என் மலர்
சினிமா செய்திகள்
சிட்டிசன் மணி இயக்கத்தில் ஜெயன், மதுனிகா, சிசர் மனோகர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பெருநாளி படத்தின் விமர்சனம்.
பெருநாளி கிராமத்தை சேர்ந்த சிவா, பால் வியாபாரம் செய்கிறார். அவரது அக்காவின் மூன்று மகள்களை தனது பிள்ளைகளாக நினைத்து வளர்க்கிறார். சிவாவை அவரது அத்தை மகள் மதுனிகா காதலிக்கிறார். ஆனால் மதுனிகாவின் தந்தை அந்தோணி பழைய பகையால் காதலை எதிர்க்கிறார்.
தொழில் போட்டியால் அதே ஊரை சேர்ந்த கார்த்திக்கும், சிவாவும் அடிக்கடி மோதுகிறார்கள். சிவாவின் அக்காள் மகள் அரசியல்வாதியின் மகனை காதலிக்கிறார். அதேபோல் சிவாவின் தம்பி அரசியல்வாதி மகளை காதலிக்கிறார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் சிவா, அரசியல்வாதி வீட்டில் சம்பந்தம் பேசுகிறார்.

வில்லன் கார்த்திக்கும், அவரது தந்தையும் சிவாவை பழிவாங்க திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து சிவா தனது அக்காள் மகளின் திருமணத்தை முடித்தாரா? முறைப் பெண்ணை கரம் பிடித்தாரா? என்பது மீதிக்கதை.
அறிமுக நாயகனான ஜெயன், சிவா என்கிற கதாபாத்திரத்தில் காதல், குடும்ப உறவு, அதிரடி என கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். கதாநாயகி மதுனிகா பக்கத்து வீட்டு பெண் போல நடிப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார். நடன காட்சிகள் எடுபடவில்லை. கார்த்திக் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார். கிரேன் மனோகர், குணச்சித்திர கதாபாத்திரத்தில் கச்சிதம். அந்தோணி கதாநாயகி தந்தையாக சில காட்சிகளில் வந்தாலும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.

சிசர் மனோகர் சிரிக்க வைக்கிறார். தஷி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஆர்.குமாரின் கேமரா காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். காமெடி, காதல், குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதையை நேர்த்தியாக படமாக்கி உள்ளார். இயக்குனர் சிட்டிசன் மணி.
மொத்தத்தில் ‘பெருநாளி’ விறுவிறுப்பு குறைவு.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர், அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அனிருத், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா போன்ற பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், தரண்குமார் மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற படம் ஏற்கனவே வெளியானது. இதில் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்து இருந்தார். மேரி கோம், சர்பஜித் ஆகிய வாழ்க்கை கதைகளை இயக்கி பிரபலமான ஓமங்க் குமார் டைரக்டு செய்து இருந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தாமதமாக மே 24–ந்தேதி வெளியானது. இந்த நிலையில் நரேந்திர மோடி வாழ்க்கையை பற்றி இன்னொரு படம் தயாராக உள்ளது. இந்த படத்துக்கு ‘மன் பைராகி’ என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் ‘கர்மயோகி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு சஞ்சய் திரிபாதி திரைக்கதை எழுதி இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். நரேந்திர மோடியின் வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
‘‘இந்த படத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருந்தக்கூடிய விஷயங்கள் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் இளமை கால வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை தொகுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படமாக்குகிறேன்’’ என்று சஞ்சய் லீலா பன்சாலி கூறினார்.
ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரங்களில் எல்லை மீறிவிடுகிறது என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மிஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிங்க் படம் அஜித்குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக்கானது.
சினிமா வாழ்க்கை குறித்து டாப்சி கூறியதாவது:- ‘‘நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். நான் பிரபலமாக இருப்பது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. நட்சத்திர அந்தஸ்து என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளுக்கு தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. நான் நடிகையாவதற்கு முன்னர் தோழிகளுடன் சாலைகளில் நடந்து சென்று இருக்கிறேன்.

