிருமித்தொற்று வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பிறப்புறுப்பில் இப்படி நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், பிரைவேட் பார்ட்ஸை தினமும் இருமுறை மட்டும் சோப்பு, வஜைனல் வாஷ் என்று பயன்படுத்தி சுத்தமாக வைத்திருங்கள்.

    மேலும், பிறப்புறுப்பை சுத்தம்செய்யும்போது, மேலிருந்து கீழாக, (அதாவது இடுப்புப் பகுதியில் இருந்து கீழ்நோக்கி சுத்தம் செய்ய வேண்டும்) கீழிருந்து மேல்பக்கமாக சுத்தம் செய்தால், பின்புறத்தில் இருக்கும் அழுக்கின் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர்.

    பிறப்புறுப்பில் அரிப்பு இருக்கிறது என்றால், வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தை ஐந்தாறு முறை வாஷ் செய்துபாருங்கள். சரியாகவில்லையென்றால், உடனே மருத்துவரைப் பார்த்து விடுங்கள். பிறப்புறுப்பின் சுத்தம் தான் உங்களை கருப்பை வாய்ப்புற்றுநோயில் இருந்து காப்பாற்றும் என்பதில் கவனம் தேவை.

    மேலும், மாதவிடாய் நிகழ்ந்துகொண்டிருக்கிற வயதில், வறட்சி, அரிப்புடன்கூட புண்களும் வருகிறது என்றால், பிறப்புறுப்பில் ஏதாவது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. அது பரவுவதற்குள், உடனே ஒரு மகப்பேறு மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது.
    கர்ப்ப காலத்தில் முட்டை, நிலக்கடலை, மீன் போன்றவற்றை சாப்பிடுவதால், பிறக்க போகும் உங்களது குழந்தைக்கு எந்த விதமான உணவு அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும்.
    சைவம் சாப்பிடுபவர்களே அதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது. முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான உணவாக மாற்றுகிறது. குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் ஏன் எல்லோரிடமும் கூட ஊட்டச்சத்துக் குறைவால் சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு.

    முட்டை சாப்பிடுவது, சிசுவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. எதிர்காலத்தில் பல நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

    ஆய்வில் கர்ப்ப காலத்தில் இயல்பாகவே தாய்மார்கள் அதிக டென்ஷனுடன் இருப்பார்கள். ஒருவித மன அழுத்தம், இறுக்கம், குழந்தை நல்லபடியாக பிறக்குமா என்ற பயத்துடன் காணப்படுவார்கள். அதிகப்படியான பயம், மன அழுத்தம் ஆகியவை தாய்க்கு மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும். மேலும், கர்ப்ப காலத்தின்போது, கார்டிசால் சுரப்பு குறைந்தால் தொப்புள்கொடி பாதிக்கப்படும். அதனால் சிசுவுக்கு முறையாக சத்துகள் கிடைக்காது. முட்டை அதிகம் சாப்பிடுவதால், கார்டிசால் சுரப்பு சீராகிறது. இதனால், பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலைன் முக்கிய பங்காற்றுகிறது. சிசுவின் நியூரோ எண்டோகிரைன் சுரப்பு சீராகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

    இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் சிறப்பாக இருக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் 125 மி.கி. அளவுக்கு கோலைன் பொருள் உள்ளது. இதுதவிர புரதம், இரும்புசத்து, ஃபோலேட் உள்ளிட்ட பல சத்துகள் முட்டையில் உள்ளதால், கர்ப்பிணிகள் நிறைய சாப்பிடலாம்.

    சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவில் உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
    கர்ப்ப காலத்தில் கடல் உணவை சாப்பிட்ட தாய்மார்கள், சாப்பிடாத தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.
    கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். அது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நேரடியாக வலு சேர்க்கிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பல இருக்கின்றன. அந்த பட்டியலில் புதிதாக கடல் உணவுகளையும் இணைத்திருக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ‘பார்சிலோனா இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் கர்ப்ப காலத்தில் கடல் உணவு உட்கொள்வதற்கும், குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் மிருதுவான, கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்கள். அப்படி சாப்பிடுவது குழந்தைகளின் அறிவாற்றலையும், ஆழ்ந்து கவனிக்கும் திறனையும் மேம்படுத்த வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பணுக்கள் உருவாக்கம் கர்ப்ப காலத்தில் தொடங்குகிறது. அவற்றின் செயல்பாட்டிற்கு ஒமேகா - 3, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் உணவுகள் மூலம் இந்த வகையான ஊட்டச்சத்துக்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.

