ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது- மீண்டும் டிரம்ப் உளறல்
- இந்தியா சுமார் 38 சதவீத எண்ணெய்யை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்.
- டிரம்ப் தெரிவித்த கருத்தை இந்தியா மறுத்த நிலையில் அதை மீண்டும் தெரிவித்து உள்ளார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இது உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதையடுத்து இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது சுமூகமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார். ஆனால் இதை இந்தியா மறுத்தது.
இந்தநிலையில் ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் மீண்டும் தெரிவித்து உள்ளார்.
வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது:-
இந்தியா இனி ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்கப் போவதில்லை. இந்த செயல்முறையை உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் அது விரைவில் முடிவடையும். ஏற்கனவே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிறுத்திவிட்டனர்.
அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சுமார் 38 சதவீத எண்ணையை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்.
ஹங்கேரியில் ஒரே ஒரு குழாய்தான் உள்ளது. அங்கும் பற்றாக்குறையில் உள்ளது. அதனால் ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது" என்றார்.
ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் அந்த கருத்தை தொடர்ந்து அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் ரஷிய எண்ணை விவகாரத்தில் டிரம்ப் தெரிவித்த கருத்தை இந்தியா மறுத்த நிலையில் அதை மீண்டும் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்த தலையிடுவேன் என்று டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,"ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியதை நான் புரிந்து கொண்டாலும் அதை தீர்ப்பது எனக்கு எளிதானது. அதிபரான நான் அமெரிக்காவை நடத்த வேண்டும். ஆனால் போர்களைத் தீர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது" என்றார்.