வணிக வளாகங்களுக்கும் சேர்ந்து செல்வோம். ஓட்டல்களை தேடி சென்று சாப்பிடுவோம். ஆனால் இப்போது அப்படி போக முடியவில்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்து இருக்கிறார்கள். சில நேரம் அந்த அன்பு எல்லை மீறி விடுகிறது. பொது இடங்களில் அவர்கள் காட்டும் அன்பினால் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எனது உடைகளை கூட வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன்.’’
இவ்வாறு டாப்சி கூறினார்.
மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்த இந்துஜா ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. சமீபத்தில் திரைக்கு வந்த 'மகாமுனி' படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது ‘சூப்பர் டூப்பர்’ என்ற படம் மூலம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்துஜாவின் கவர்ச்சியால் ‘சூப்பர் டூப்பர்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தை ஏகே இயக்கி உள்ளார்.
நடிகை ஜெயபாரதியின் கணவரும் பிரபல மலையாள நடிகருமான சத்தார் உடல் நலக்குறைவால் காலமானார்.
பிரபல மலையாள நடிகர் சத்தார் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் சத்தாருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கடுங்கல்லூரில் பிறந்த சத்தார் 1976–ல் கிருஷ்ணன் நாயர் இயக்கிய ‘பரயேயி அவஷ்யமுன்டு’ என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் வின்சென்ட் இயக்கிய ‘அனவரனம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். 1970 மற்றும் 80–களில் ஏராளமான படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

1980–களில் தமிழில் மயிலு, சவுந்தர்யமே வருக வருக உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 1979–ல் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் மகன் கிரிஷ் சத்தாரும் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கில் 300 படங்களில் சத்தார் நடித்து இருக்கிறார். அவரது உடலுக்கு நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள். கேரளாவில் இறுதி சடங்கு நடந்தது.
பிரபல பாடகியும், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துக் கொண்டவருமான என்.எஸ்.கே.ரம்யா சின்னத்திரை நடிகரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான, 'பந்தயம்' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் என்.எஸ்.கே.ரம்யா. இதை தொடர்ந்து, வேட்டைக்காரன், யான், பிரியாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

ஏற்கனவே திருமணமான என்.எஸ்.கே ரம்யா, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து தற்போது, சின்னத்திரையில் கதாநாயகனாக நடித்து வரும் சத்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமணத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை பிரபல நிறுவனம் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது.
ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார்.
அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது.
Best wishes to #RBChoudary sir @SuperGoodFilms_ on releasing #SyeRaa in Tamil Nadu on October 2#SyeRaaWithSuperGoodFilms#MegastarChiranjeevi@SrBachchan@DirSurender@KicchaSudeep@IamJagguBhai@tamannaahspeaks@KonidelaPro@RathnaveluDop#Nayanthara@CtcMediaboypic.twitter.com/qtj5bN80bk
— VijaySethupathi (@VijaySethuOffl) September 17, 2019
இந்நிலையில், இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பல வெற்றி படங்களை தயாரித்தும், வெளியிட்டிருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ‘சைரா’ படத்தின் தமிழக உரிமையை பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளை பற்றி பேசியிருக்கிறார்.
காலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது தனியார் தொலைகாட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி, சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

இவர் ஒயிட் ஷாடோஸ் நடத்திய பேஷன் ஷோவில் கலந்துக் கொண்டார். இவருடன் பிக்பாஸ் பிரபலங்கள் யாஷிகா ஆனந்த், அபிராமி, ரேஷ்மா உள்ளிட்டோரும் நடிகை மனிஷாவும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் பலரும் பங்கேற்றனர்.

