உலகம்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

Published On 2022-07-08 12:59 IST   |   Update On 2022-08-01 15:07:00 IST
2022-07-09 00:53 GMT

உக்ரைனின் டான்பாஸ் மற்றம் லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. நான்கு மேம்பட்ட ராக்கெட் அமைப்புகள் உட்பட ராணுவ உபகரணங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2022-07-08 15:23 GMT

உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. அகதிகள் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி அங்குள்ள இர்பின், புச்சா நகரங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனில் ஆயிரக்கணக்கான வீடுகளை ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் உக்ரைன் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. ரஷியா உக்ரைன்மீது போர் தொடுத்ததன் காரணமாக உலகளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

2022-07-08 12:45 GMT

உக்ரைனின் கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷியா இன்று தாக்குதல் நடத்தி உள்ளது. ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2022-07-08 12:45 GMT

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையை விமர்சித்ததற்காக ரஷியாவின் நகர கவுன்சிலர் அலெக்சி கோரினோவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கையை விமர்சித்ததற்காக தண்டனை பெறும் முதல் எதிர்க்கட்சி உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022-07-08 11:41 GMT

மாஸ்கோவில் பாராளுமன்ற தலைவர்களுடன் அதிபர் விளாடிமிர் புதின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய புதின், போர்க்களத்தில் ரஷியாவை தோற்கடிக்க வேண்டுமென மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

மேற்கத்திய நாடுகள் முயற்சித்துப் பார்க்கட்டும். கடைசி உக்ரைனியர் இருக்கும்வரை மேற்கத்திய நாடுகள் நம்முடன் சண்டையிட விரும்புவதாக நாம் கேட்டிருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு மிகவும் சோகமானது. ஆனால், இந்தப் போர் அதை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறது.

சண்டை நீண்டுகொண்டே சென்றால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே செல்லும் என தெரிவித்தார்.

2022-07-08 07:38 GMT

ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். கூட்டத்தின் இடையே, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அப்போது இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள், உக்ரைன் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி, கருத்துகளை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.

2022-07-08 07:37 GMT

ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் ரஷியாவின் வெளியுறவு மந்திரியும் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தை தொடங்கிய இந்தோனேசியா, உக்ரைனில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதுடன், பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணவேண்டுமே தவிர, போர்க்களத்தில் அல்ல என்றும் இந்தோனேசியா தெரிவித்தது. 

2022-07-08 07:37 GMT

உக்ரைனுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் எங்களுடன் போரிட வேண்டும் என்பதையே விரும்புகின்றன எனவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டி உள்ளார். போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு காலம் எங்களுடன் ஒப்பந்தம் செய்வதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் உக்ரைன் கொடியை உயர்த்தியது, தனது நாடு உடைந்துவிடாது என்பதற்கான அறிகுறி ஆகும் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

உக்ரைன் படைகள் பாம்பு தீவில் தங்கள் கொடியை உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு ரஷிய போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News