தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
- நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு பூஜை நடக்கிறது.
- மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது.
தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நாளை நடக்க இருக்கிறது. நாளை காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப் பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். 9 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.
முதலில் அபிஷேகமும் அதன்பின் அலங்காரம் நடைபெறும். இதனை அடுத்து மண மகன், மணமகள் ஊர்வலம், எதிர்சேவை, சீர்வரிசை தட்டு கொண்டு வருதல் நடைபெறும். அதன்பின் மேடையில் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.
மதியம் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், இரவில் வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் மாலை வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்து வருகிறார்.