    இந்த ஆய்வுக்கு 1644 தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். கர்ப்ப காலத்தில் கடல் உணவை சாப்பிட்ட தாய்மார்கள், சாப்பிடாத தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள் பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் கடல் உணவுகளை சாப்பிடாத தாய்மார்களின் குழந்தைகள் பின்தங்கி இருக்கிறார்கள். அதேவேளையில் எல்லா வகையான கடல் உணவுகளையும் சாப்பிடக்கூடாது. டாக்டரிடம் ஆலோசித்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
    ‘‘பாதுகாப்பற்ற கருக்கலைப்பு தாய் மற்றும் சேய் இறப்புக்கும் வழிவகுத்துவிடும். நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும். இவை தவிர்க்கப்பட வேண்டியவை’’ என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
    ‘ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம்’ என்ற அமைப்பு உலக அளவில் நடைபெறும் திட்டமிடப்படாத கருக்கலைப்பு பற்றிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, 12 கோடி கருக்கலைப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தினமும் சராசரியாக 3 லட்சத்து 31 ஆயிரம் கருக்கலைப்புகள் நிகழ்கின்றன. இந்தியாவில் 67 சதவீதம் கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கருக்கலைப்பு தொடர்பான சிக்கல்களால் ஒவ்வொரு நாளும் 8 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.

    கருத்தடை முறைகளை பயன்படுத்தாத காரணத்தாலோ, வலுக்கட்டாயமான கற்பழிப்பு காரணமாகவோ இது நிகழலாம். திட்டமிடாத கருக்கலைப்பை பொறுத்தவரை 7 கருக்கலைப்புகளில் ஒரு கருக்கலைப்பு இந்தியாவில் நடக்கிறது.

    ‘‘திட்டமிடாத கர்ப்பம் பாலின பாகுபாட்டின் காரணமாகவும் நிகழ்கிறது. நவீன கருத்தடை முறைகள், கருத்தடை சாதனங்கள் இருந்தும் அதனை கையாளுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. உலகளவில், கர்ப்பத்தை தவிர்க்க விரும்பும் பெண்களில் 25 கோடி பேர் கருத்தடை சாதனங்களை பயன் படுத்துவதில்லை’’ என்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    ‘‘பாதுகாப்பற்ற கருக்கலைப்பு தாய் மற்றும் சேய் இறப்புக்கும் வழிவகுத்துவிடும். நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும். இவை தவிர்க்கப்பட வேண்டியவை’’ என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக திட்டமிடாத கர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக 1 கோடியே 56 லட்சம் கருக்கலைப்புகள் ஆபத்தான நிலையில் செய்யப்பட்டுள்ளன என்றும் புள்ளி விவரம் கூறுகிறது. 2018-ம் ஆண்டில், இந்தியாவில் கருக்கலைப்பு தொடர்பான பாதிப்புக்கு ஆளாகி 13 பெண்கள் இறந்தனர்.

    கொரோனா தொற்று காரணமாக இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தது. கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருந்த போதிலும் அது பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாத நிலையே நீடிக்கிறது. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக தாய்-சேய் உயிரிழக்கும் அவலமும் நிகழ்கிறது.

    பாலியல் கல்வி பற்றிய புரிதலும் இல்லாத நிலை இருக்கிறது. குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப் புணர்வை கூட சுகாதார பணியாளர்கள் கிராமப் புறங்களில் மேற்கொள்வதற்கு இயலாத நிலை இருக்கிறது. பாலியல் கல்வி, குடும்ப கட்டுப்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுகாதார பணியாளர்கள் தாக்கப்படும் சூழலும் நிலவுகிறது.
    கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.
    கர்ப்பத்திற்கு முன்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கத் தொடங்கும். அதன் காரணமாக வழக்கத்தை விட சற்று அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆனால் அதன் அளவு அதிகமாகிக் கொண்டே போனால் அது கருப்பை நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

    பொதுவாக கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இயல்பாகவே இந்த ஹார்மோன் சுரப்பின் காரணமாக வெள்ளைப்படுதல் இருப்பது இயல்பு தான். ஆனால் அதன் அளவு மற்றும் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும்.

