என் மலர்tooltip icon

    சமையல்

    • கேரட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • கேரட் கீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 8

    சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    * கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    * பாதாம் பருப்பை பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    * வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

    * இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.

    * தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம்.

    * சுவையான கேரட் கீர் தயார்.

    • பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று சிக்கன் சுக்கா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ

    வெங்காயம் - 1

    பட்டை - 1 துண்டு

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

    மிளகு - 2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    சோம்பு - 1 ஸ்பூன்

    இஞ்சி - 1 துண்டு

    பூண்டு - 10 பல்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * மிக்ஸியில் பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக அரைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    * ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை போட்டு வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.

    * இதற்கு சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது. தண்ணீர் சேர்க்கக்கூடாது. சிக்கனில் தண்ணீர் வற்றிய பிறகு சிறு தீயில் வைத்துக் கிளறினால் உப்பு, காரம் சிக்கனில் சேர்ந்து இருக்கும்.

    * எண்ணெய் பிரிந்து வரும் போது சிக்கனை கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் ரெடி.

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சேமியா - 2 கப்

    வெங்காயம் - 3

    பச்சைமிளகாய் - 5

    தக்காளி - 3

    பீன்ஸ் - 20

    கேரட் - 2

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தாளிக்க :

    பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், துருவிய கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு சேர்த்து வதக்கவும்.

    தேவையான அளவு உப்புடன், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.

    தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.

    சேமியா வெந்தது பொல பொல வென்று உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் புலாவ் ரெடி.

    • கோலா உருண்டைகளில் பல வகைகள் உண்டு.
    • இன்று நாம் காண இருப்பது மீன் கோலா உருண்டை.

    தேவையான பொருட்கள்

    வஞ்சிரம் மீன் - 250 கிராம்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    சோள மாவு - 2 மேஜைக்கரண்டி

    பெரிய வெங்காயம் - 1

    உருளைக்கிழங்கு - 1

    பூண்டு - 4 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி

    மிளகு தூள் - 1 சிட்டிகை

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகாய் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீன் துண்டுகள் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வேக விடவும்.

    வெந்த மீனை ஆறவிட்டு எள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.

    அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் போது கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்பொழுது ஒரு பவுலில் சோள மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை பிரெட் தூளில் நன்றாக பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பக்குவமாக பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும் மீன் கோலா உருண்டை தயார்.

    • பாசிப்பருப்பில் அதிக அளவு புரோட்டின், கால்சியம் அடங்கியுள்ளது.
    • பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.

    தேவையான பொருட்கள்

    பாசிப் பருப்பு - 1 கப்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

    பொடி செய்ய:

    தனியா- 1 கைப்பிடி

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    தாளிக்க:

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    காய்ந்த மிளகாய் - 2

    செய்முறை

    பாசிப் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

    பொடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    கடைசியாக, பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

    இப்போது சத்தான ஸ்நாக்ஸ் பாசிப் பருப்பு சுண்டல் ரெடி.

    • தயிர் சேமியா தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு.
    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 2 கப்

    வெங்காயம் - ஒன்று

    தயிர் - 2 கப்

    பால் - ஒரு கப்,

    பச்சை மிளகாய் - 3

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

    மாதுளம் முத்துக்கள், திராட்டை - விருப்பத்திற்கேற்ப

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    கடுகு - கால் டீஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,

    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,

    முந்திரி - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்கள் சேர்த்து, தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க

    வேண்டும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் சேமியா சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைக்க வேண்டும்.

    சேமியா நன்றாகக் குழையுமாறு வெந்தபின்பு எடுத்து நன்றாக ஆறவைக்க வேண்டும்.

    பிறகு அத்துடன் தயிர், பால், மாதுளம் முத்துக்கள், திராட்டை, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு பரிமாறலாம்.

    சுவையான தயிர் சேமியா ரெடி.

    குறிப்பு:

    தயிர் சேமியாவை நன்றாக குழைய விட வேண்டும் அப்போதுதான் சுவை மிகுதியாக இருக்கும்.

    • இந்த ஸ்நாக்ஸ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • இதை 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    வேர்க்கடலை - அரை கப்

    கிரீம் பிஸ்கெட் - 4

    உருகிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு

    செய்முறை

    வேர்கடலையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    கிரீம் பிஸ்கெட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 4 டீஸ்பூன் உருகிய சாக்லேட்டை சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

    பிடித்த உருண்டைகளை பிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.

    இந்த உருண்டைகளை உருகிய டார்க் சாக்லேட்டில் நன்றாக முக்கி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    இதை மீண்டும் 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான வேர்க்கடலை ஸ்டப்ஃடு சாக்லேட் பால்ஸ் ரெடி.

    • ரவையில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று எளியமுறையில் ரவா லட்டு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - ½ கிலோ

    சர்க்கரை - ½ கிலோ

    நெய் - 6 ஸ்பூன்

    முந்திரி பருப்பு - 50 கிராம்

    தேங்காய் - 1

    ஏலக்காய் - 12

    பால் - 250 மில்லி லிட்டர்

    செய்முறை:

    முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

    பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.

    அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும்.

    கைவிடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்

    பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும்.

    கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

    சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம்.

    சுவையான ரவா லட்டு தயார்.

    • பசியைத் தூண்டும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு.
    • கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.