அதன்பின் பேசிய சாக்ஷி அகர்வால், ‘இந்நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறவேண்டாம். சாதாரண மனிதர்களை விட சிறந்தவர்கள். அவர்கள் எல்லோரும் கடவுளின் குழந்தைகள். இது போன்ற நிகழ்ச்சியில் நான் எப்போதும் கலந்துக் கொள்வேன்’ என்றார்.
தமிழில் பருத்தி வீரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான பிரியாமணி, எத்தனை நாள் தான் ஹீரோ பின்னாலேயே ஹீரோயின்கள் சுற்றுவது என்று கூறியிருக்கிறார்.
பருத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் மூலம் தனது திறமையை நிரூபித்த பிரியாமணி திருமணத்துக்கு பின் தமிழில் நடிக்காமல் இருந்தார். இப்போது பேமிலிமேன் என்ற இணைய தொடரில் நடித்துள்ளார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி:-
இணைய தொடரில் நடித்த அனுபவம்?
மிகவும் நன்றாக இருந்தது. அமேசான் போன்ற ஒரு தளத்தில் ரிலீசாகும் தொடர் என்பதால் நல்ல வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. எனவே உடனே ஒப்புக்கொண்டேன். நடுத்தர குடும்பங்கள் தங்களை இந்த தொடருடன் எளிதில் பிணைத்துக்கொள்வார்கள். ஒரு நடுத்தர குடும்பத்து தலைவியாக நடித்துள்ளேன்.
தமிழ் சினிமாவில் எப்போது பார்க்கலாம்?
தமிழிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பே இந்த காத்திருப்புக்கு காரணம்.
சமீபகாலமாக இணைய தொடர் அதிகமாகி வருகிறதே?
ஆமாம். நல்ல விஷயம் தான். இதற்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கும். எல்லாமே டிஜிட்டலாகி வருகிறது.

சென்சார் இல்லாததும் ஒரு காரணமா?
இணைய தொடருக்கு சென்சார் இல்லாததால் வித்தியாசமான கதைகள் வருகின்றன. சினிமாவில் சொல்ல தயங்கும் விஷயங்களை இங்கே சொல்ல முடிகிறது. நான் நடித்துள்ள இந்த தொடரில் ஆபாசம் இருக்காது. குடும்பத்துடன் பார்க்க கூடியதாக இருக்கும். இதுபோன்ற தொடர்கள் இணையத்தில் வர தொடங்கினால் இணைய தொடர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
அறிமுகமாகும் நடிகைகள் எல்லாம் உங்களை தான் ரோல்மாடல் என்கிறார்கள்... தமிழை மறந்துவிட்டீர்களா?
அப்படி யாரும் சொல்கிறார்களா என்ன? இதை கேட்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் ரசிகர்களை மறக்க மாட்டேன். என் சினிமா வாழ்க்கையே தமிழ்நாட்டில் தான் தொடங்கியது. தமிழையும் தமிழ் ரசிகர்களையும் என்றுமே மறக்க மாட்டேன். சரியான வாய்ப்புகள் அமைய வேண்டும். அமைந்தால் நிச்சயம் பண்ணுவேன்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அதிகரித்துள்ளதே?
நல்ல மாற்றம். எத்தனை நாள் தான் ஹீரோ பின்னாலேயே ஹீரோயின்கள் சுற்றுவது? ஹீரோயின்களின் திறமையை காட்ட அது போன்ற படங்கள் நிறைய வரவேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்தை ஆபாச நடிகையுடன் ஒப்பிட்டு பேசியதால மிகவும் கோபமடைந்திருக்கிறார்.
நடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா, ஜாம்பி படங்களில் நடித்தவர். பிக்பாஸ் மூலம் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அதில் சிலர் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார்.

’என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கும்” என யாஷிகா கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் ரிலீஸ் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் 19ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, பிகில் படம் சென்சாருக்கு சென்ற பிறகு ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை இப்படம் குறித்து வெளியாகும் ரிலீஸ் தேதி மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றார். மேலும் இன்று 6 மணிக்கு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

இப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.