    ஈஸ்ட் தொற்று போன்றவற்றாலும் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்படலாம். கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

    கர்ப்பம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே வெள்ளை்படுதலின் அளவு அதிகமாகிக் கொண்டே போனாலோ அல்லது நிறத்தில் வேறுபாடு இருந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

    கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு திரவம் பல மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது குறைப்பிரசவத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் சிறுநீர் கழித்தலின்போது அதிகப்படியான வலியும் வெள்ளைப்படுதலும் ஏற்பட்டாலோ அல்லது பிறப்புறுப்பு வீக்கம், அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தாலோ அது ஈஸ்ட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

    பிறப்புறுப்பு திரவம் பச்சை மற்றும் மெல்லிய சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அல்லது எரிச்சலுடன் வெளியேறினாலோ அவை ட்ரை- கோமோனியாசிஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம்.

    பிறப்புறுப்பு பகுதியில் இருந்து மீனின் வாசனையோடு பிறப்புறுப்பு திரவம் வெளியேறினால் அது வஜினோசிஸ் போன்ற பாக்டீரியல் தொற்றுக்களாக இருக்கலாம்.

    ஒருவேளை கர்ப்ப காலத்தில் வலி மிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறினால் எந்த தாமதமும் இன்றி மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
    தாய்மார்கள் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
    பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

    டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்:

    * பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

    * சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

    * அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

    * தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

    * வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

    * இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

    அன்றாட உணவில் ஒருவேலை நார்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் பயன்படுத்துங்கள். சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் இரவில் ஓட்ஸ் சற்று சாதம் பதத்தில் செய்து அதில் மோர், சிறிது உப்பு போட்டு சாப்பிட உங்களுடைய காலை நேரம் வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு நன்கு குறைந்து இருக்கும்.

    பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களுக்கு பொரித்த உணவுகள், பாஸ்ட் ஃபுட், காபி, டீ, சர்க்கரை சேர்த்த இனிப்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக கொடுக்க கூடாது. எளிதல் செரிமானம் ஆகக்கூடிய ஆவியில் வேக வைத்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தாராளமாக தரலாம். உடலுக்கு தீங்கு செய்யாத உணவுகளை மட்டும் தேர்வு செய்து தர வேண்டும்.
    முறை தவறிய மாதவிலக்கு சுழற்சி 28 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருகிறவர்களைவிட, காலம் தவறிய சுழற்சியை சந்திக்கிறவர்களுக்கும் ஆஸ்துமா இருந்தால் அதன் தீவிரம் அதிகமாகலாம்.
    "மாதவிலக்குக்கு முன்பும், மாதவிலக்கின் போதும் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு குறையும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களில் சிலருக்கு இந்த ஹார்மோன் மாறுதல்கள் ஆஸ்துமாவின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம். மாதவிலக்கு தவிர, பெண்ணின் உடலில் ஹார்மோன் மாறுதல்களை ஏற்படுத்துகிற வேறு சில விஷயங்களும் ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கலாம்.

    அவை… "கர்ப்பம் கர்ப்ப காலத்திலும் பெண் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிரடியாக நடக்கும் என்பதால் அப்போது பெண்களுக்கு ஆஸ்துமாவின் தீவிரம் வழக்கத்தை விட அதிகமாகும். "முறை தவறிய மாதவிலக்கு சுழற்சி 28 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருகிறவர்களைவிட, காலம் தவறிய சுழற்சியை சந்திக்கிறவர்களுக்கும் ஆஸ்துமா இருந்தால் அதன் தீவிரம் அதிகமாகலாம்.

    "மெனோபாஸ் ஹார்மோன் மாற்றங்களின் உச்சத்தில் இருப்பதால் ஏற்கனவே ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் அதிகமாவதும், சிலருக்கு புதிதாக அந்த பாதிப்பு ஏற்படவும் கூடும். மெனோபாஸுக்கு பிறகு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் இப்படி நிகழலாம்.

    மாதவிலக்கு நாட்களில் ஆஸ்துமா தீவிரம் அதிகரிப்பது தெரிந்தால், ஆஸ்துமாவுக்கான சிறப்பு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பது நலம். கூடவே உணவு முறையிலும் சில மாற்றங்கள் வேண்டும். "வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு அதிகமிருக்கும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வது, வைட்டமின் டி அதிகமுள்ள பால், முட்டை, மீன் சேர்த்துக் கொள்வது, இளம் வெயிலில் நடப்பது போன்றவற்றைச் செய்யலாம்.

