என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக விளக்குங்கள். உங்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
    ஒரு விவாகரத்தில், மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகள்தான், ஏனெனில் ஒரு தவறும் செய்யாமலே, இரண்டு பெற்றோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு ஆளாவது அவர்கள்தான். ஒன்று அல்லது இரண்டு பெற்றோரிடம் இருந்தும் உணர்வு ரீதியாக விலகி இருப்பதால், அவர்கள் ஏராளமான, ஆழமான சோகத்திற்கு ஆளாகின்றனர். 

    குழந்தைகளுடன் போதுமான அளவு நேரத்தை முறையாக நீங்கள் ஒதுக்க வேண்டும், அவர்களுடைய தினசரி வழக்கங்கள் செயல்பாடுகளில் நீங்கள் அதிக ஆர்வமும் அக்கறையும் செலுத்த வேண்டும். அவர்களுடன் விளையாட நேரம் ஒதுக்குங்கள், தாய்-குழந்தைக்குமான பிரத்யேக உறவை உருவாக்க போதுமான விசேஷ நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பெரும்பாலான சிறு குழந்தைகளுக்கு, தங்கள் பெற்றோர்கள் ஏன் பிரிந்து போகின்றனர் என்று புரிவதில்லை, வளர்ந்த குழந்தைகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். நேரம் எடுத்து, பொறுமையாக அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

    உங்கள் குழந்தைகள் உங்களை நம்புவதற்கு அடிப்படையாக இருப்பது, இரண்டு பெற்றோரும் ஒன்றாக இருக்கும்போது பாதுகாப்பாக உணர்வதே. உங்களுக்கு இடையே எந்த வேறுபாடுகள் பிரச்சனைகள் இருந்தாலும், புதிய கண்ணோட்டத்துடன் இருந்திடுங்கள். உங்கள் குழந்தையின் மேல் அக்கறை காட்டுவதே உங்களுக்கான புதிய இலக்காக இருக்க வேண்டும்.அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள், வேடிக்கை காட்டுங்கள். உங்கள் முன்னாள் கணவருடன் இணக்கமான உறவு இருந்தால், சில வாரங்களுக்கு ஒருமுறை இருவரும் சேர்ந்து குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டமிடுங்கள். வெளியே செல்லும்போது, குழந்தையின் மனதில் பெற்றோர் நம்மை கஷ்டப்படுத்திவிட்டனர் என்று நினைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் வாழ்க்கையில் புதிய நபர்கள் அறிமுகமாகும்போது, அதாவது உங்களுக்கோ, உங்கள் துணைவருக்கோ புதிய வாழ்க்கைத் துணை வரும்போது, அவர்களை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் அவர்களைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அன்பாகவும் அரவணைப்பாகவும் உணர்த்திடுங்கள்.
    குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.
    1. அதிக கட்டுப்பாடு

    தினமும் துல்லியமாக குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவைப்பது- அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விழித்தாகவேண்டும் என்பது- டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க நேரம் ஒதுக்குவது- குறிப்பிட்ட நேரத்தில் படித்துதான் ஆகவேண்டும் என்பது, போன்று குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. அதை குழந்தைகள் மீறும்போது தண்டனை வழங்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.

    இத்தகைய பெற்றோரிடம் அடக்குமுறை உணர்வுதான் மேலோங்கியிருக்கும். அன்பு இருக்காது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், அவர்களை பொம்மைபோன்று நினைத்துக்கொண்டு அவர்களை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க முயற்சிப்பார்கள். தங்கள் விருப்பப்படியே குழந்தைகள் வளரவேண்டும் என்றும் இத்தகைய பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள்.

    எதிர்விளைவுகள்

    இப்படி அடக்குமுறைக்கு உள்ளாகி வளரும் குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோரின் அடக்குமுறை சுபாவத்திற்கு பதிலடி கொடுக்கத்தொடங்கும். இது குடும்பத்திற்குள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கும். அவர்களில் சிலர் மோசமான நண்பர்களால் ஈர்க்கப்பட்டு போதைப் பொருள் பழக்கத்திற்கும் உள்ளாகிவிடக்கூடும். அதுவரை கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்ந்து வருகிறவர்களுக்கு டீன்ஏஜில் சுதந்திரம் கொடுக்கும்போது, அவர்கள் அளவற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முயற்சிப்பார்கள். எல்லையற்ற சுதந்திரத்தை திடீரென்று அனுபவிக்கும் இவர்களிடம் நள்ளிரவில் ஊர் சுற்றுதல், வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடுதல், அதிக வேகத்தில் கார் ஓட்டுதல் போன்ற முரண்பாடான பழக்கவழக்கங்கள் தோன்றக்கூடும். இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.

