என் மலர்
பெண்கள் உலகம்
- பெண்கள் தனியாக பயணம் செய்யவேண்டிய சூழல் அதிகமாகவே உள்ளது.
- பெண்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் வரும்.
இந்த காலத்தில் பெண்கள் தனியாக பயணம் செய்யவேண்டிய சூழல் அதிகமாகவே உள்ளது. படிப்பிற்காக, வேலைக்காக என்று எங்கேனும் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், அவையெல்லாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போதெல்லாம் பெண்கள் தங்கள் துணைக்கு யாரையேனும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க முடியாது.
அப்படி பயணிக்கும் சமயங்களில் நேரம், காலம் பார்த்து சரியாக சென்றுவிட முடியும் என்று கணிக்க முடியாது. சில சமயங்களில் சீக்கிரமே சேர வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியும். அப்படி இல்லையேல் தாமதமாகலாம். இப்படி தனியாக பயணிக்கும் பெண்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் சமாளித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் எப்போதும் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனமாக ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதை உணர்த்துவதற்குத் தான் இந்த கதை.

தமிழ்நாட்டில் பேருந்தில் தொலைதூரப் பயணம் செய்திருந்தால் தெரியும். இரவு நேரங்களில் பேருந்து ஹைவேசில் இருக்கும் கடைகளில் சிறிது நேரம் நிற்கும். அந்த நேரத்தில் உணவு, காபி போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். பாத்ரூம் போக வேண்டும் என்றாலும் சென்றுவிட்டு வரலாம்.
அப்படி பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அவசரமாக பாத்ரூம் போக வேண்டும் என்று காத்திருந்தார். பேருந்தும் வந்து ஒரு ஹைவேஸ் கடையிலே நின்றது. அங்கே இருக்கும் பாத்ரூமோ ஒதுக்குப்புறமாகவும், வெளிச்சம் சற்று குறைவான இடத்திலும் இருந்திருக்கிறது. இதுவே அப்பெண்ணுக்கு சரியாகப் படவில்லை என்றாலும், அவசரத்திற்கு வேறு வழியில்லை என்று பேருந்தில் இருந்து இறங்கி அங்கே சென்றுள்ளார்.
அங்கே பெண்களின் பாத்ரூம் அருகிலேயே சில ஆண்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், அந்த கூட்டத்தில் இருந்து ஒருவர், `உள்ளே யாருமில்லை போங்க' என்று இப்பெண்ணிடம் கூற, இந்த பெண்ணோ பாத்ரூமின் வாசலிலே ஈரமான காலடித்தடங்கள் பாத்ரூமிற்குள் செல்வது போன்று இருப்பதை பார்த்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த பெண், இதற்கு மேல் அங்கிருப்பது நல்லதில்லை என்று உணர்ந்து உடனே அந்த இடத்தை காலி செய்துவிட்டு பேருந்துக்கு வந்துவிட்டார்.
பேருந்திற்கு வந்த பிறகும் அப்பெண்ணுக்கு ஏதோ சரியில்லாதது போலவே தோன்ற, பேருந்தில் அமர்ந்தவாறே அந்த பாத்ரூமை கவனித்திருக்கிறார். சற்று நேரம் கழித்து அந்த பாத்ரூமில் இருந்து ஒருவர் வெளியிலே வந்து அங்கு நின்று கொண்டிருந்த கூட்டத்தில் சேர்வதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.
இது தெரியாமல் உள்ளே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து பார்க்கையிலேயே பயமாக உள்ளதல்லவா?
சில சமயங்களில் நம்முடைய உள்ளுணர்வு சொல்வதை தட்டாமல் கேட்க வேண்டும். இதை பெண்களுடைய அதிசய சக்தி என்றே கூறலாம். பெண்களின் உள்ளுணர்வு தவறாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். ஒரு இடமோ, சூழலோ சரியில்லை என்று தோன்றும்போது அங்கிருந்து விலகி வந்து விடுவது நல்லதாகும்.
பெண்கள் தனியாகப் பயணிக்கும்போது கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலேயே பயணிப்பது மிகவும் நல்லது. போனிலோ அல்லது மெசேஜிலோ எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் போன்றவற்றை வீட்டில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கலாம்.

`காவலன் ஆப்' போன்ற ஆப்களை போனில் வைத்துக்கொள்வது சிறந்ததாகும். அவசர காலத்தில் உதவியாக இருக்கும். பர்சில் எப்போதும் பெப்பர் ஸ்ப்ரே போன்றவற்றை வைத்துக்கொள்வது மிகவும் உத்தமம்.
தனியாகப் பயணிக்கும் பெண்கள் எல்லா சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்கள் என்று காத்திருக்காமல், `தன் கையே தனக்கு உதவி' என்று துணிந்து செயல்படுவது உசிதமாகும்.
- லாவண்டர் செடி, மகரந்த சேர்க்கைக்கு வித்திடும் குணாதிசயம் கொண்டது.
- வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல நறுமணமும் கொண்டது.
வீட்டில் செடிகள் வளர்க்க ஆசைப்படுபவர்கள், தாங்கள் நிர்வகிக்கும் மினி தோட்டத்தில் லாவண்டர் செடியையும் நிச்சயம் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
வசீகரிக்கும் நறுமணம்
லாவண்டர் செடி வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல நறுமணமும் கொண்டது. அதன் பூக்கள் இனிமையான வாசனை தரக்கூடியவை. அவற்றை நுகர்வது மனதை தளர்வடையச் செய்யும். மனதையும் சாந்தப்படுத்தி அமைதியடையச் செய்யும்.
வீட்டுத்தோட்டத்தில் லாவண்டர் செடியை வளர்த்தால் அதன் நறுமணம் ஒட்டுமொத்த தோட்டத்திலும் பரவி இருக்கும். அங்கு சென்றாலே இனிமையான சூழலை உணர முடியும். லாவண்டர் பூக்களை வீட்டின் உள் அறைகளில் ரோஜா மலர் இதழ்களை போல் உதிர்த்து, அலங்கரித்து வைத்தால் அதன் வாசனை வீடெங்கும் பரவி புத்துணர்ச்சியூட்டும்.