    "வைட்டமின் சி மற்றும் ஈ அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் நுரையீரல் வீக்கம் மற்றும் அழற்சி குறையும். இவற்றில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸும் பீட்டா கரோட்டினும் ஆஸ்துமாவின் தீவிரத்தைத் தணிக்கும். "ஒயின், உலர் பழங்கள், ஊறுகாய், ஃப்ரோஸன் உணவுகள் போன்றவற்றில் உள்ள சல்ஃபைட், சிலருக்கு ஆஸ்துமாவின் தீவிரத்தைத் தூண்டலாம். அவற்றைத் தவிர்க்க வேண்டும். "எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது ஆஸ்துமா பாதித்தவர்களுக்கான முக்கிய அட்வைஸ். சில கிலோ எடைக் குறைப்புகூட அவர்களுக்கு ஆஸ்துமா தீவிரத்திலிருந்து நிவாரணம் தருகிற வித்தியாசத்தை அனுபவத்தில் உணர முடியும்.
    பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் கைப்பை வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.
    தோல் நோய்களில் மிகவும் கடுமையாக, கொடுமையாக தோல்நோய் எதுவென்றால் அது வெண்குஷ்டம்தான்! வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன் தொடர்புடையவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல.

    இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.

    உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங்களில் வெண்குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு பிராண்டிய இடங்களிலும் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் கைப்பை வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.

    மேலும் சிலர் அணியும் ரப்பர் செருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முகம், முதுகு, கைகளில்தான் வெண்குஷ்டம் முதலில் அதிகமாக தெரிய வரும்.

    தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள், மார்பகக் காம்பு, பிறப்பு உறுப்பு ஆகியவற்றில்தான் அதிகமாக வெண்குஷ்டம் ஏற்படும். பொதுவாக, இந்த வெண்படை உடலின் இரு பக்கங்களிலும் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தின் பகுதியிலோ காணப்படும்.

    சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டு அது பலகாலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெதுவாகப் பரவலாம். மற்றும் சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கலாம். மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்படும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் அமைகிறது.

    இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்காரணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால் குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
    அநேகமான கருப்பை நீர்க்கட்டிகள் உங்கள் மாதவிடாய் சுழற்சியோடு வருவதும் போவதும் உண்டு. இதனை தனிப்பட்ட முறையில் நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஆனால் 20% பெண்களுக்கு உண்டாகும் இத்தகைய நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.

    மாதவிடாய் வருவதும் போவதும் இயல்பு என்பது போல் இந்த கட்டியும் அதனால் உண்டாகும் வலியும் மறைய வேண்டும். ஒருவேளை இந்த வலி மறையாமல் இருந்தால் குறைந்த பட்சம் அல்ட்ரா சவுண்ட் செய்து பார்ப்பது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த இடத்தில் தான் கருப்பை உள்ளது. மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள்.

    அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிற்றில் வேறு ஏதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.

    கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

    தொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது. உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

    கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

    உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம்.
    இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத் துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாக குணமடைய செய்ய முடிகிறது.
    உங்களுக்கு இருக்கும் குழந்தையின்மை பிரச்சினையை நீங்கள் புரிந்து கொண்டவுடன் டாக்டரை சரியான நேரத்தில் அணுகி உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு பெற முயல்வது முக்கியம். தம்பதிகள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக்கூடாது. நீங்கள் எப்போது டாக்டரை அணுகவேண்டும் என்பதற்கு இங்கே சில குறிப்புகளை தந்து உள்ளேன்.

    ஆண்/பெண் வயது 35 முதல் 40 இருந்தாலோ, மாதவிடாய் சீராக வரவில்லை என்றாலோ அல்லது மாதவிடாயே ஏற்படவில்லை என்றாலோ, மாதவிடாய் அதிக வலியோடு ஏற்பட்டாலோ கருவுறுவதில் பிரச்சினைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தாலோ, உங்கள் குடும்பத்தினரில் யாருக்காவது மரபு வழி கருவுறாமைக்கான பிரச்சினை இருந்தாலோ டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

    இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத் துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாக குணமடைய செய்ய முடிகிறது. இந்த வகையில் கருவுறாமைக்கான காரணங்களை சரியாக கண்டறிந்து அதற்கான சரியான சிகிச்சை முறையையும் தேர்ந்தெடுத்து உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ள முடியும். இந்த வகையில் பல சிகிச்சை முறைகள் இன்று வழக்கத்தில் உள்ளன.