    2. கவனிப்பின்மை

    பெற்றோர் இருவரும் வேலைபார்ப்பவர்களாக இருக்கும்போது, அவர்கள் கவனம் பெரும்பாலும் வேலையை சுற்றியே இருக்கும். அதனால் குழந்தைகளை அடுத்தவர்கள் பொறுப்பில்விட்டுவிடுவார்கள். தாத்தா-பாட்டி, உறவினர் அல்லது வேலைக்காரர் பொறுப்பில் அந்த குழந்தைகள் வளர்வார்கள். அவ்வப்போது குழந்தைகளை வந்து பார்த்துவிட்டு பரிசு பொருட்கள், பணம் போன்றவற்றை கொடுத்துவிட்டு செல்வார்கள். இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் தங்களை கவனிக்கவில்லை என்ற மனக்குறை இருந்துகொண்டிருக்கும். பெற்றோர் புறக்கணிப்பதாக கருதிவிடுவார்கள்.

    எதிர்விளைவுகள்

    பெற்றோரின் அன்பு கிடைக்காத இந்த குழந்தைகளிடம் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை இருக்காது. தாத்தா-பாட்டிகள், அவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளின் விருப்பத்திற்கெல்லாம் வளைந்துகொடுப்பார்கள். அதனால் இத்தகைய குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் தன்மை அதிகமாக இருந்துகொண்டிருக்கும். தாங்கள் விரும்பியதை சாதிக்க ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்வார்கள். குழந்தைகள் பெற்றோரால் வளர்க்கப்படும்போது அவர்களிடமிருந்து பெரும்பாலான வாழ்க்கைப்பாடங்களை பார்த்து, தெரிந்து கற்றுக்கொள்வார்கள். அந்த வாழ்வியல் அறிவு குழந்தைகளுக்கு மிக அவசியம். வேலைக்காரர்களிடமோ, மற்றவர்களிடமோ வளரும் குழந்தைகளுக்கு அத்தகைய வாழ்க்கைப் பாடங்கள் அரைகுறையாகத்தான் கிடைக்கும்.

    பெற்றோரின் முழு கவனிப்பு கிடைக்காத குழந்தைகள், நண்பர்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். நண்பர்களின் பழக்கவழக்கங்கள் அவர்களிடம் உருவாகும். நல்ல நண்பர்கள் கிடைத்தால் அது அதிர்ஷ்டம். தவறான நண்பர்கள் கிடைத்தால் முரண்பாடான பாதைக்கு அவர்களை இழுத்துச்சென்றுவிடுவார்கள்.

    3. பொறுப்பின்மை

    குழந்தைகளின் அனைத்து செயல்களுக்கும் விலை நிர்ணயிக்கக்கூடாது. அதாவது படிப்பதற்கு சாக்லேட் கொடுப்பது, பரீட்சை நன்றாக எழுதுவதற்கு புதிய ஷூ வாங்கிக்கொடுப்பது போன்ற பழக்கங்களை உருவாக்குவது பொறுப்பற்ற செயலாகும். இந்த நிலை நீடித்தால் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு தக்கபடியான பொருட்களை கேட்கத்தொடங்கிவிடும். அது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

    எதிர்விளைவுகள்

    குழந்தைகளிடம் ‘படிப்பதும், பரீட்சை எழுதுவதும் அவர்கள் எதிர்காலம் சிறந்து விளங்குவதற்காக செய்யப்படும் செயல்’ என்பதை உணர்த்தவேண்டும். அப்படியானால்தான் அவர்களிடம் பொறுப்பு உருவாகும். கிடைக்கும் சாக்லேட்டுக்காகவும், ஷூவுக்காகவும் குழந்தைகள் வேலைபார்க்கத் தொடங்கிவிட்டால், அது அவர்களது எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும். 
    தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும். நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளின் பாதிப்பு இருக்கும்.
    குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். ஆனால், அனைத்து உறுப்புகளையும் சாதாரணமான முறையில் சுத்தம் செய்ய முடியாது. சில கவன முறைகள் அவசியமாகிறது. சில உறுப்புகளை மிதமான, கவனமான முறையில் கையாள்வதே நல்லது. அந்த வகையில் நாக்கு மற்றும் காதுகளை எவ்வாறு சுத்தம் செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.