மகரந்த சேர்க்கைக்கு வித்திடும்
லாவண்டர் செடி, மகரந்த சேர்க்கைக்கு வித்திடும் குணாதிசயம் கொண்டது. தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் உள்பட செடிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை உங்கள் தோட்டத்திற்கு வர வழைத்துவிடும். லாவண்டர் செடியை வளர்ப்பதன் மூலம் தோட்டச் செடிகள் பூத்துக்குலுங்கி காய்ப்பதற்கு அத்தியாவசிய தேவையான மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு நீங்கள் புகலிடத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இப்படி மற்ற தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்த செடி முக்கிய பங்கு வகிக்கிறது. மகரந்தச் சேர்க்கை தடையின்றி நடைபெறுவதன் மூலம் காய்கறிகள், பழங்கள் விளைச்சல் அதிகரிப்பதற்கு வித்திடக்கூடியது.
அழகான அலங்கார செடி
லாவண்டர் நறுமண செடி மட்டுமல்ல, அற்புதமான அலங்கார தாவரமாகும். அதன் மெல்லிய, வெளிர் பச்சை நிற பசுமையான தண்டு, வெள்ளை மற்றும் ஊதா நிறம் கலந்த பூக்களின் அடுக்கடுக்கான கிளை பகுதிகள் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும். லாவண்டர் செடியை அழகான பூந்தொட்டிகளில் நட்டு வளர்த்தால் இன்னும் வசீகரமாக தோற்றமளிக்கும்.

மருத்துவ பயன்பாடு
லாவண்டர் அரோமாதெரபி மற்றும் மருத்துவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கிறது. லாவண்டர் பூக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டது. மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் அரோமாதெரபியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. லாவண்டர் எண்ணெய்யை சரும எரிச்சல் மற்றும் சிறிய வெட்டுக்காயங்களுக்கு பயன்படுத்தலாம்.
குறைந்த பராமரிப்பு
செடிகளை பராமரிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு லாவண்டர் சரியான தேர்வாக அமையும். இது ஓரளவுக்கு வறட்சியை தாங்கக்கூடியது. அதனால் குறைந்தபட்ச கவனிப்பு முறையை கையாண்டாலே போதுமானது. சூரிய ஒளியை அது விரும்பும். வெயில் உக்கிரமாக இருந்தாலும் கூட தாக்குப்பிடித்து வளரக்கூடியது. அதனால் அதிக வெயில், வறண்ட கால நிலை நிலவும் பகுதிகளில் வளர்க்க ஏற்றது. பூக்கள் பூத்த பிறகு நேர்த்தியாக கத்தரித்துவிட்டால் ஒரே அளவில் வடிவம் மாறாமல் அழகுற வளரக்கூடியது.

தூக்கத்திற்கு உதவும்
லாவண்டரின் அமைதியான பண்புகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் லாவண்டர் செடியை வைப்பது, டிப்யூசர் எனப்படும் உமிழும் கருவியில் லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்துவது நிம்மதியான தூக்கத்திற்கு பங்களிக்கும். அமைதியான வாசனையை அனுபவிக்க விரும்பினாலும், மகரந்த சேர்க்கைக்கு நன்மை பயக்கும் பூச்சிகளை வரவழைக்க முயற்சித்தாலும் லாவண்டர் உங்கள் வீட்டுத்தோட்டத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
- குறைப்பிரசவம் சில இயற்கை காரணங்களினால் நிகழ்கின்றன.
- ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. அது குழந்தைகள் இறப்பதற்கு காரணமாகவும் அமையும். குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, குழந்தை எடை குறைவாகப் பிறக்கும். இந்த குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் பிரிமெச்சூர் என்று கூறுவர்.
குறைப் பிரசவம்
கருப்பை திசுச்சுரண்டல் எனப்படக்கூடிய டி அன்ட் சி செய்வதன் காரணமாக, கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிலந்து விடலாம். இதன் காரணமாக, கருப்பைத் திசு தளர்வதுடன் அதில் குழந்தை வளரும் போது குழந்தையைத் தங்க வைக்க முடியாமல், கருப்பை வாய் திறக்க ஆரம்பித்து விடும். இந்த நிலையில் கரு சிதைந்து விட வாய்ப்புள்ளது. இவ்வாறு நிகழாத சமயத்தில் குறை பிரசவம் உண்டாவது உறுதியாகும்.
குறைபிரசவ மற்றும் முதிராத குழந்தை
கர்ப்பம் தரித்ததில் இருந்து 37-வது வாரத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தை குறை பிரசவக் குழந்தை எனக் கூறப்படுகிறது. அதேபோல, 37-வது வாரத்திற்குப் பிறகு பிறந்தாலும், குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதை முதிராத குழந்தை எனக் கூறுவர்.

குறைபிரசவத்திற்கான காரணம்
பெண்கள் சாதாரண நிலையில் இருப்பதை விட கர்ப்ப காலத்தில் இருக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு ஊட்டச்சத்து சாப்பிடாமல், கர்ப்பகாலத்தில் தேவையான பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும், ரத்த சோகை ஏற்படுவதால் உண்டாகும் அசதியினால் பாதிக்கப்பட்டவர்களும், பால்வினை நோய்களால் தாக்கப்பட்ட சமயத்திலும் குறைபிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும், கர்ப்பிணி பெண்கள் கடுமையான காய்ச்சல், சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, இதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பினும் குறைபிரசவம் நிகழ வாய்ப்புண்டு.
முக்கியமாக, கர்ப்பம் தரித்த பெண்களின் வயதைப் பொறுத்தும் ஏற்படலாம். அதாவது, கர்ப்பிணி பெண்கள் 16 வயதுக்கு உட்பட்டவராகவோ 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ உள்ள இருந்தால் அவர்களுக்கு குறை பிரசவம் நிகழ அதிக வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், குறைப்பிரசவம் சில இயற்கை காரணங்களினால் நிகழ்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண்கள் இந்த காலகட்டங்களில் மிகுந்த பாதுகாப்புடனும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.
- உங்களது கர்ப்ப காலத்தை மறக்க முடியாததாக மாற்றலாம்.
- புதிய டயட்டைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.
கர்ப்பத்தின் முதல் மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இந்த அம்சங்களில் சிலவற்றை பின்பற்றுவதன் மூலம், உங்களது கர்ப்ப காலத்தை மறக்க முடியாததாக மாற்றலாம். இந்த அம்சங்களில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நீங்கள் புதிய டயட்டைத் தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். ரத்த சோகை உள்பட பல ஹெல்த் கன்டிஷனைத் தடுக்க நீங்கள் கீரை மற்றும் சீஸ் உடன் உணவைத் தொடங்கலாம்.
குழந்தையின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், நீங்கள் மது மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற பழக்கங்களைத் தொடர்வது குழந்தையின் பிறவிக் குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.
புகைப்பிடிப்பவர்கள் அருகில் இருப்பதையும் தவிர்த்துவிட வேண்டும். முடிந்தவரை ஓய்வெடுக்க வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம். உங்கள் மருத்துவரைத் தொடர்புகொண்டு உங்கள் உடலுக்கும் உங்கள் கர்ப்பகால மாதத்திற்கும் ஏற்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். வழக்கமாக எளிதான உடற்பயிற்சியுடன் தொடங்குவதும், இறுதியில் மிகவும் நெகிழ்வான பயிற்சிகளை செய்வதும் நல்லது. நடைபயிற்சி மற்றும் ஸ்டிரெச்சிங் போன்ற பல பயிற்சிகள் குறிப்பாக பிரசவத்தின் போது செய்வது பெரும் உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பம் தொடர்பான அம்சங்களை ஆய்வு செய்ய தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்க. மேலும் நீங்கள் டெலிவரிக்கு தயாராவதற்கு சில கர்ப்பம் தொடர்பான இதழ்களையும் படிக்கலாம்.