    இன்விட்ரோ பெர்டிலைஷேசன் (ஐ.வி.எப்.)

    இந்த ஐ.வி.எப். சிகிச்சை முறையில் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் கருவகத்தட்டில் வைக்கப்பட்டு விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுற செய்யப்படுகிறது. இப்போது அதிக மக்கள் இந்த சிகிச்சை முறையில் பயன் பெற்று வருகிறார்கள் என்பது உண்மை.

    இவ்வாறு அன்னை மருத்துவமனை டாக்டர்கள் ஜோ.புல்கானின், பி.ஜி.சுதா கூறினார்கள்.
    கருவுற்ற காலத்தில் மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறுவிதமாக அறிவுரை கூறுவார்கள்.
    கருவுற்ற காலத்தில் மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறுவிதமாக அறிவுரை கூறுவார்கள். கர்ப்பிணிகளுக்கு எது சரி? எது தவறு? என்ற யோசனையில் பயமும், குழப்பமும்தான் அதிகமாகும்.

    பெண்களின் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமான கர்ப்ப காலத்தை, மகிழ்வுடன் கொண்டாட வேண்டாமா? என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததன் விளைவாக, கர்ப்பிணிப் பெண்களுக்கென பயிற்சி மையத்தைத் தொடங்கினார் திருப்பூரைச் சேர்ந்த அனுபமா. இதுவரை 20 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்குப் பயிற்சி அளித்துள்ள அவருடன் உரையாடிய போது...

    கர்ப்பிணிப் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தோன்றியது ஏன்?

    கர்ப்ப காலம் பெண்களது வாழ்வில் முக்கியமானது; என்றும் நினைவில் நிற்பது. இன்றையச் சூழலில் பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதில்லை. மாறாக, எப்படி நடக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? உடற்பயிற்சி செய்யலாமா? என எல்லாவற்றையும் சிந்தித்து, பயத்துடனே கழிக்கின்றனர். என்னுடைய முதல் பிரசவத்தின் அனுபவமும் அவ்வாறே இருந்தது.

    கருவுற்ற காலத்தில் மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறுவிதமாக அறிவுரை கூறுவார்கள். கர்ப்பிணிகளுக்கு எது சரி? எது தவறு? என்ற யோசனையில் பயமும், குழப்பமும்தான் அதிகமாகும்.

    பெரும்பாலான பெண்களின் பிரசவகால அனுபவமும் இதுதான். நமக்குள் உருவாகியுள்ள கருவினை நல்லபடியாக உலகிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற பொறுப்புணர்வே, பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மகிழ்ச்சியான மகப்பேறுவை பெண்கள் அனுபவிப்பதற்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பினேன்.

    அது தொடர்பான முறையான கல்வி கற்ற பின்னரே பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். 2013-ம் ஆண்டில் குழந்தை நல ஆலோசகர், தாய்ப்பால் ஆலோசகர், கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி ஆலோசகர், பிறந்த குழந்தை நல ஆலோசகர், குழந்தைகளுக்கான உணவு ஆலோசகர் போன்ற படிப்புகளைப் படித்து முடித்தேன். முறையான ஆலோசகராக கர்ப்பிணிகளுக்கான பயிற்சி மையத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன்.

    இதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டனரா?

    இன்றைய பெண்களிடத்தில் கர்ப்ப கால விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. ஆனால், 8 ஆண்டுகளுக்கு முன் இதற்கு நேரெதிரான சூழலே நிலவியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எதற்குப் பயிற்சி? நாங்களெல்லாம் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகா குழந்தை பெற்றுக் கொண்டோம்? என்பதே முதல் கேள்வியாக இருந்தது.

    கர்ப்ப காலப் பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைத்தோம். என் கணவரும், மாமியாரும் எனது முயற்சிக்கு ஆதரவு அளித்து ஊக்கம் கொடுத்தனர். முதன் முதலில் 3 பெண்கள் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களுக்கு கிடைத்த இன்பமான அனுபவத்தை, மகப்பேறுவை எதிர்நோக்கிக் காத்திருந்த மற்ற பெண்களிடம் கூற, பயிற்சிக்கு இணைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இன்று, மகப்பேறு என்றால் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவேண்டும் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.  

