search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ornamental plants"

    • லாவண்டர் செடி, மகரந்த சேர்க்கைக்கு வித்திடும் குணாதிசயம் கொண்டது.
    • வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல நறுமணமும் கொண்டது.

    வீட்டில் செடிகள் வளர்க்க ஆசைப்படுபவர்கள், தாங்கள் நிர்வகிக்கும் மினி தோட்டத்தில் லாவண்டர் செடியையும் நிச்சயம் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    வசீகரிக்கும் நறுமணம்

    லாவண்டர் செடி வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல நறுமணமும் கொண்டது. அதன் பூக்கள் இனிமையான வாசனை தரக்கூடியவை. அவற்றை நுகர்வது மனதை தளர்வடையச் செய்யும். மனதையும் சாந்தப்படுத்தி அமைதியடையச் செய்யும்.

    வீட்டுத்தோட்டத்தில் லாவண்டர் செடியை வளர்த்தால் அதன் நறுமணம் ஒட்டுமொத்த தோட்டத்திலும் பரவி இருக்கும். அங்கு சென்றாலே இனிமையான சூழலை உணர முடியும். லாவண்டர் பூக்களை வீட்டின் உள் அறைகளில் ரோஜா மலர் இதழ்களை போல் உதிர்த்து, அலங்கரித்து வைத்தால் அதன் வாசனை வீடெங்கும் பரவி புத்துணர்ச்சியூட்டும்.

     மகரந்த சேர்க்கைக்கு வித்திடும்

    லாவண்டர் செடி, மகரந்த சேர்க்கைக்கு வித்திடும் குணாதிசயம் கொண்டது. தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் உள்பட செடிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை உங்கள் தோட்டத்திற்கு வர வழைத்துவிடும். லாவண்டர் செடியை வளர்ப்பதன் மூலம் தோட்டச் செடிகள் பூத்துக்குலுங்கி காய்ப்பதற்கு அத்தியாவசிய தேவையான மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு நீங்கள் புகலிடத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இப்படி மற்ற தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்த செடி முக்கிய பங்கு வகிக்கிறது. மகரந்தச் சேர்க்கை தடையின்றி நடைபெறுவதன் மூலம் காய்கறிகள், பழங்கள் விளைச்சல் அதிகரிப்பதற்கு வித்திடக்கூடியது.

    அழகான அலங்கார செடி

    லாவண்டர் நறுமண செடி மட்டுமல்ல, அற்புதமான அலங்கார தாவரமாகும். அதன் மெல்லிய, வெளிர் பச்சை நிற பசுமையான தண்டு, வெள்ளை மற்றும் ஊதா நிறம் கலந்த பூக்களின் அடுக்கடுக்கான கிளை பகுதிகள் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும். லாவண்டர் செடியை அழகான பூந்தொட்டிகளில் நட்டு வளர்த்தால் இன்னும் வசீகரமாக தோற்றமளிக்கும்.

      மருத்துவ பயன்பாடு

    லாவண்டர் அரோமாதெரபி மற்றும் மருத்துவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கிறது. லாவண்டர் பூக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டது. மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் அரோமாதெரபியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. லாவண்டர் எண்ணெய்யை சரும எரிச்சல் மற்றும் சிறிய வெட்டுக்காயங்களுக்கு பயன்படுத்தலாம்.

    குறைந்த பராமரிப்பு

    செடிகளை பராமரிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு லாவண்டர் சரியான தேர்வாக அமையும். இது ஓரளவுக்கு வறட்சியை தாங்கக்கூடியது. அதனால் குறைந்தபட்ச கவனிப்பு முறையை கையாண்டாலே போதுமானது. சூரிய ஒளியை அது விரும்பும். வெயில் உக்கிரமாக இருந்தாலும் கூட தாக்குப்பிடித்து வளரக்கூடியது. அதனால் அதிக வெயில், வறண்ட கால நிலை நிலவும் பகுதிகளில் வளர்க்க ஏற்றது. பூக்கள் பூத்த பிறகு நேர்த்தியாக கத்தரித்துவிட்டால் ஒரே அளவில் வடிவம் மாறாமல் அழகுற வளரக்கூடியது.