உங்க குழந்தையின் முதல் உதை அல்லது படபடக்கும் அசைவுகள் போன்ற சிறப்புத் தருணங்களை நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் காலெண்டரில் தேதிகளைக் குறித்து வைக்கலாம்.
உங்க கர்ப்பத்துடன் தொடர்புடைய புகைப்பட புத்தகத்தை உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட மிகவும் வேடிக்கையாக இருக்கும். நீங்களே ஒரு புத்தகத்தை வாங்கி உங்களது கர்ப்ப காலத்தில் நீங்கள் எடுத்த புகைப்படங்களை அதில் ஒட்டலாம். உங்கள் குழந்தை உதைக்கும் புகைப்படங்கள் உங்களுக்கு மிகவும் சுவாரயசிமான அனுபவத்தை கொடுக்கும்.

மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்
நீங்கள் உங்கள் மருத்துவரை சந்திக்கும் போது, சில கேள்விகளைக் கேட்பதுடன், அனைத்து விளக்கங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களது குடும்பத்தின் மருத்துவ வரலாறு அல்லது பழக்க வழக்கங்களைப் பொறுத்து நீங்கள் எடுக்க வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே மருந்துகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால், கர்ப்ப காலத்தில் அந்த மருந்தின் பாதுகாப்பு பற்றி நீங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும். உங்களது மருத்துவர் அந்த மருந்தைத் தொடரவும் அல்லது நிறுத்தவும் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.
உங்களது அடுத்த மருத்துவ பரிசோதனைகளின் அட்டவணை குறித்தும் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
- டிரைமெஸ்டரில் எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம்.
- இடப்பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவதே சரியானது.
கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் (முதல் டிரைமெஸ்டர்) இருக்கும்போது எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம். அதாவது, உங்களுக்குப் பிடித்த, வசதியான எந்த நிலையிலும் தூங்கலாம். ஒருக்களித்தும் படுக்கலாம், மல்லாந்தும் படுக்கலாம், குப்புறகூட படுத்தும் தூங்கலாம், பிரச்னை இல்லை.

முதல் மூன்று மாதங்களில் எந்த பொசிஷனில் படுத்து உறங்கினாலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு அது எந்த சிரமத்தையும் தருவதில்லை. அதுவே, இரண்டாவது, மூன்றாவது டிரைமெஸ்டரில், ஒருக்களித்துப் படுத்து உறங்குவதுதான் சரியானது. அதிலும் குறிப்பாக, இடப்பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவதே சரியானது. அது சவுகரியமாகவும் இருக்கும், அந்த பொசிஷன் பாதுகாப்பானதும்கூட.
இடப்பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதன் மூலம், நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கர்ப்ப கால சிக்கல்களையும் தவிர்க்க உதவும். படுத்திருக்கும்போது இரண்டு கால்களுக்கு இடையில் தலையணை வைத்துக்கொள்வது, முதுகுப் பகுதிக்கு தலையணை வைத்துக்கொள்வது போன்றவையும் கர்ப்பிணிகளுக்கு சவுகரியமான உணர்வைத் தரும். நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