    ‘ஹனிமூன்’ பற்றி அனைவருக்கும் தெரியும். ‘பேபிமூன்’ பற்றி கூறுங்கள்? கர்ப்பம் தரித்தவுடன், கணவன்-மனைவி இருவராக சேர்ந்து, புதுப்புது இடங்களுக்கு சுற்றுலா செல்வது, கரு உருவான மகிழ்ச்சியை கொண்டாடுவதுதான் ‘பேபிமூன்’. புதுமண தம்பதிகளின் ‘ஹனிமூன்’ போல, உலக நாடுகளில் மிகவும் பிரபலமான கொண்டாட்டம் இது. ஆனால் நம்மை சுற்றிதான் பல தவறான புரிதல்கள், நம்பிக்கைகள், கட்டுக்கதைகள் இருக்கின்றன. கர்ப்பம் தரித்த பின்பு, பயணம் செய்யவே கூடாது என்று சொல்வார்கள்.

    இந்தப் பயத்திலே, என்னுடைய முதல் பிரசவத்தின்போது 5 மாதங்கள் நான் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. ஆனால், நான் 2-வது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்த மறுநாள், திருப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தேன். 250 கி.மீ சாலைவழி பயணம் மேற்கொண்டேன். கர்ப்பம் தரித்த முதல் நாளில் இருந்து தினமும் பயிற்சிக்கு வரும் பெண்களோடு சேர்ந்து நடனம் ஆடினேன். கருவிலுள்ள சிசுவிற்கு நல்லதொரு கருவியல் அனுபவத்தை அளிக்க வேண்டும். என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் அனைத்து பெண்களையும் கணவருடன் ‘பேபிமூன்’ செல்ல அறிவுறுத்துகிறேன்.

    தற்போது  கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்புகள் குறைந்து, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வெளியே செல்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் ஆரோக்கிய குறைவு இருந்தால், அவர்களை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே பயணம் மேற்கொள்ள அறிவுறுத்துகிறேன்.

    உடற்பயிற்சி,  நடனமும் கூட உடல் ஆரோக்கியத்தில் எவ்வித சிக்கலும் இல்லாதவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறேன்.

    கர்ப்பிணிகளுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்?

    கர்ப்ப காலத்தை எப்படி மகிழ்வுடன் கழிப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதே எங்களது நோக்கம். அதற்காக, கர்ப்பத்தைப் பற்றிய பயத்தைப் போக்கும் வகையிலும், அது பற்றிய மூட நம்பிக்கைகளைப் போக்கும் வகையிலும் ஆலோசனைகள் சொல்வோம். பிரசவத்தின்போது மேற்கொள்ள வேண்டிய மூச்சுப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கிறோம். சுகப்பிரசவத்திற்கான இடுப்பு எலும்புகளை வலுவாக்கும் பயிற்சிகளும் சொல்லித் தருகிறோம். கர்ப்பிணிப் பெண்களுடன் அவர்களது தாய், மாமியார், கணவன் என அனைவருக்கும் ஒரு நாள் குடும்ப ஆலோசனை வகுப்பு எடுக்கிறோம்.

    பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் புகட்டும் பெண்களின் மனநிலை எவ்வாறாக  இருக்கும்? அவர்களுக்கு குடும்பத்தில் இருந்து எத்தகைய ஆதரவு தேவைப்படும்?
    பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது? போன்றவற்றை அந்த ஒரு நாள் வகுப்பில் கற்றுத் தருகிறோம். கர்ப்ப காலம் தொடங்கி பிரசவத்துக்குபின் தாய்ப்பால் அளிக்கும் முறை வரை, முழு மகப்பேறுக்கான பயிற்சியினை அளிக்கிறோம். உரையாடல் முறையில்தான் பயிற்சிகள் நடைபெறும். உடற்பயிற்சிகளோடு யோகா, கோலாட்டம், நடனம் போன்ற வகுப்புகளையும் எடுக்கிறோம். பயிற்சி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு வீட்டுப்பாடமும் உண்டு.

    கொரோனா காலத்து வகுப்புகள் குறித்து?

    தொடக்கத்திலிருந்தே ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளை எடுத்து வருகிறேன். பொது முடக்கத்தால் ஆன்லைனில் பயிற்சி எடுத்து கொள்வோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது.