    பொதுவாகப் பற்கள், ஈறுகளை சுத்தம் செய்ய கவனம் செலுத்துவோமே தவிர நாக்கை விட்டு விடுவோம். தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும். குழந்தை சிரிக்கும்போது நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தால், குழந்தை முகத்தைத் திருப்பிக்கொள்ளும். தாங்களாக வலுகட்டாயமாக நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தாலும் குழந்தை காண்பிக்காது.ஆனால், நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளின் பாதிப்பு இருக்கும்.

    நாக்கை சுத்தம் செய்ய டிப்ஸ்

    சுத்தமான, சாஃப்டான துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். இளஞ்சூடான தண்ணீரில் துண்டை நனைத்துக் கொள்ளுங்கள். நனைத்த துண்டை, உங்கள் விரலில் சுற்றி குழந்தையின் நாக்கை சுத்தப்படுத்துங்கள். தண்ணீர் மிகவும் சூடாக இருக்க கூடாது. எப்போதும் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்ய எளிமையான வழி, குழந்தையின் கீழ் உதடை கீழ் நோக்கி ஹோல்ட் செய்த பின் நாக்கை சுத்தப்படுத்துங்கள்.

    சில குழந்தைகளுக்கு நாக்கில் மாவு போல மிக அழுத்தமாக ஒட்டி இருக்கும். அதை எடுக்க, இளஞ்சூடான நீரில் சிறிதளவு கல்லுப்பு போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் துண்டை நனைத்து குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யலாம். அழுத்தமான மாவு போல ஒட்டியிருப்பதும் நீங்கும். கவனம். குழந்தையின் நாக்கு மிகவும் மென்மையானது என்பதால் மிதமான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்யுங்கள். பால், உணவு சாப்பிட்ட பிறகு குழந்தையின் கன்னம், வாய், பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவை சுத்தம் செய்யலாம்.

    குழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா... நிச்சயம்... நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.
    குழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம். குழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம்; சுத்தம் செய்யலாம்.

    நகத்தை வெட்டுகிறேன் என்று குழந்தையின் சதைப் பகுதியை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு நகத்தை வெட்டுவது சரி. நகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடையின் நூலில் குழந்தையின் சின்ன சிறு விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள். சில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

    அவர்களுக்கு நகம் கட் செய்யும் போது, உதவிக்கு ஒரு நபரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப, இன்னொருவர் குழந்தையின் நகங்களை சுத்தம் செய்யலாம். நகம் கட் செய்யும்போது, தவறுதலாக, தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ ரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அதை அப்படியே அழுத்திப் பிடியுங்கள். மிதமாக அழுத்திப் பிடிக்கவும்.

    சில அம்மாக்கள் குழந்தையின் நகங்களை தன் வாயால் கட் செய்வார்கள். இது தவறு. அப்படி செய்ய கூடாது. இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் கிருமி பாதிப்புகள் வரும்.
    காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.
    குழந்தைகளின் காதுகள் மிகவும் சென்சிடிவ்வான உறுப்பு. காது வலி வந்தால்தான் தெரியும். அந்த வலி மிகவும் கொடுமையானது என்று. காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.

    காதுகளை சுத்தம் செய்ய டிப்ஸ்…

    முதலாவதாக, தெரிந்து கொள்ளுங்கள். பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் என எதுவும் குழந்தைக்கு பயன்படுத்தவே கூடாது. இதெல்லாம் குழந்தையின் சின்ன காதுகளைப் பாதிக்கும். எந்தவித கூர்மையான பொருட்களையும் குழந்தையின் காது அருகில் தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள். டவல் (துண்டு), ஒரு முனையை எடுத்துக்கொண்டு அதை மெல்லியதாக உருட்டி, குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம்.

    குழந்தை குளித்த பின் செய்ய வேண்டிய முறை இது. குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும். சோப் பயன்படுத்தவே கூடாது. காதுகளின் உள் மடலையும் வெளி காதையும் மென்மையான, ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறை குழந்தை குளித்த பின்னும் துண்டால் காதின் ஈரத்தை ஒத்தி ஒத்தி எடுக்கலாம்.

    குழந்தை காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.