முதுகுப்பகுதி சமமாக இருக்கும்படி மல்லாந்து படுக்கும்போது, அதிலும், பிரசவ காலம் நெருங்கும் நேரத்தில் அப்படிப்படுப்பது, ஒருவித அசவுகரியத்தைத் தரும். ரத்தக் குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக ரத்த ஓட்டம் குறையலாம். அதனால் உங்களுக்கு மயக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். ரத்த அழுத்த அளவும் குறையலாம்.
இந்த பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்கவே, ஒருக்களித்துப் படுக்கவும், தலையணை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் உங்களுக்கு மூச்சு விட சிரமம் இருந்தாலோ, அசவுகரிகயமாக உணர்ந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.
- குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால்.
- உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய தாய்ப்பால் மிக அவசியம்.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் முதல் உணவாக தாய்ப்பாலைத்தர உதவ வேண்டும். இல்லையெனில் ஏன் அவ்வாறு தாய்ப்பால் கொடுக்க இயலவில்லை என்ற மருத்துவ காரணத்தை மருத்துவ பதிவேட்டிலும், தாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது தரும் ஆவணத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.
குழந்தை பிறந்த நேரம், தாய்ப்பால் கொடுத்த நேரம் இரண்டையும் பதிவுசெய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மருத்துவமனையிலும் கடைப்பிடித்தால் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்கிறது, மருத்துவ ஆய்வு.
வேலைக்குப் போகும் பெண்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக அரசாங்கம் பேறுகால விடுமுறை வழங்குகிறது. ஆனாலும் 46.8 சதவீதம் தாய்மார்கள் தான், குழந்தைகளுக்கு 6 மாதம் முடிய தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள். தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை. அதைத் தருவது தாயின் கடமை.
வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் தருவது பற்றி முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
வேலையில் சேர 3 வாரத்துக்கு முன்பிருந்தே இதை ஆரம்பிக்கலாம். முதல் வாரத்தில் தாய்ப்பாலை எப்படி எடுப்பது, பாதுகாப்பது என்று கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி சேகரிக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் 7 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் 24 மணி நேரம் வரை கெடாது. சேகரித்து வைத்த பாலை ஸ்பூன் மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.
குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் மிக அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா சபையின் குழந்தைகள் நல கூட்டமைப்பின் ஆய்வு முடிவுகளின்படி, தாயின் பால்சுரப்பினைப் பொருத்து குழந்தைக்கு 3 வயது வரையில் தாய்ப்பால் கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீம்பால் தொடங்கி 3 வயது வரையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவார்கள்.
முதல் ஆறு மாதத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு, தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. அதன் பிறகு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பிறந்த குழந்தைக்கு, பசுவின் பாலோ பவுடர் பாலோ தாய்ப்பாலுக்கு இணையான சத்தைக் கொடுக்கக்கூடியது அல்ல என்பதுடன், அளவு, இடைவெளி என கொடுக்கப்படும் முறைகளால் அது சிசுவுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும் இயற்கை உணவு.
குழந்தையின் புத்திக்கூர்மை, மூளைச் செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருவியாக தாய்ப்பால் செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனமான WHO உரக்கச் சொல்கிறது. மேலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தல், மனஅழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள்.
- உலகம் முழுவதும் பெண் தொழில்முனைவோர் அதிகரித்து வருகிறார்கள்.
- உங்களைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிர்ந்து கொள்வதை தவிருங்கள்.
சமீபகாலமாக உலகம் முழுவதும் பெண் தொழில்முனைவோர் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் பணி நிமித்தமாகவும், தொழில்ரீதியாகவும் பயணம் செய்வது தவிர்க்கமுடியாதது. இவ்வாறு பயணிக்கும் போது தமக்கும், தம்முடைய உடமைகளுக்கும் தேவையான பாதுகாப்பை கருத்தில் கொள்வது அவசியமாகும். அதுகுறித்த சில ஆலோசனைகளை இங்கே பார்ப்போம்...
பயணத்தின்போது நீங்கள் அணியும் ஆடை, அணிகலன்கள் எளிமையாகவும், வசதியாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பளபளப்பான ஆடைகள், விலை உயர்ந்த நகைகள், பைகள் மற்றும் காலணிகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
சர்வதேச அளவில் பயணம் செய்யும்போது நீங்கள் செல்லப்போகும் இடத்தில் உள்ள பெண் தொழில்முனைவோர் ஆடை அணியும் விதத்தையும், அதுகுறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் பாதுகாப்புக்கும், தொழில்முறையிலான நல்லுறவு மேம்படுவதற்கும் உதவும்.

தனியாக விமானப் பயணம் மேற்கொள்ளும்போது நீங்கள் செல்லப்போகும் இடத்துக்கு நேரடி விமானங்கள் இருக்கிறதா, அங்கு பகல் வேளையில் செல்ல முடியுமா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். விமானப் பயணத்துக்கான தொகை சற்று அதிகமாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி நேரடி விமானம் மற்றும் பகல்நேர பயணத்தை கருத்தில் கொள்வது நல்லது.
விமானப்பயணத்தில் முடிந்தவரை உங்கள் உடமைகளை உங்களுடனேயே வைத்திருக்கும் வசதியை தேர்ந்தெடுங்கள். விமானத்தில் பயணிக்கும்போது உங்கள் உடமைகள் அடங்கிய பெட்டியை உங்களுடைய இருக்கைக்கு எதிரே உள்ள அடுக்கில் வைத்திருங்கள். அப்போதுதான் அவை உங்கள் பார்வையிலேயே இருக்கும்.

பயணத்தின்போது நீங்கள் தங்குவதற்காக தேர்ந்தெடுக்கும் விடுதிகளில் வரவேற்பறையில் முழுநேரமும் பணியாளர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தரைத்தளத்தில் உள்ள அறைகளை தேர்ந்தெடுக்காமல் பிரதான தளத்தில் உள்ள அறைகளை தேர்ந்தெடுங்கள். பயணவிடுதி அறையில் இருக்கும் கதவுக்கு பாதுகாப்பு சங்கிலியைப் பயன்படுத்துங்கள்.
பயணத்தின்போது வாடகை காரில் பயணிக்க நேர்ந்தால் நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள வாலட் சேவைகளைப் பயன்படுத்துங்கள். நன்றாக வெளிச்சம் உள்ள, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வாகனத்தில் ஏறுங்கள்.
விமான நிலையத்தில் இருந்து நீங்கள் செல்லும் இடத்தை அடைவதற்கு பயணிக்கும் போது அடையாளம் தெரியாத ஓட்டுனர்களை தவிர்ப்பது நல்லது. அங்கீகாரம் பெற்ற தரைவழி போக்குவரத்து சேவையைத் தேர்ந்தெடுத்து உங்கள் பயணத்தை முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்.
வெளியிடங்களுக்கு தனியாக செல்லாமல் குழுவுடன் செல்ல முயற்சி செய்யுங்கள். நீங்கள் செல்லும் இடத்தை சுற்றிப்பார்க்க பகல்பொழுதை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு நம்பகமான நபர்களுடன் மட்டும் வெளியிடங்களுக்கு செல்லுங்கள். வெளியிடங்களில் சாப்பிடும்போது உங்கள் பணப்பையை சாப்பாட்டு மேசை மீது அல்லது நாற்காலியின் கைப்பிடியில் தொங்கவிடுவதைத் தவிர்க்கவும்.
அந்நியர்களுடன் உங்களைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிர்ந்து கொள்வதை தவிருங்கள். உங்க கைபேசியின் பேட்டரியில் எப்போதும் சார்ஜ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தரமான பேக்-அப் பேட்டரி ஒன்றை உடன் வைத்துக்கொள்ளுங்கள். கைபேசியை சார்ஜ் செய்வதற்கான உபகரணங்களை மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.
- பலரும் பாலியஸ்டர் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.
- உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பாலியஸ்டர் துணிகள்.
பேஷன், வடிவமைப்பு, உபயோகம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பாலியஸ்டர் துணிகள். இது பருத்தி அல்லது கம்பளி போன்ற இயற்கை துணி ரகங்களை சேர்ந்தது இல்லை. பாலிமர் சேர்மங்கள் கொண்டு தயாரிக்கப்படும் செயற்கை இழைகளால் ஆனது.
சுருக்கங்கள் ஏற்படாதது, கச்சிதமான வடிவத்தை கொடுப்பது. நீண்ட நாட்கள் நீடித்து உழைப்பது, துவைப்பதற்கு எளிதாக இருப்பது, துவைத்தவுடன் விரைவாக உலர்வது, குறைவான விலை போன்ற காரணங்களால் பலரும் பாலியஸ்டர் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.
அதேசமயம் காற்றோட்டம் குறைவாக இருப்பது, ஈரப்பதத்தை உறிஞ்சாமல் தக்கவைப்பது போன்ற குறைபாடுகளும் பாலியஸ்டர் துணிகளில் உள்ளன. இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சருமத்துக்கு பல பாதிப்புகளை உண்டாக்கக்கூடும். அதைப் பற்றிய தகவல்கள் இங்கே...

