தொழில்நுட்பம்

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - முக்கிய முடிவெடுத்த சாம்சங்

Published On 2019-04-24 06:08 GMT   |   Update On 2019-04-24 06:08 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி சாம்சங் முக்கிய முடிவெடுத்திருக்கிறது. #Samsung



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,38,314) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் வரலாற்றில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு இருக்கிறது. 

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற வகையில் வடிவமைப்பு மற்றும் புதுமையில் பலரையும் கவர்ந்த கேலக்ஸி ஃபோல்டு எளிதில் உடைந்து போன விவகாரம் விமர்சகர்கள் மற்றும் செய்தியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவின் மேல் ஒட்டப்பட்ட மெல்லிய ஸ்கிரீனை நீக்கியதும் டிஸ்ப்ளே உடைந்து செயலிழந்து போனது.



புத்தம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே உடைந்து போனதைத் தொடர்ந்து இன்று ஷாங்காயில் நடைபெற இருந்த கேலக்ஸி ஃபோல்டு வெளியீட்டு நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட இருந்தது.

பல்வேறு விமர்சகர்கள் கேலக்ஸி ஃபோல்டு டிஸ்ப்ளே எளிதில் சேதமடைவதாக தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்களை முழுமையாக புரிந்து கொள்ள உள்புற சோதனை செய்யப்பட வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக கேலக்ஸி ஃபோல்டு வெளியீட்டை தாமதப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என சாம்சங் தெரிவித்துள்ளது.

கேலக்ஸி ஃபோல்டு புதிய வெளியீட்டு தேதி வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும் டிஸ்ப்ளேவின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளவோம் என்றும் சாம்சங் தெரிவித்திருக்கிறது.
Tags:    

Similar News