உலகம்

லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

Published On 2022-06-23 17:36 IST   |   Update On 2022-07-08 06:46:00 IST
2022-07-02 11:56 GMT

டான்பாஸ் மற்றும் மைகோலெய்வ் பகுதிகளில் உள்ள 5 உக்ரைன் ராணுவ நிலைகளை ரஷிய படைகள், துல்லியமான ஆயுதங்கள் மூலம் அழித்துள்ளதாகவும், சபோரிஜியா பகுதியில் உள்ள 3 சேமிப்பு கிடங்குகளை தாக்கியதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

2022-07-02 11:55 GMT

ரஷிய ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிரைவை உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். செர்னிஹிவ் ஒப்லாஸ்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டிரைவில், ரஷிய ராணுவத்தின் ஒரு குறிப்பிட்ட வான் பாதுகாப்பு பீரங்கி பிரிவு பணியாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் முழு விவரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

2022-07-02 09:05 GMT

உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷிய படைப்பிரிவுகளை, ரிஷிய ஆயுதப் படைகளின் தளபதி வாலரி ஜெராசிமோவ் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெராசிமோவ் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆனால், ஜெராசிமோவ் எப்போது உக்ரைனுக்கு சென்றார்? என்பது உடனடியாகத் தெரியவில்லை.

கடந்த வாரம் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு பற்றி ராணுவ அமைச்சகம் இதே போன்ற அறிக்கையை வெளியிட்டது. குறிப்பிடத்தக்கது.

2022-07-02 08:59 GMT

உக்ரைனின் மைகோலெய் நகரில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். ஒடேசாவின் கருங்கடல் துறைமுகத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், மைகோலெய்வ் நகரிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

2022-07-02 08:59 GMT

உக்ரைனுக்கு நவீன வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட புதிய ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்த அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். 

2022-07-01 23:53 GMT

உக்ரைனின் எல்லையில் உள்ள கருங்கடல் பகுதியில் பாம்பு தீவு உள்ளது. இந்த தீவை ரஷியா கைப்பற்றியது. உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் பாம்பு தீவில் இருந்து ரஷியா படைகளை கடந்த சில நாட்களுக்கு முன் திரும்பப்பெற்றது.

இந்நிலையில், பாம்பு தீவு மீது நேற்று ரஷியா போர் விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுகோய் 30 ரக போர் விமானம் மூலம் பாம்பு தீவு மீது ரஷியா போஸ்போர்ன்ஸ் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பாம்பு தீவில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டபோதும் அங்கிருந்து அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்பப்பெற முடியாததால் அதை ரஷியா குண்டுவீசி அழித்திருக்கலாம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

2022-07-01 19:20 GMT

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், தேவைப்படும் வரை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவை அளிக்கும். ரஷியா இந்தப் போரில் வெற்றி பெறாது என தெரிவித்தார்.

2022-07-01 09:03 GMT

ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது இன்று அதிகாலையில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

2022-07-01 08:42 GMT

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ரஷியா எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ள நிலையில், உக்ரைன் அரசு ருமேனியா வழியாக ஐரோப்பிய ஒன்றியப் பகுதிக்கு கணிசமான மின்சார ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

2022-07-01 08:40 GMT

ரஷியாவிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்கு உதவ பிரான்ஸ் மேலும் ஆறு CESAR துப்பாக்கிகளை விரைவில் வழங்கும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார்.

Similar News