பாலியஸ்டர் ஆடைகளை நீண்டநேரம் அணியும்போது வியர்வை வெளியேற முடியாத காரணத்தால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகும். இதன்மூலம் பல்வேறு சரும பாதிப்புகள் ஏற்படும். கோடைகாலத்தில் பாலியஸ்டர் துணிகள் அணிவதற்கு ஏற்றவை அல்ல.
பாலியஸ்டர் இழைகள் அடிப்படையில் பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் ஆனவை. தொடர்ச்சியாக பாலியஸ்டர் ஆடைகள் அணிவதால் சருமத்துக்கு காற்றோட்டம் மிகவும் குறைவாகவே கிடைக்கும். சருமத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை எளிதில் குணமடையாது.
பாலியஸ்டர் துணிகளின் உற்பத்தியின் போது சேர்க்கப்படும் ரசாயனங்கள் தொடர்ச்சியாக சருமத்தில் படியும்போது பல்வேறு சரும பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். பாலியஸ்டர் துணிகளில் உள்ள இழைகள் கண்களிலும், முக்கிலும் உரசும்போது எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
பாலியஸ்டர் துணிகளை உற்பத்தி செய்யும்போது அதில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் காற்றையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும். இது மக்கும் தன்மை உடையது அல்ல. பாலியஸ்டர் துணிகள் மண்ணில் புதைந்து மக்குவதற்கு 50 ஆண்டுகளுக்கும் அதிகமான காலஅளவு தேவைப்படும்.
விலை குறைவு, உற்பத்தி அதிகம் என்பதால் இந்த துணி அதிகமான அளவில் பயன்படுத்தி தூக்கியெறியப்படுகிறது. இதுவே அதிக அளவில் கழிவுப்பொருளாக சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாகிறது.
பாலியஸ்டர் துணிகள் நெருப்பில் படும்போது விரைவாக பொசுங்கும் தன்மை கொண்டவை. இது உடலில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். நெருப்பு படும் போது தோலுடன் ஒட்டிக்கொள்ளக் கூடியது.
புதுத்துணிகளை துவைத்த பின்பு அணிவது நல்லது
ஆடைகள் தயாரிப்பின்போது சேர்க்கப்படும் ரசாயனங்கள் சரும பாதிப்புகளை உண்டாக்கக்கூடும். துணிகளுடன் சேர்க்கப்படும் சில சாயங்கள் துணி இழைகளுடன் சேராமல் தனித்து நிற்கும். இவை சருமத்துடன் கலப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே புதுத்துணிகளை வாங்கியதும் நன்றாக துவைத்த பின்பு அணிவதே நல்லது.
புதுத்துணிகளை துவைத்தபின்பு அணிவதால் தொழிற்சாலை சூழ்நிலையில் படியும் தூசிகள் அல்லது எச்சங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
புத்தாடைகளை அணிவதற்கு முன்பு துவைப்பது அவற்றின் ஆயுளை நீட்டிக்க உதவும். மேலும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் ஆடைகள் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கவும் உதவும்.
- கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும்.
- மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும். இதை கர்ப்பகால சர்க்கரை நோய் என்கிறோம்.
ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது, தினமும் மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்து கர்ப்ப கால சர்க்கரை நோயை சமாளிக்க சிலருக்கு இன்சுலின் மருந்து தேவைப்படும். இதற்கு தகுந்தசிகிச்சை அளிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் தாய்க்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.
கர்ப்பகாலத்தின் 24 மற்றும் 28 வாரங்களுக்கு இடையில்தான் பல பெண்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதுவரை சர்க்கரை நோய் இல்லாத பெண்களுக்கும் கர்ப்பகாலத்தின்போது இந்த நோய் உண்டாகலாம். 2 முதல் 10 சதவீத பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாவது, வளர்சிதை மாற்றம் குறைவது போன்ற காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது.
உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்று 'இன்சுலின். இது நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சர்க்கரை மூலக்கூறுகளை உடைத்து ஆற்றலாக மாற்றி செல்களுக்கு வழங்கும். இதன்மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஆரோக்கியமான அளவில் வைத்திருக்கும்.
உடலில் உள்ள இன்சுலின் சரியாக வேலை செய்யாவிட்டாலோ, போதுமான அளவு சுரக்காவிட்டாலோ ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால்தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