    உண்மையில், இந்த லாக்டவுன் கணவன்-மனைவிக்கு இடையே நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்காக முயற்சித்து வந்தவர்கள் பலரும், இந்த லாக்டவுன் காலத்தில் கர்ப்பம் தரித்துள்ளனர்.

    லாக்டவுனில் பலர் இணையவழியில் பயிற்சி எடுத்துகொண்டனர். தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். தாய்ப்பால்தான முகாமும் நடத்தி வருகிறேன்.
    எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு இவை இரண்டும் மாதவிடாய் சுழற்சியில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
    சராசரி உடல் எடை கொண்ட பெண்ணை விட உடல் பருமன் கொண்ட பெண் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. உடல் பருமன் ரூபத்தில் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படுவது நிலைமையை மோசமாக்கும். பல்வேறு உடல்நலப் பிரச் சினைகளுக்கும் ஆளாக்கும்.

    இதய நோய்கள், பக்கவாதம், டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சுவாசப் பிரச்சினை, உடல் வலி, கீல்வாதம் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகளையும் அனுபவிக்க நேரிடும்.

    2016-ம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 650 மில்லியன் பேர் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4-ந்தேதி உலக உடல் பருமன் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    உடல் பருமன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும். பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் பருமன் பொதுவாக உடல் நிறை குறியீட்டு எண் (பி.எம்.ஐ) படி அளவிடப்படுகிறது. இது ஒரு நபரின் எடைக்கும் (கிலோ கிராமில்), உயரத்திற்கும் (மீட்டர்) இடையே இருக்கும் விகிதமாகும். சாதாரண பி.எம்.ஐ 18.5 முதல் 24.9 வரையில் இருக்கும். இது கர்ப்பம் தரிக்க ஏற்றது. ஆய்வுகளின் படி, 29-க்கு மேல் பி.எம்.ஐ கொண்ட பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவு. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கருத்தரிக்கும் வாய்ப்பு சாத்தியமில்லாமல் போய்விடும்.

    உடல் பருமன் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். பருமனாக இருக்கும்போது, உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் இது நிகழும். மேலும் இந்த கொழுப்பு படிமம் ஈஸ்ட்ரோஜனை வெளியிடும். இது பெண் பாலின ஹார்மோன் ஆகும். உடல் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை வெளியிடும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை கட்டுப்படுத்திவிடும்.

    எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு இவை இரண்டும் மாதவிடாய் சுழற்சியில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை வழக்கமானதாக மாற்றிவிடக்கூடும்.

    சாதாரண பி.எம்.ஐ உள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு 29 சதவீதம் அதிகம்.

    உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) இவை இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை கொண்டது. மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை, ஆண் பாலின ஹார்மோன்கள் அதிகம் சுரப்பது, முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, எடை அதிகரிப்பு மற்றும் கருவுறாமை போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும். கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன்பு உடல் எடையை சரி பார்க்க வேண்டும். ஏனெனில் கர்ப்பத்திற்கு ஆரோக்கியமான எடை முக்கியமானது. பி.எம்.ஐ.யை 1 முதல் 2 புள்ளிகள் வரை குறைப்பதுகூட கருத்தரித்தல் விஷயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு எடையைக் குறைக்க வேண்டும். 10 முதல் 15 சதவீதம் எடை இழப்பு கூட கருவுறுதலை மேம்படுத்தலாம். இது மருந்து அல்லது சிகிச்சை இல்லாமல் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

    வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவு களை தவிர்க்க வேண்டும்.

    பச்சை இலை காய்கறிகள், சாலடுகள் மற்றும் புரதம் உள்ளடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    கருத்தரிக்கும் விஷயத்தில் உடல் பருமன் என்பது பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் பாதிக்கும். ஆண்களின் விந்தணுவின் தரம் மற்றும் அளவையும் குறைத்துவிடும். அதனால் கருத்தரிப்பில் சிக்கல் நேரும். எனவே கருத்தரிக்கும் விஷயத்தில் தம்பதியர் இருவரும் தங்கள் உடல் பருமன், ஆரோக்கியம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பி.எம்.ஐ.யை சிறந்த நிலைக்கு கொண்டு வர, சமச்சீரான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை பின் தொடர வேண்டும். மாதவிடாய் சுழற்சி சுமுகமாக நடைபெறுவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு யோகாசனம் உதவும்.
    ×