தமிழ்நாடு செய்திகள்

மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது- வைரமுத்து

Published On 2025-09-28 08:32 IST   |   Update On 2025-09-28 08:32:00 IST
  • தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை...
  • பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா?

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கரூருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.

கரூர் சம்பவம் குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தாங்க முடியவில்லை;

இரவு என்னால்

தூங்க முடியவில்லை

மரணத்தின் படையெடுப்பால்

கரூர் கருப்பூர் ஆகிவிட்டது

அந்த மரணங்களுக்கு

முன்னும் பின்னுமான

மனிதத் துயரங்கள்

கற்பனையில் வந்து வந்து

கலங்க வைக்கின்றன

பாமரத் தமிழர்களுக்கு

இப்படி ஒரு பயங்கரமா?

இந்த வகையில்

இதுவே கடைசித் துயரமாக

இருக்கட்டும்

ஒவ்வோர் உயிருக்கும்

என் அஞ்சலி

ஒவ்வொரு குடும்பத்துக்கும்

ஆழ்ந்த இரங்கல்

இனி இப்படி நிகழாமல்

பார்த்துக் கொள்வதே

இந்த நீண்ட துயரத்துக்கு

நிரந்தர நிவாரணம்

ஆடும் உடம்பு

அடங்குவதற்கு நாளாகும்

இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News