கர்ப்பகாலத்தின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலின் சுரப்பும் பாதிக்கப்படலாம். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ள பெண்களுக்கும். மரபுரீதியாகவும் கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கர்ப்பகால சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், முதல் 8 வாரங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த காலகட்டத்தில் தான் குழந்தையின் மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், குழந்தையின் மூளை மற்றும் நரம்பியல் வளர்ச்சி 0.003 சதவீதம் வரை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே கர்ப்பம் தரிப்பதற்கு முன்னதாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
சத்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழுத்தானியங்கள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்ப்பது, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவது போன்றவற்றின் மூலம் கர்ப்பகால சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
- தாய்மை பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்.
- அனைவரின் கவனமும் கர்ப்பிணியின் மீது இருக்கும்.
ஒன்பது மாத புதிய உயிர் ஒன்றை உருவாக்கும் பயணம் பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். நாம் நினைப்பதைக் காட்டிலும், தாயின் வயிற்றில் கரு உருவாவது மிகவும் சிக்கலான விஷயம். இந்த காலகட்டத்தில் கணவன், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கவனமும் அந்த கர்ப்பிணியின் மீது இருக்கும். கர்ப்பிணியை சந்திக்கும் மூத்தவர்கள், "வயிறு மேல இருக்கு… பெண் குழந்தைதான்" என்பது உள்பட பல்வேறு விஷயங்களைச் சொல்லிச் சென்றுவிடுகின்றனர்.
கர்ப்பகாலத்தில், கர்ப்பிணியின் உடலில் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் சில அறிகுறிகளை வைத்து பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என கணித்துவிட முடியும் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
மக்கள் மத்தியில் பொதுவாக நிலவி வரும் கர்ப்பகாலம் குறித்த தவறான நம்பிக்கைகளையும் அவற்றுக்கான சரியான அறிவியல் விளக்கங்களையும் தெரிந்துகொள்வோம்.
தவறான நம்பிக்கை – 1
தாயின் வயிற்றுக் கோணத்தை வைத்தும், பருமனை வைத்தும் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. கர்ப்பமான தாயின் வயிறு மேலே இருந்தால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் எனவும், கீழே இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் எனவும் கூறுவர்.
உண்மை நிலை:
தாயின் வயிற்றில் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்பு படலத்தின் அளவு, தசை வலிமை, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தே கருவைச் சுமக்கும் வயிற்றின் அளவு மாறுபடும். எனவே, தாயின் வயிற்றின் அமைப்புக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தவறான நம்பிக்கை – 2
தாய்க்கு உப்புச் சுவை பிடித்தால், ஆண் குழந்தையும் இனிப்புச் சுவை பிடித்தால், பெண் குழந்தையும் பிறக்கும்.
உண்மை நிலை:
நமது உடலில் தாது உப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது உடல் தானாகவே சுவைத்தேடல் மூலம் குறைபட்ட ஊட்டச்சத்தைக் கேட்டுப்பெறும். இதை `ஃபுட் க்ரேவிங்' என்பார்கள். `ஃபுட் க்ரேவிங்'குக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் எந்தசம்பந்தமும் இல்லை.

தவறான நம்பிக்கை – 3
கர்ப்பமுற்ற மூன்றாவது மாதத்தில் தாய் அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தைக்கு முடி அதிகம் இருக்கும்.
உண்மை நிலை:
குழந்தையின் உச்சந்தலை, முடியின் அடர்த்தி பரம்பரை மரபணுக்களைப் பொறுத்தது. இதற்கும் வாந்தி, நெஞ்செரிச்சல் ஆகியவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தவறான நம்பிக்கை – 4
தாய்க்கு வலியில்லாத சுகப்பிரசவம் ஆகியிருந்தால், அவரது பெண்ணுக்கும் சுகப்பிரசவமே ஆகும்.
உண்மை நிலை:
இதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. குழந்தையின் எடை, வயிற்றில் குழந்தையின் நிலை, தாயின் இடுப்பு எலும்பின் சுற்றளவு, கர்ப்பகாலத்தில் தாயின் உணவுக்கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் ஆகியவையே சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என முடிவு செய்யும் முக்கியக் காரணிகள்.

தவறான நம்பிக்கை – 5
கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
உண்மை நிலை:
கருவுற்ற தாயின் வயிற்றின் கீழ்ப் பகுதியில் ஏழு அடுக்குத் தோல் படலம் கருவைப் பாதுகாக்கிறது. இந்த தோல் படலம், வெளியில் இருந்து வரும் எதிர்பாராத அதிர்வுகளிடம் இருந்து கர்ப்பப்பை நீரில் மிதக்கும் கருவைப் பாதுகாக்கிறது. கரு முட்டையில் விந்து நுழைந்து, கர்ப்பப் பையில் கரு பதிந்ததும், `செர்விக்ஸ்' எனப்படும் கர்ப்பப்பை வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளும். இதனால் மேற்கொண்டு விந்து நுழைய முடியாது. ஆகையால், உடலுறவு கொள்வதால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதீத ரத்தப் போக்கு, வெள்ளைப்படுதல், கருச்சிதைவுக்கான வாய்ப்பு மற்றும் வேறு சில கோளாறுகள் உள்ள தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உறவு வைத்துக் கொள்வது நல்லது.
தவறான நம்பிக்கை – 6
குங்குமப் பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.
உண்மை நிலை:
தோலின் நிறம், மெலனின் நிறமியின் அளவைப் பொறுத்தது. குழந்தையின் கண், காது, மூக்கு, கை, கால் உள்ளிட்ட உடற்பகுதிகளின் அமைப்பு, தோலின் நிறம், குணாதிசயங்கள் ஆகியவை, தாய், தந்தை, முன்னோர்கள் ஆகியோரின் மரபணுக்களைச் சார்ந்தது. தாய் ஊட்டச்சத்து பானங்களைப் பருகுவதன் மூலமாகவோ குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிடுவதனாலோ, குழந்தையின் சரும நிறத்தில் எந்த மாறுதலும் ஏற்படாது.
தவறான நம்பிக்கை – 7
கர்ப்பகாலத்தில் தாயின் ஊட்டச்சத்துக்காக இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால், குழந்தையின் சரும நிறம் கறுக்கும்.
உண்மை நிலை:
இது உடல்நலத்துக்கே ஆபத்தான, மிகத்தவறான நம்பிக்கை. கர்ப்பிணிக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இந்தியாவில், பிரசவ காலத்தில் ஏற்படும் மரணங்களில், 50 சதவிகிதம் ரத்த சோகையினால் ஏற்படுகிறது. இந்த நோய் வராமல் தடுக்க, மருத்துவர் ஆலோசனையின் பேரில் தாய்மார்கள் கட்டாயம் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

தவறான நம்பிக்கை – 8
மாதவிலக்கு தள்ளிப்போன மூன்றாவது மாதத்தில் தான் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உடனே செய்து கொண்டால், கரு கலைந்துவிட வாய்ப்புஉண்டு.
உண்மை நிலை:
இந்த தவறான நம்பிக்கை, தமிழகத்தில் பல குடும்பங்களில் நிலவுகிறது. சிக்கலான பிரசவத்தில் மிக முக்கியமானது எக்ட்டோபிக் கர்ப்பம். இந்த நிலையில் கர்ப்பப்பைவாய் வழியாக உள்ளே நுழையும் விந்தணு, கரு முட்டையை அடையாமல், இடையில் உள்ள கருக்குழாயில் தங்கி, அங்கேயே கரு உருவாகி வளரத் தொடங்கிவிடும். கருவின் எடையைத் தாங்க முடியாமல் கருக்குழாய் வெடித்து, சிசுவுக்கு ஆபத்து ஏற்படும். கரு, முட்டையில் தான் உருவாகி வளர்ந்து வருகிறது என்பதை உறுதிசெய்துகொள்ள, மாதவிலக்கு தள்ளிப்போனதுமே கட்டாயம் மகப்பேறு மருத்துவரை சந்தித்து, ஸ்கேன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தவறான நம்பிக்கை – 9
தாயின் வயிற்றில் மச்சம் இருந்தால், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும்.