    பச்சிளம் குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். அந்த வகையில் பச்சிளம் குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள். பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும்.

    வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும். 0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம். 1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம். பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை. பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள். காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும். ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

    இதையும் படிக்க: 3 மற்றும் 4 மாத குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்? ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
    கொரோனா நோய்த்தொற்றுவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு செலுத்தும் கவனத்தை நிமோனியா மீதும் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் நிமோனியா பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள்.
    கொரோனா நோய்த்தொற்றுவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு செலுத்தும் கவனத்தை நிமோனியா மீதும் செலுத்த வேண்டும். இதுவும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பருவகால நோய் தொற்று வகையை சார்ந்தது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கைபடி, ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் நிமோனியா பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள். நிமோனியா பல்வேறு வழிகளில் பரவக்கூடும். குறிப்பாக குழந்தைகளின் மூக்கு, தொண்டையில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஊடுருவி மூச்சை உள் இழுக்கும்போது அவை நுரையீரலுக்குள் நுழைந்துவிடும். பின்னர் இருமல், தும்மல் போன்ற பாதிப்பை உண்டாக்கும்.

    உடலில் குளிர்ச்சித்தன்மை, காய்ச்சல், மார்பு வலி, சளி, இருமல், சுவாசிப்பதற்கு சிரமம் அல்லது வேகமாக சுவாசிக்கும் நிலை, வழக்கத்தைவிட கடும் சோர்வு, வெறித்தனமான நடத்தை போன்றவை நிமோனியாவுக்கான பொதுவான அறிகுறிகளாகும். அவற்றை கவனத்தில் கொள்ளாவிட்டால் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

    குழந்தைகளை தாக்கும் நிமோனியா மூன்று வகைப்படும். அவற்றுள் லேபார் நிமோனியா, நுரையீரலின் ஒரு பகுதியை பாதிக்கக்கூடும். மூச்சுக்குழாய் நிமோனியா எனும் இரண்டாவது வகை பாதிப்பு நேரும்போது குழந்தைகளின் இரு நுரையீரல்களிலும் தடிப்புகள் தோன்றும். ‘வால்கிங் நிமோனியா’ எனப்படும் மூன்றாவது வகை நிமோனியா குழந்தைகளுக்கு மந்தமான உணர்வை தோற்றுவிக்கும். தனி நபர் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிமோனியாவை தடுத்து நிறுத்திவிடலாம். குழந்தைகளை மற்ற நோய்களில் இருந்தும் காப்பாற்றிவிடலாம்.

    குழந்தைகள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. கழிப்பறையை பயன்படுத்திய பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை கழுவுவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். எங்கு சென்றாலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆனதும் நிமோனியாவை தடுக்கும் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக போட வேண்டும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக தடுப்பூசி போடலாம்.

    இதுபற்றி டாக்டர் வயோம் அகர்வால் கூறுகையில், “குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து வகையான தடுப்பூசிகளையும் போட்டுவிட வேண்டும். அடிக்கடி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும். நிமோனியாவுக்கும் வழிவகுத்துவிடும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும். வைட்டமின் ஏ, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கேரட், பால் மற்றும் காய்கறிகளை உணவில் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

    நுரையீரலில் தொற்று, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுடன் நிமோனியா பாதிப்பு உண்டாகும். நிலைமை மோசமடையாமல் ஆரம்ப நிலையிலேயே தடுத்துவிடுவதுதான் புத்திசாலித்தனம். புகைபிடிக்கும் நபர்களிடமிருந்து குழந்தைகளை விலக்கிவைக்க வேண்டும்.

    நிமோனியாவின் அறிகுறிகளை கொண்டவர்களுடன் குழந்தைகளை நெருங்கி பழக அனுமதிக்காதீர்கள். வீட்டின் தரைதளம் உள்பட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அல்லது கிருமிநாசினியால் துடைத்தெடுக்க வேண்டும். குழந்தைகளின் நகங்கள் நிறம் மாறுதல், உதடுகள் நீல நிறத்துக்கு மாறுதல், சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி, 100 டிகிரிக்கும் அதிகமாக காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
    தற்போது பகலில் வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத்தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
    மழைக்காலத்தில் வரும் பல்வேறு நோய்களால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.எனவே குழந்தைகளை எப்போதுமே கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.அதுவும் மழைக் காலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் போன்ற அனைத்தும் வர ஆரம்பித்துவிடும்.  நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருப்பது குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான்.  இதற்குக் காரணம்.ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளாகும்.

    ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி  மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி  வரலாம்.

    தற்போது பகலில் வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத்தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    மழைக்காலத்தில் தேங்கும் நீரால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, மார்புச் சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய்கள் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 102 டிகிரி காய்ச்சல் இருக்கும். வைரஸ் காய்ச்சலாக இருந்தால் உடல் வலி அதிகமாக இருக்கும்.

    ஆர்.எஸ்.வீ எனும் வைரஸ் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும்போது ப்ராங்கியோலைட்டீஸ் எனும் நுரையீரல் நோயை ஏற்படுத்தி மூச்சுத் திணறலை வர வைக்கிறது. இந்த நோய் அதிகரித்து வீசிங் ப்ராங்கைட்டீஸ் என்று சொல்லும் இளப்பு நோயாக மாறும். ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும். மழைக் காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூஞ்சை நோய்களும் வருகின்றன. அக்குள், தொடை இடுக்குகளில் பூஞ்சைக் காளான் கிருமி தாக்குவதால் படர்தாமரை நோய் வரும். இந்த படர் தாமரை உடலில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சிகப்பு நிறத்தில் தோலில் தழும்பு ஏற்பட்டு உடலில் நமைச்சல் ஏற்படும்.

    மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடுவதால், அதன் மூலம் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. இதனால் அனை வரும் ஆங்காங்ககே தேங்கும் நீரை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். தினமும் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். சளி, காயச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி குணமடைந்த பின்னர் அனுப்ப வேண்டும்.

    வீடு, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டு்ம். பாத்திரங்களில் தண் ணீர் தேங்கவிடாமல் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூடான உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அதிகமாக மழை பெய்யும்போது ஸ்வெட்டர், குளிர் தடுக்கும் சாதனங்களை பயன்படுத்தலாம். கொசுக்கடியைத் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
    குழந்தைகள் இரண்டு வயதை கடந்த பிறகு உதடு உச்சரிப்பு முதல் உண்ணும் முறை வரை ஒவ்வொரு விஷயத்தையும் பெற்றோரை பார்த்து கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.

    இருப்பினும் சில குழந்தைகள் தவழ்வது, நடக்க தொடங்குவது, வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற குழந்தை பருவ அடிப்படை விஷயங்களில் பின் தங்கி இருப்பார்கள். மற்ற குழந்தைகளை விட தாமதமாகவே கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். உதாரணமாக இரண்டு வயது குழந்தை சுமார் 50 வார்த்தைகளை சொல்லலாம். இரண்டு மூன்று வாக்கியங்களை பேசுவதற்கு முயற்சிக்கலாம். அதுவே மூன்று வயதுக்குள் உச்சரிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். வாக்கியங்களையும் சரளமாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் 3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. குழந்தைகள் பேசும் விஷயத்தில் நிறைய பேர் அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.

    ‘எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் காலதாமதமாகத்தான் பேசுவார்கள். அதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. குழந்தை தானாகவே பேச ஆரம்பித்துவிடும்’ என்று வீட்டு பெரியவர்கள் கூறிவிடுவார்கள். அதை கேட்டு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது. குறைந்தபட்சம் உங்களின் உதட்டு உச்சரிப்பை குழந்தையை கவனிக்க வைத்து பேச வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதில் முன்னேற்றம் இல்லாதபட்சத்தில் சிகிச்சை பெறுவது ஆரம்பத்திலேயே குறைபாடுகளை சரிசெய்வதற்கு உதவும். நாக்கு அல்லது வாயில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் குழந்தைகள் பேசுவதற்கு தாமதமாகும். குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.

    அன்கிலோக்ளோசியா: இந்த பிரச்சினை இருந்தால் நாக்கு வாயின் அடிப்பகுதியுடன் ஒட்டியிருந்து வார்த்தைகளை உச்சரிப்பதை தாமதமாக்கும். குழந்தைகளால் ஒருசில வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாது. குறிப்பாக எஸ், டி, எல், ஆர், இசெட், டி.எச் போன்ற வார்த்தைகளை பேசுவது கடினமாக இருக்கும்.

    நரம்பியல் குறைபாடுகள்: மூளையில் ஏற்படும் சில கோளாறுகள் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெருமூளை வாதம் மற்றும் மூளை காயம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.