    தேவையான பொருட்கள்

    தக்காளி - மூன்று

    வெங்காயம் - இரண்டு

    பாசுமதி அரிசி - இரண்டு கப்

    இஞ்சி - ஒரு துண்டு

    பூண்டு - எட்டு பல்

    பச்சை மிளகாய் - ஐந்து

    கொத்தமல்லி - ஒரு கட்டு

    எண்ணெய் - தேவையான அளவு

    பட்டை - ஒன்று

    லவங்கம் - ஒன்று

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும்.

    சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை கழுவிய அரிசியில் போட்டு ஊறவைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அரைத்த விழுதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கொத்தமல்லி புலாவ் ரெடி.

    • இது அனைவருக்கும் பிடித்தமான மாலை நேர சிற்றுண்டி.
    • நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை - ½ கப்

    உருளைக்கிழங்கு - 2

    சோள மாவு - 2 மேஜைக்கரண்டி

    பூண்டு பல் - 5

    சில்லி ஃப்ளேக்ஸ்- 1 மேஜைக்கரண்டி

    சாட் மசாலா - ¼ மேஜைக்கரண்டி

    வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    * பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். ( இதில் தண்ணீர் இதில் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.)

    * மிக்ஸியில் ரவையை போட்டு நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    * பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் சில்லி ஃப்ளேக்ஸ்ஸை போட்டு நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் ரவையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    * பின்னர் அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் சாட் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு அடுப்பை அணைத்து அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும். (சாட் மசாலாவை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

    * உருளைக்கிழங்கு கலவை சிறிது ஆறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் சோள மாவை போட்டு 5 நிமிடம் கைகளால் நன்கு பிசையவும்.

    * 5 நிமிடத்திற்கு பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சோள மாவை கொட்டி வைத்து கொள்ளவும்.

    * சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை எடுத்து நம் கைகளில் வைத்து தட்டி அதை கிண்ணத்தில் இருக்கும் சோள மாவில் இரு புறமும் போட்டு எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து புறங்களிலும் சமமாக தேய்க்கவும்.

    * பின்பு ஒரு பெரிய சைஸ் டம்ளர் மற்றும் அதற்கு அடுத்த சைஸ் சின்னதாக இருக்கும் டம்ளரை எடுத்து கொள்ளவும்.

    * பின்னர் நாம் தேய்த்து வைத்திருக்கும் மாவில் முதலில் பெரிய டம்ளரை வைத்து அச்சி ஏற்படுத்தவும், பின்பு சிறிய சைஸ் டம்ளரை நாம் ஏற்படுத்திய அச்சின் உள்ளே வைத்து இன்னொரு அச்சியை ஏற்படுத்தி அதில் வரும் ரிங்ஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    * இவ்வாறு மீதமுள்ள ரிங்ஸ்களை செய்து எடுத்து ஒரு தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

    * இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்திருக்கும் ரிங்ஸ்களை போட்டு பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

    * சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் தயார்

    • பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் இந்த அல்வா மிகவும் பிரபலம்.
    • இதை பஞ்சாபில் Gajar ka halwa என்று அழைக்கின்றார்கள்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய கேரட் - 3 கப்

    சர்க்கரை தலை தட்டி - 1 கப்

    பால் கோவா - 1/4 கப்

    நெய் - 1/2 கப்

    உலர் திராட்சை - 1 மேஜைக்கரண்டி

    முந்திரி - 1 மேஜைக்கரண்டி

    பாதாம் - 1 மேஜைக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி

    தேவையான அளவு - எண்ணெய்

    செய்முறை :

    * முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப்புக்கும் சிறிதளவு கூடுதலான நெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    * எண்ணெய் சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து வைக்கவும்.

    * அடுத்து அதில் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டுபச்சை வாசம் போய் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். (இது சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை எடுக்கலாம்.)

    * கேரட் வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் பால் கோவாவை போட்டு நன்கு கேரட்டோடு ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளவும்.

    * சர்க்கரை ஓரளவிற்கு உருகியதும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.

    * அடுத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யை இதில் சேர்த்து கிளறி விடவும்.

    * மிக கவனமாக அல்வா இளகிய பதம் இருக்கும் போதே இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய பாதாம் துண்டுகளை அதன் மேலே தூவி சிறிது நேரம் ஆற விட்டு பரிமாறவும். (அல்வாவை சுருளாக வதக்கி விட கூடாது. அப்படி செய்தால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பத்தாவது நிமிடத்தில் அல்வா இறுகி கட்டியாகி விடும்.)

    * இப்பொழுது சூடான மற்றும் சுவையான கேரட் அல்வா தயார்.

    • நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.
    • புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீா் - 500 கிராம்

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    வெங்காயம் - 4

    பச்சை மிளகாய் - 7

    கறிவேப்பிலை - 2 கொத்து

    பூண்டு, பூண்டு விழுது - 1 ½மேஜைக்கரண்டி

    சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    உருளைக்கிழங்கு - 3

    பொரிக்க தேவையான பொருட்கள்:

    சோள மாவு - 4 மேஜைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    பிரெட் தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சோம்பு, கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும்.

    மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.

    பின்பு பன்னீர் கலவையை மசித்த உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.

    பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும்.

    பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.

    கட்லெட்டுகளை சோளமாவுக் கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

    ×