உண்மை நிலை:
மச்சம் என்பது, நிறமியைத் தயாரிக்கும் தோல் செல்களான மெலனோசைட்கள், தோலில் ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் மச்சம் உருவாகிறது. மனிதர்களுக்கு 40 வயது வரை புதிய புதிய மச்சங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. தோலின் நிறத்தைப் பொறுத்து இவை சிவப்பு, கறுப்பு, பழுப்பு என பல நிறங்களில் உடலில் தோன்றும். இதற்கும் கர்ப்பத்துக்கும், பிரசவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தவறான நம்பிக்கை – 10
குழந்தையின் உடல்பருமன் முன்னோர்களின் மரபணுக்களை மட்டுமே சார்ந்தது.
உண்மை நிலை:
கருவுற்றிருக்கும் தாய்மார்களின் தவறான உணவுப் பழக்கம் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். கருவுற்ற சமயத்தில் அதிக அமிலத்தன்மை உடைய உணவுகள், மசாலா மற்றும் நிறைவுறாக் கொழுப்பு கலந்த உணவுகளைத் தாய்மார்கள் சாப்பிட்டால், அவை குழந்தையின் உடல்பருமனை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, கருவுற்ற காலத்தில் தாய்மார்கள் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு, பயறு வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்.
- 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பேடுகளை மாற்றி விடுங்கள்.
பருவமடைந்த ஒரு பெண்ணிடம் மாதவிடாய் என்றால் என்ன? என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்தப் பெண் தன் வெட்கத்தையும் தயக்கத்தையும் மட்டுமே பதிலாக தருகிறாள்.." இது `மாதவிடாய்' என்கிற ஆவணப்படத்தில் வரும் ஒரு காட்சி.. தன் உடலின் இயற்கை மாற்றத்தைப்பற்றித் தெரிந்து கொள்ளவும், பேசவும் தயங்குவதுதான் பெண்ணின் உடல் ரீதியிலான பல பிரச்சினைகளுக்குக் காரணம்.
இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகித பெண்களில், 23 சதவிகிதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை. 65 சதவிகித பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிகள். இவை ஒரு பக்கம் இருக்கட்டும்… நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.
நாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும். அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு `பாலிமர் ஜெல்' எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது.
இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது. சிலர் பாலிமர் ஜெல்லுக்கு பதிலாக `செல்லுலோஸ்' என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

சானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்?
* பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத்தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பேடுகளை மாற்றி விடுங்கள்.
* நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.
* ஓர் அந்நியப் பொருளை உள்ளாடையில் வைத்திருக்கும்போது, அது தொடைகளை உரசுவதால் ஒரு சிலருக்குத் தொடைகளில் புண்கள் ஏற்படுதல், பிறப்புறுப்புப் பகுதி வறண்டு போவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கான ஆயின்மென்ட் தடவுவதன் மூலம் பாதிப்பிலிருந்து மீளலாம். நாப்கின்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உண்மையா?
* நாப்கின்களில் உள்ள 'டையாக்சின்' என்ற வேதிப்பொருளானது புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது, விலங்குகளுக்கான பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மனிதர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
* நாப்கின்களில் உள்ள 'பாலிபுரொப்பிலின்', 'பி.பி.ஏ' போன்ற வேதிப்பொருள்கள், சருமப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதும், அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாததுதான்.
* டேம்பூன் என்பவை, மாதவிடாய்க் காலங்களில் பிறப்புறுப்பின் உள்ளே பொருத்திக்கொள்ளக் கூடியவை. இவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாப்கின்களுக்கு அந்த பயம் தேவையில்லை.
* நாப்கின் குறித்த பயம் உள்ளவர்கள் சுத்தமாக துவைத்து காயவைத்த காட்டன் துணிகளை நாப்கின்களாக பயன்படுத்தலாம். அவற்றையும் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.
நாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
* மாதவிடாய் நாள்களில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகமுள்ள நாள்களில் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நலம்.
* துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை, சோப்புப் போட்டு சுடுநீரில் அலசி வெயிலில் காய வைக்கவும். பிறகு, மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.
* காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சானிட்டரி நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்?
நாப்கின்களைப் பொறுத்தவரை, அதனை பயன்படுத்துபவர்களைவிட மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகள்தான் அதிகம். ஒரு பெண் உபயோகித்துத் தூக்கி எறியும் நாப்கின் கழிவுகள், சராசரியாக ஒரு வருடத்துக்கு 150 கிலோகிராம் என்கிறது ஓர் ஆய்வு. இதில் உள்ள பிளாஸ்டிக் அடுக்குகள், மண்ணிலிருந்து முற்றிலுமாக மறைய சுமார் 800 வருடங்கள் ஆகலாம் எனக் கணக்கிட்டுள்ளனர்.
நாப்கின்களை செய்தித்தாளில் சுற்றி குப்பையில் எறியும்போது, அதைக் குப்பையிலிருந்து பிரித்தெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ரத்தத்தினால் ஏற்படக்கூடிய தொற்றுகளான 'ஹெப்பட்டைட்டிஸ் பி', 'ஹெப்பட்டைட்டிஸ் சி' போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே உபயோகித்த நாப்கின்களை நன்கு அலசி பின்பு பேப்பரில் சுற்றி வீசுவது நல்லது. முடிந்த அளவு நாப்கின்களை 'இன்சினிரேஷன்' என சொல்லக்கூடிய முறையில் எரித்துச் சாம்பலாக்கி அப்புறப்படுத்துவது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும்.
ஹேப்பி பீரியட்ஸ்!
ரத்தக்கசிவு வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் சில பெண்கள் சிந்தெடிக் உள்ளாடைகளப் பயன்படுத்துகின்றனர். நாப்கின்களில் காட்டும் அதே கவனம் உள்ளாடைகள் விஷயத்திலும் தேவை. இறுக்கமாக இல்லாத காட்டன் உள்ளாடைகளை மட்டுமே தேர்வு செய்யுங்கள்.
அதீத சுத்தம் என்ற பெயரில் விளம்பரங்களில் காட்டப்படும் கிருமிநாசினிகளைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவுவதோ, சுடுநீரினால் சுத்தம் செய்வதோ வேண்டாம். இவை பிறப்புறுப்பின் இயல்பான அமிலத்தன்மையை மாற்றி, உடலுக்கு நல்லது செய்ய வேண்டிய சில நல்ல நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுவதோடு வறட்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும் சிறுநீர் கழித்த பிறகும், நாப்கின்களை மாற்றும் போதும் பிற்பபுறுப்பை குளிர்ந்த நீரால் கழுவினாலே போதுமானது. தொற்றுகளையும் வரவிடாமல் தடுக்கலாம்.
- மாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை.
- வெளியேறுவது அசுத்தமான ரத்தமும் இல்லை.
மாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை. அவளது உடலில் இருந்து வெளியேறுவது அசுத்தமான ரத்தமும் இல்லை. கருவாகாத ரத்தத் திசுக்களே மாதவிடாயின்போது உதிரப்போக்காக வெளியேறுகின்றன. இதை நீங்கள் உணர்வதுடன், உங்கள் பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுடன் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். `அருவருப்பாக அணுகவேண்டிய விஷயமல்ல அது' என்பதை குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்ற நாள்களைவிடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கின்போது குளிக்கக் கூடாது என்றொரு நம்பிக்கை அந்த நாள்களில் இருந்தது. அப்போது குளங்களில் குளிப்பார்கள் என்பதால் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். மாதவிலக்கின்போது இருவேளை குளிப்பது உடலைச் சுத்தமாக்குவதுடன், ரிலாக்ஸ் செய்யும், வலிகளையும் குறைக்கும்.
சுகாதாரமான நாப்கின்கள் உபயோகிப்பது, சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தமின்றி இருப்பது போன்றவையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தினமும் இருவேளை குளிப்பது, ரத்தப் போக்கு இருக்கிறதோ, இல்லையோ குறிப்பிட்ட இடைவெளிகளில் நாப்கின்களை மாற்றுவது, சிறுநீர், மலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் அந்தரங்க உறுப்புகளை (சோப் உபயோகிக்காமல்) சுத்தமான தண்ணீர்கொண்டு கழுவுவது, தொடைப் பகுதியையும் அந்தரங்க உறுப்பையும் ஈரமின்றி வைத்துக்கொள்வது… இவை அனைத்தும் மாதவிலக்கு நாள்களில் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்.