    ஆட்டிசம்: மற்றவர்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் பேசுவதற்கு வார்த்தைகளை உச்சரிப்ப திலும் சிக்கல்களை எதிர்கொண்டால் ஆட்டிசம் பாதிப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பேசுவதற்கு தாமதிப்பதற்கு ஆட்டிசமும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரே வார்த்தையை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசுவது ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பேச்சு சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம்.

    செவித்திறன் குறைபாடு: காதுகேளாமை பிரச்சினை இருந்தால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். செவித்திறன் குறைபாட்டால் பேசுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    சிகிச்சை: சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை சிறிய வயதிலேயே தொடங்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு குழந்தைகள் நன்றாக பேசுவதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.

    ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அது அவர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும். படித்தும், பாடியும் காட்டி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனமாக கேட்க வேண்டும். ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்க பழக்க வேண்டும். பொம்மைகள், விளையாட்டு பொருட்களை காண்பித்தும் பேச்சாற்றலை மேம்படுத்தலாம்.
    பச்சிளம் குழந்தை சாப்பிட மறுத்தால் சிலர் நாக்கில் தேன் தடவி விடுவார்கள். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல.
    பச்சிளம் குழந்தை சாப்பிட மறுத்தால் சிலர் நாக்கில் தேன் தடவி விடுவார்கள். அழுகையை நிறுத்துவதற்கும் சிலர் தேன் கொடுப்பது வழக்கம். குழந்தையும் தேனை விரும்பி ருசிக்கும். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல. தேனில் கிளோஸ்ட்ரிடியம் போட்லினம் எனும் ஒரு பாக்டீரியம் இருக்கிறது. இந்த வகை பாக்டீரியா குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை கொண்டது.

    பச்சிளம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒரு வயதை கடந்த பிறகுதான் உருவாகும். அதுவரை குழந்தையின் உடலால், இந்தவகை பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட முடியாது. தேனில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் குழந்தையின் செரிமான அமைப்பையும் பாதிப்புக்குள்ளாக்கும். இதன் காரணமாக, குழந்தைக்கு ‘பொட்டூலிசம்’ எனும் நோய் ஏற்படக்கூடும். அதனால் குழந்தை சுவாசிப்பதில் சிக்கல் உருவாகும். அல்லது உடல் பலவீனமாகும். பொதுவாக இந்தவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மலச்சிக்கல்தான் முதல் அறிகுறியாக தென்படும். மேலும் சில அறிகுறிகளும் இருக்கின்றன.

    * குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கும். எவ்வளவோ முயற்சி செய்தாலும் அதனை அமைதிப்படுத்த முடியாது.

    * குழந்தையின் அடி வயிற்றில் வலி ஏற்படும். அந்த சமயத்தில் கையை வயிற்று பகுதியில் நகர்த்தி கொண்டே தொடர்ந்து அழுது கொண்டிருக்கும்.

    * பசியாக இருந்தாலும் பால் குடிக்காது. அதனால் குழந்தையின் உடல் பலவீனமாகும். உடல் எடையும் குறைய தொடங்கும்.

    * உடல்நிலை மோசமடையும் சூழலில் குழந்தைகள் இமைகளை இறுக்கமாக அழுத்தி கண்களை மூடத்தொடங்கும்.

    இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

    குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக ஒரு வருடமாகும் என்பதால் அதுவரை தாய்பால்தான் குழந்தையை பாதுகாக்கும். அதுதான் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள், தொற்றுநோய் கிருமிகளிடம் இருந்து குழந்தையை பாதுகாக்கும். அதனால்தான் குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவரை வேறு உணவுகள் கொடுக்கக்கூடாது. ஒரு வயதுக்கு பிறகு தேன் கொடுக்கலாம். ஆனால் மூன்று வயதுவரை குறைந்த அளவே தேன் கொடுக்க வேண்டும்.
    குழந்தையிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. குழந்தைக்கு 5 வயது ஆனவுடனேயே இந்த பழக்கத்தை அவர்களுக்கு மெல்ல கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
    தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை உங்கள் குழந்தைக்கு எடுத்துக் கூறுவது கஷ்டமான ஒன்றாக இருந்தாலும், இன்றைய சூழலில் சேமிக்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது அவசியமாகும். சேமிப்பது மிகுந்த நல்ல பழக்கமாகும். குழந்தையிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. குழந்தைக்கு 5 வயது ஆனவுடனேயே இந்த பழக்கத்தை அவர்களுக்கு மெல்ல கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அதற்கு காரணம் அந்த வயதில் தான் அவர்களுக்கு கருத்தமைவுத்திறன் வளரத் தொடங்கும்.