     தூக்கத்திற்கு உதவும்

    லாவண்டரின் அமைதியான பண்புகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் லாவண்டர் செடியை வைப்பது, டிப்யூசர் எனப்படும் உமிழும் கருவியில் லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்துவது நிம்மதியான தூக்கத்திற்கு பங்களிக்கும். அமைதியான வாசனையை அனுபவிக்க விரும்பினாலும், மகரந்த சேர்க்கைக்கு நன்மை பயக்கும் பூச்சிகளை வரவழைக்க முயற்சித்தாலும் லாவண்டர் உங்கள் வீட்டுத்தோட்டத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

    • உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியை செய்கின்றன.
    • அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது.

    வீட்டின் அறைகளை அழகுபடுத்தும் அம்சங்களில் ஒன்றாக உள் அலங்காரச் செடிகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவை அழகியல் நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்டாலும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. சில உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றன. அந்த வகையில் மன நிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை சில உள் அலங்காரச் செடிகளுக்கு இருக்கிறது. அமைதிக்கும், மகிழ்ச்சியான மன நிலைக்கும் வித்திடும் அம்சங்களை கொண்ட உள் அலங்காரச் செடிகள் உங்கள் பார்வைக்கு...

    பீஸ் லில்லி

    இதன் பெயருக்கேற்பவே அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது. இதில் மலரும் வெள்ளை நிற பூக்கள் மனதை வசீகரிக்கும். உணர்வுகளை சாந்தப்படுத்தும். காற்றின் தரத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

    மணி பிளாண்ட்

    `டெவில்ஸ் ஐவி' என்று அழைக்கப்படும் இதுஅதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இதனை எளிதாக பராமரிக்கலாம். குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரக்கூடியது.

     ஸ்பைடர் பிளாண்ட்

    காற்று மூலம் வீட்டுக்குள் சூழ்ந்திருக்கும் மாசுக்களை நீக்கும் தன்மை இந்தச் செடிக்கு உண்டு. இதனை சிறந்த காற்று சுத்திகரிப்பானாக கருதுகிறார்கள். இது வீட்டிற்கு அழகும் சேர்ப்பதோடு சுற்றுச்சூழலிலும், மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

    கோல்டன் பொத்தோஸ்

    காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களில் சிறந்ததாக கருதப்படும் இது, காற்றில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை உறிஞ்சி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. எத்தகைய கால நிலையிலும் செழித்து வளரும் திறனுடையது. இதனை வளர்த்தால் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஸ்நேக் பிளாண்ட்

    இந்த செடி காற்று சுத்திகரிப்பு பண்புகளை கொண்டது. குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும் திறன் கொண்டது. அதனால் இது சிறந்த உள் அலங்கார தாவரமாக அறியப்படுகிறது. இதனை வீட்டில் வளர்ப்பது அமைதி மற்றும் நேர்மறை உணர்வை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

     கற்றாழை

    பெரும்பாலான வீடுகளில் வீட்டின் வெளிப்பகுதியில் இவை வளர்க்கப்படுகிறது. இதுவும் உள் அலங்காரச் செடிகளுடன் இணைந்துவிட்டது. காற்றை சுத்தப்படுத்துவதோடு பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியது. மேலும் கற்றாழையை வீட்டிற்குள் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.

    லாவெண்டர்

    இது பாரம்பரிய வீட்டு தாவரமாக இல்லாவிட்டாலும் அலங்காரச் செடிகள் வரிசையில் இடம் பிடித்துவிட்டது. மற்ற உள் அலங்காரச் செடிகளை போலவே வீட்டிற்குள் செழித்து வளரும். அதன் பூக்கள் வெளியிடும் அமைதியான வாசனை மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதை தளர்வடையச் செய்து இதமான உணர்வை ஏற்படுத்தும்.

    ×