கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும் வழிகள்

கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும். மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும் வழிகள்
Published on

சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகும். இதை கர்ப்பகால சர்க்கரை நோய் என்கிறோம்.

ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது, தினமும் மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்து கர்ப்ப கால சர்க்கரை நோயை சமாளிக்க சிலருக்கு இன்சுலின் மருந்து தேவைப்படும். இதற்கு தகுந்தசிகிச்சை அளிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் தாய்க்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

கர்ப்பகாலத்தின் 24 மற்றும் 28 வாரங்களுக்கு இடையில்தான் பல பெண்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதுவரை சர்க்கரை நோய் இல்லாத பெண்களுக்கும் கர்ப்பகாலத்தின்போது இந்த நோய் உண்டாகலாம். 2 முதல் 10 சதவீத பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாவது, வளர்சிதை மாற்றம் குறைவது போன்ற காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது.

உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்று 'இன்சுலின். இது நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சர்க்கரை மூலக்கூறுகளை உடைத்து ஆற்றலாக மாற்றி செல்களுக்கு வழங்கும். இதன்மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஆரோக்கியமான அளவில் வைத்திருக்கும்.

உடலில் உள்ள இன்சுலின் சரியாக வேலை செய்யாவிட்டாலோ, போதுமான அளவு சுரக்காவிட்டாலோ ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால்தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

 கர்ப்பகாலத்தின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இன்சுலின் சுரப்பும் பாதிக்கப்படலாம். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ள பெண்களுக்கும். மரபுரீதியாகவும் கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்பகால சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், முதல் 8 வாரங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த காலகட்டத்தில் தான் குழந்தையின் மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், குழந்தையின் மூளை மற்றும் நரம்பியல் வளர்ச்சி 0.003 சதவீதம் வரை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே கர்ப்பம் தரிப்பதற்கு முன்னதாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சத்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழுத்தானியங்கள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்ப்பது, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவது போன்றவற்றின் மூலம் கர்ப்பகால சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com