உலகம்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

Published On 2022-07-08 12:59 IST   |   Update On 2022-08-01 15:07:00 IST
2022-07-10 14:40 GMT

கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது. இந்த தாக்குதலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

2022-07-10 12:07 GMT

உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், ராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

2022-07-10 01:08 GMT

உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாண கிழக்குப் பகுதியில் முதியோர் இல்லத்தைத் ரஷியப் படைகள் தாக்கி உள்ளன. இந்த தாக்குதலில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற நோயாளிகள் உள்பட பலர் பலத்த காயம் அடைந்தனர். தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் ரஷியா கொன்றதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

2022-07-10 01:08 GMT

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 20 க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருவதாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

2022-07-10 01:06 GMT

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு சீனாவின் ஆதரவு அமெரிக்காவுடனான அந்நாட்டின் உறவில் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவில் சீன வெளியுறவு மந்திரி வாங் யீயை சந்தித்து பேசிய அவர், இரு நாடுகளும் இடையயான உறவு ஏற்கனவே பல பிரச்சினைகளால் பிளவுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது பேசிய வாங் யீ, சீனாவை அச்சுறுத்தல் விடுக்கும் நாடு என அமெரிக்கா தவறாக கருதியதால் உறவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறினார்.

2022-07-09 17:01 GMT

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான நகரங்களை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் கடுமையான போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷிய படை கைப்பற்றியது. மேலும் ரஷிய ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கில் ரஷியா ஒரு புதிய நரகத்தை உருவாக்கி வருவதாக உக்ரைனைச் சேர்ந்த மாகாண கவர்னர் செர்ஹி ஹைதை தெரிவித்துள்ளார்.

இரவு முழுவதும் ரஷிய படைகள் ராக்கெட் ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தின. தங்களால் முடிந்த அளவிற்கு ரஷிய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

2022-07-09 13:40 GMT

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷியாவுக்கு எதிராக நிற்கின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதோடு, ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ராணுவ உதவிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், எதிரியுடன் போராடுவதற்கு இது எங்களுக்கு உதவும் என கூறினார்.

2022-07-09 09:00 GMT

உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட புதிய ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளதையடுத்து, ரஷிய படைகள் இன்று உக்ரைனின் கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் இடைவிடாமல் ஷெல் தாக்குதல் நடத்துகின்றன. அருகில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நகரங்களை கைப்பற்றுவதற்கான நீண்ட கால தாக்குதலை தொடங்கி உள்ள ரஷியா, இப்போது முழு டான்பாஸ் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்த இந்த தாக்குதலை நடத்துகிறது.

2022-07-09 06:58 GMT

உக்ரைனின் தெற்கு கடற்கரை முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து ரஷியா வெளியேற வாய்ப்பில்லை என்றும், கிழக்கு டான்பாஸ் பகுதி முழுவதும் உக்ரைன் படைகளை தோற்கடிக்கும் என்றும் பிரிட்டனுக்கான ரஷிய தூதர் கூறியிருக்கிறார்.

2022-07-09 00:54 GMT

உக்ரைன் மற்றும் துருக்கியுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். எங்களிடம் அனைத்து தீர்வுகளும் உள்ளன என்றும், உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டுமென்றால், துறைமுகங்களை திறக்கவும், கண்ணிவெடிகளை அகற்றி பாதுகாப்பு வழியை உக்ரைன் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News