பிறப்புறுப்புக்குத் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை இயல்பிலேயே உண்டு என்பதால், அதற்கெனப் பிரத்யேக சோப் அல்லது திரவம் உபயோகிக்கத் தேவையில்லை. உபயோகித்ததும் தூக்கியெறியக்கூடிய சானிட்டரி நாப்கின்கள், துவைத்து மீண்டும் உபயோகிக்கும் காட்டன் பேடுகள், டாம்பூன்கள், மென்ஸ்ட்ருவல் கப் என எதை வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.
எதை உபயோகிப்பதானாலும், அதிகபட்ச சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேடுகள், கப் போன்றவற்றை முறையாகச் சுத்தப்படுத்தியே உபயோகிக்க வேண்டும்.
ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கொரு முறையும் நாப்கினை மாற்ற வேண்டும். மீண்டும் உபயோகிக்கும் காட்டன் பேடுகளை லேசான உப்பு கலந்த குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். `பொதுவாக உள்ளாடைகளையே வெந்நீரில்தானே துவைத்து உபயோகிக்கச் சொல்வார்கள்…
நீங்கள் குளிர்ந்த தண்ணீரில் உபயோகிக்கச் சொல்கிறீர்களே' என்கிற கேள்வி எழலாம். வெந்நீரில் ஊறவைத்தால் ரத்தக் கறைகள் அப்படியே நாப்கினில் படிந்து நிரந்தரமாகிவிடும். ஊறியதும் நன்கு அலசி வெயிலில் உலர்த்தியே பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியானது இயற்கையான கிருமிநாசினியாகச் செயல்பட்டு, பாக்டீரியாவையும் துர்நாற்றத்தையும் நீக்கிவிடும்.
டாம்பூன்களை ஆறு மணி நேரத்துக்கு மேல் அந்தரங்க உறுப்பினுள் வைத்திருக்கக் கூடாது. நீண்ட நேரம் உபயோகிப்பதன் விளைவாக `டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்' என்கிற அரிய வகை பிரச்சினை ஏற்படலாம். இது ஒருவகையான பாக்டீரியா தொற்று. காய்ச்சல், சரும அலர்ஜி, குறை ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது.
மாதவிலக்கின் போது பயன்படுத்தும் நாப்கின்கள், டாம்பூன்களை உபயோகிப்பதில் இருக்க வேண்டிய அதிகபட்ச கவனமானது அவற்றை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் அவற்றை டாய்லெட்டினுள் போட்டு ஃப்ளஷ் செய்யக் கூடாது. உபயோகித்ததும் அவற்றை வேஸ்ட் பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும்.
அந்த குப்பைத் தொட்டியை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். நீண்ட நேரம் குப்பைத் தொட்டியில் கிடக்கும் உபயோகித்த நாப்கின்கள் கிருமித் தொற்றை ஏற்படுத்தும். அது வேறுவிதமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். ஈக்களும் கொசுக்களும் அவற்றை மொய்த்தால் தேவையற்ற நோய்கள் பரவும்.
நாப்கின் உபயோகிப்பதால் சிலருக்கு அலர்ஜி வரலாம். கடுமையான அரிப்பு, அதன் காரணமாக சருமம் சிவந்து புண்ணாவது போன்றவை ஏற்படலாம். அலர்ஜிக்கான காரணத்தை சரும மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சையின் மூலம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்






