அ.தி.மு.க.வை விரைவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலை ஏற்படும்- உதயநிதி ஸ்டாலின்
- அ.தி.மு.க. விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் போகும் நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள்.
- எடப்பாடி பழனிசாமியையும் காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர்தான் செய்வார்.
சென்னை:
சைதாப்பேட்டையில் நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் 28.75 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கல்வியும், சுகாதாரமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று முதல்வர் கூறுவார்.
கலைஞர் ஆட்சியில் சுகாதாரத்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டங்கள்தான் இன்று சென்னையை இந்தியாவின் மெடிக்கல் கேப்பிட்டல் என்று சொல்லும் அளவிற்கு சொல்ல வைத்துள்ளது.
மக்களுக்கு மருத்துவ சேவைகள் வீடு தேடி செல்ல வேண்டும் என்பதற்காக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பல்வேறு திசைகளில் இருந்து நம்முடைய அரசுக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்து வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஐ.நா. சபையின் விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது. சுகாதாரத்துறையில் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் உள்ளார் மக்களை சந்திக்கிறார். 10 நாள் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது அங்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல் என்னெல்லாம் தடங்கள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு இருந்தார்கள். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விரைவில் அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் அ.தி.மு.க.வை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும். எடப்பாடி பழனிசாமியையும் காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர்தான் செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் கால்வாயை ரூ. 30கோடி செலவில் மேம்படுத்தும் திட்டத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.