அமெரிக்க வெளியுறவு மந்திரியை சந்திக்கிறார் ஜெய்சங்கர்
- மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டெல்லியிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.
- அங்கு அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரியை சந்திக்கிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டெல்லியிலிருந்து புறப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில்,வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ அழைப்பின் பேரில், முக்கிய தாதுக்கள் குறித்த மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி ஜெய்சங்கர் பிப்ரவரி அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநாட்டில் தூய்மையான எரிசக்தி மாற்றம் மற்றும் தாதுக்கள் விநியோகச் சங்கிலியில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் இன்று சந்திக்க உள்ளார். இந்தப் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார்.