உலகம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பதட்டதை தணிப்பது குறித்து பரிசீலனை - பாகிஸ்தான்

Published On 2025-05-10 14:00 IST   |   Update On 2025-05-10 14:00:00 IST
  • 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை வானிலேயே அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
  • இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம்.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது.

இந்தியாவின் பதிலடியால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், பகல் முழுவதும் பதுங்கியது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 300 முதல் 400 ட்ரோன்களை இந்திய நிலைகளை நோக்கி ஏவியது. குறிப்பாக காஷ்மீரின் லே முதல் குஜராத் மாநிலம் சர்கிரீக் வரை உள்ள எல்லையோரத்தில் உள்ள 36 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது.

இவற்றையெல்லாம் நமது இந்திய ராணுவம் நடுவழியில் மறித்து ஏவுகணைகள் மூலம் அழித்தது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்திய ராணுவம் தாக்கி, வலுவான பதிலடி கொடுத்தது.

இதனிடையே நேற்று உச்சகட்டமாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை வானிலேயே அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோயிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிப்போம். பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News