    சேமிப்பதைப் பற்றி குழந்தைகளுக்கு இப்படி கற்றுக் கொடுக்கலாம்…

    * இந்த டிஜிட்டல் காலத்தில் உண்டியல் வைத்திருப்பதெல்லாம் பழமையாகி இருக்கும். ஆனாலும் கூட சேமிப்பது எப்படி என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க அது இன்னமும் பயன்படுகிறது. பணத்தை சேமித்து வைத்தால், தங்களுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கான பணம் சேரும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். ஒவ்வொரு மாதமும் அவர்களின் சேமிப்பிற்காக நீங்கள் ஒரு தொகையை அவர்களிடம் வழங்கலாம். இதுவே அவர்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும். கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் பாக்கெட் மணியில் இருந்து சேமிக்க சொல்லுங்கள்.

    * சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகள் பின்பற்ற வேண்டுமானால், நீங்கள் சேமிப்பில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு உதாரணமாக விளங்க வேண்டும். உங்கள் செயல்களின் மூலமாக, சேமித்த பணத்தை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் உதாரணமாக விளங்கிடுங்கள்.

    * உங்கள் குழந்தையின் டீனேஜ் பருவத்தில் அவர்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கை திறந்து கொடுப்பது சிறந்த வழியாகும். உங்கள் குழந்தையை அவர்களாகவே வங்கிக்கு போக சொல்லி அவர்களின் கணக்கில் பணத்தைக் கட்டச் சொல்லி ஊக்குவியுங்கள். அதனால் அவர்கள் உற்சாகம் அடைந்து இந்த பழக்கத்தை தொடர்வார்கள்.

    * சீரான சேமிப்பில் ஈடுபட்டால் உங்கள் குழந்தைக்கு வெகுமதி அளியுங்கள். எவ்வளவு சேமித்துள்ளார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக, சேமிக்கும் பழக்கம் தான் இங்கு முக்கியமான ஒன்றாகும். சீரான முறையில் சிறிய தொகையை சேமிக்க குழந்தைகளுக்கு உதவினால், அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் உண்டாகும். இது அவர்களின் வாழ்க்கை முழுவதும் பயனை அளிக்கும்.
    பிறந்த குழந்தையைக் குளிக்க வைப்பதில் ஏற்படும் குழப்பமும், சந்தேகமும் இன்றளவும் நிலவுகிறது. அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.
    பிறந்த குழந்தையைக் குளிக்க வைப்பதில் ஏற்படும் குழப்பமும், சந்தேகமும் இன்றளவும் நிலவுகிறது. அதில் ஒன்று தான் எந்த நேரத்தில் குளிக்க வைக்கலாம் என்பது..எனவே அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.

    குழந்தைகளை வெப்பமான நாட்களில் காலை 9-10 மணிக்குள் குளிப்பாட்டலாம். குளிர் நாட்கள், குளிர் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளை வெயில் வந்த பிறகு குளிக்க வைக்கலாம்.

    அதேபோல் குழந்தையைக் குளிப்பாட்டும் முன்னர் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. குழந்தை குளிக்க வைத்த பிறகு பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.

    அதேபோல் குழந்தையை தினமும் குளிப்பாட்டுவது நல்லது என்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் நாட்கள் செல்ல செல்ல அதன் தோல் உரிந்து புதிய தோல் தோன்றும். எனவே அதற்கு தினமும் குளிக்க வைத்து சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது.

    குளிர் நாட்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வைக்கலாம். குளிக்க வைப்பது மட்டுமன்றி எண்ணெய் மசாஜ் அவசியம். எனவே எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டுக் குளிக்க வைப்பது நல்லது. இதை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

    எண்ணெய் தடவ செக்காடிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். அதேபோல் பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். எந்த எண்ணெயாக இருந்தாலும் அதைக் சூடாக்கி குழந்தையின் உடல் பொறுக்கும் இளஞ்சூட்டில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

    அதேபோல் தண்ணீர் சூடாக இல்லாமல் குழந்தையின் உடல் பொறுக்கும் இளஞ்சூடாக இருக்க வேண்டும். 
    ×