search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பாலியஸ்டர் துணிகளை உடுத்துவது நல்லதா...?
    X

    பாலியஸ்டர் துணிகளை உடுத்துவது நல்லதா...?

    • பலரும் பாலியஸ்டர் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.
    • உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பாலியஸ்டர் துணிகள்.

    பேஷன், வடிவமைப்பு, உபயோகம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பாலியஸ்டர் துணிகள். இது பருத்தி அல்லது கம்பளி போன்ற இயற்கை துணி ரகங்களை சேர்ந்தது இல்லை. பாலிமர் சேர்மங்கள் கொண்டு தயாரிக்கப்படும் செயற்கை இழைகளால் ஆனது.

    சுருக்கங்கள் ஏற்படாதது, கச்சிதமான வடிவத்தை கொடுப்பது. நீண்ட நாட்கள் நீடித்து உழைப்பது, துவைப்பதற்கு எளிதாக இருப்பது, துவைத்தவுடன் விரைவாக உலர்வது, குறைவான விலை போன்ற காரணங்களால் பலரும் பாலியஸ்டர் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.

    அதேசமயம் காற்றோட்டம் குறைவாக இருப்பது, ஈரப்பதத்தை உறிஞ்சாமல் தக்கவைப்பது போன்ற குறைபாடுகளும் பாலியஸ்டர் துணிகளில் உள்ளன. இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சருமத்துக்கு பல பாதிப்புகளை உண்டாக்கக்கூடும். அதைப் பற்றிய தகவல்கள் இங்கே...

    பாலியஸ்டர் ஆடைகளை நீண்டநேரம் அணியும்போது வியர்வை வெளியேற முடியாத காரணத்தால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகும். இதன்மூலம் பல்வேறு சரும பாதிப்புகள் ஏற்படும். கோடைகாலத்தில் பாலியஸ்டர் துணிகள் அணிவதற்கு ஏற்றவை அல்ல.

    பாலியஸ்டர் இழைகள் அடிப்படையில் பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் ஆனவை. தொடர்ச்சியாக பாலியஸ்டர் ஆடைகள் அணிவதால் சருமத்துக்கு காற்றோட்டம் மிகவும் குறைவாகவே கிடைக்கும். சருமத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை எளிதில் குணமடையாது.

    பாலியஸ்டர் துணிகளின் உற்பத்தியின் போது சேர்க்கப்படும் ரசாயனங்கள் தொடர்ச்சியாக சருமத்தில் படியும்போது பல்வேறு சரும பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். பாலியஸ்டர் துணிகளில் உள்ள இழைகள் கண்களிலும், முக்கிலும் உரசும்போது எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

    பாலியஸ்டர் துணிகளை உற்பத்தி செய்யும்போது அதில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் காற்றையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும். இது மக்கும் தன்மை உடையது அல்ல. பாலியஸ்டர் துணிகள் மண்ணில் புதைந்து மக்குவதற்கு 50 ஆண்டுகளுக்கும் அதிகமான காலஅளவு தேவைப்படும்.

    விலை குறைவு, உற்பத்தி அதிகம் என்பதால் இந்த துணி அதிகமான அளவில் பயன்படுத்தி தூக்கியெறியப்படுகிறது. இதுவே அதிக அளவில் கழிவுப்பொருளாக சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாகிறது.

    பாலியஸ்டர் துணிகள் நெருப்பில் படும்போது விரைவாக பொசுங்கும் தன்மை கொண்டவை. இது உடலில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். நெருப்பு படும் போது தோலுடன் ஒட்டிக்கொள்ளக் கூடியது.

    புதுத்துணிகளை துவைத்த பின்பு அணிவது நல்லது

    ஆடைகள் தயாரிப்பின்போது சேர்க்கப்படும் ரசாயனங்கள் சரும பாதிப்புகளை உண்டாக்கக்கூடும். துணிகளுடன் சேர்க்கப்படும் சில சாயங்கள் துணி இழைகளுடன் சேராமல் தனித்து நிற்கும். இவை சருமத்துடன் கலப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே புதுத்துணிகளை வாங்கியதும் நன்றாக துவைத்த பின்பு அணிவதே நல்லது.

    புதுத்துணிகளை துவைத்தபின்பு அணிவதால் தொழிற்சாலை சூழ்நிலையில் படியும் தூசிகள் அல்லது எச்சங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

    புத்தாடைகளை அணிவதற்கு முன்பு துவைப்பது அவற்றின் ஆயுளை நீட்டிக்க உதவும். மேலும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் ஆடைகள் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கவும் உதவும்.

    Next Story
    ×