உலகம்

லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

Published On 2022-06-23 17:36 IST   |   Update On 2022-07-08 06:46:00 IST
2022-06-26 16:20 GMT

அண்டை நாடான கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களின் போக்குவரத்தை தடை செய்வதில் எந்தச் சலுகையும் வழங்க லிதுவேனியா மறுத்துவிட்டது. இது ரஷியா-நேட்டோ இடையேயான மோதலை தூண்டக்கூடிய ஒரு விரிவாக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

பால்டிக் கடலில் அமைந்துள்ள கலினின்கிராட், லிதுவேனியா வழியாக ரஷியாவிற்கான ரெயில் இணைப்பையும் பரவலாகப் பயன்படுத்துகிறது. ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கி செயல்படும் லிதுவேனியா, ரஷியாவின் ஸ்டீல் மற்றும் பிற இரும்பு உலோகங்களின் போக்குவரத்தை தடைசெய்து ரெயில் பாதையை தடுத்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை பயணிகளுக்கான ரெயில் மற்றும் சரக்குகளை பாதிக்காது என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தார்.

2022-06-26 13:09 GMT

ரஷிய ஏவுகணை ராணுவ வாகனங்களை அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் ஆயுதப் படைகள் நேற்று ரஷியாவின் 6 ஏவுகணை ராக்கெட் அமைப்புகளுடன் கூடிய ராணுவ வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களை டான்பாசில் அழித்ததாக தெரிவித்துள்ளது.

2022-06-26 08:38 GMT

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பொருளாதார ரீதியாக அந்த நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், அந்நாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

ரஷியாவிடம் இருந்து தங்கம் இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 உறுப்பு நாடுகள் அறிவிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ஜி7 மாநாட்டின் கடைசி தினமான செவ்வாய்க்கிழமை இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022-06-26 07:14 GMT

இன்று அதிகாலையில் ரஷிய படைகள் உக்ரைன் தலைநகரை கடுமையாக தாக்கியது. ரஷிய படைகள் கிழக்கில் தங்கள் வெற்றியை பலப்படுத்தியது போல, தலைநகரில் இப்போது குறைந்தது இரண்டு குடியிருப்பு கட்டிடங்களை தாக்கியதாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறி உள்ளார். கட்டிடங்கள் பற்றி எரியும் நிலையில், மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

2022-06-26 07:04 GMT

அமைதி பேச்சுவார்த்தைக்கான பணிகளை மேற்கொள்ளும்படி ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் வலியுறுத்த உள்ளதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக போர்நிறுத்தத்திற்கு உத்தரவிடும்படி ரஷிய அதிபர் புதினை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2022-06-26 01:34 GMT

உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையத்தை ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அம்மாகாண அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதனால் சில கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை சேதமானதாகவும், ஆனால் அணு எரிபொருள் மற்றும் கதிர்வீச்சு வரம்பிற்குள் இருக்கும் பகுதி பாதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-06-26 01:30 GMT

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதை போன்று, அந்நாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யவும் தடை விதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பைடன் விவாதிப்பார் என தெரிகிறது. இதேபோல் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள உச்சி மாநாட்டிலும் ரஷியா மீதான தடை குறித்து அறிவிக்கப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

2022-06-26 01:29 GMT

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரம் ரஷிய ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள முன்னணி நகரங்களில் சண்டை நீடிப்பதாகவும், குண்டுவீச்சுகள் நடத்தி ரஷிய படைகள் ஆக்ரமிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் சீவிரோடோனெட்ஸ்க் நகர மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரியுக் தெரிவித்துள்ளார்.

2022-06-25 13:11 GMT

உக்ரைனுக்கு ஒரு பில்லியன் யூரோ, மானியமாக வழங்குவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. உக்ரைன் நிதி அமைச்சர் செர்ஜி மார்ச்சென்கோ மற்றும் ஜெர்மனி நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிதியானது ராணுவச் சட்ட ஆட்சியின்போது சமூக மற்றும் மனிதாபிமான செலவினங்களுக்கு பயன்படுத்தும் வகையில் உக்ரைன் பட்ஜெட்டுக்கு அனுப்பப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் கணக்கு நடைமுறையின்மூலம் இந்த நிதி அனுப்பப்படும்.

2022-06-25 13:01 GMT

உக்ரைன் முழுவதும் இன்று ஏவுகணை மழை பொழிந்தது. மேற்கு மற்றும் வடக்கில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகளை ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்கியதுடன், தெற்கு நகரத்தையும் தாக்கி உள்ளது.

Similar News