தமிழ்நாடு செய்திகள்

அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி புரட்சி செய்துள்ளது: அமைச்சர் சேகர்பாபு

Published On 2026-02-19 06:57 IST   |   Update On 2026-02-19 06:57:00 IST
  • கடந்த 5 ஆண்டுகளில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
  • 14 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நடைபெறுகிறது.

சென்னை:

அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி புரட்சி செய்திருக்கிறது என்றும், கடந்த 5 ஆண்டு களில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது என்றும் சட்டச பையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சட்டசபை கேள்வி நேரத்தின்போது, மடத்துக்கு ளம் தொகுதி எம்.எல்.ஏ. சி.மகேந்திரன், மடத்துக்குளம் தொகுதி, சோழ மாதேவி, குங்குமவள்ளியம்மன் உடனுறை குலசேகரசாமி கோவிலுக்கு தரைத்தளம் அமைத்து சுற்றுச்சுவர் கட்ட அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

இந்த கோவிலுக்கு ரூ.24 லட்சம் செலவில் ஏற்கனவே தரைத்தளம் அமைக்கும் பணி நடக்கிறது. அதனோடு சேர்த்து ரூ.25 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. தரைத்தளம் அமைக்கும் பணி முடிந்ததும் இந்த பணி மேற்கொள்ளப்படும். தரைத்தளப் பணி 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவு பெற்று. சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கும்.

அன்னதானம் திட்டத்தில் இந்த ஆட்சி புரட்சி செய்திருக்கிறது. 14 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நடைபெறுகிறது. ஒரு வேளை அன்னதான திட்டம் 764 கோவில்களில் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ரூ.120 கோடி செலவில் 3.5 கோடி மக்கள் ஆண்டுக்கு பயன் பெறுகின்றனர். திருவிழா காலங்களில் நெல்லையப்பர் கோவில் உள்பட 27 கோவில்களில் அன்னதான திட்டத்தின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்துக்கு 20 நாட்கள் 4 லட்சம் பக்தர்களுக்கும், வடலூரில் 3 நாட்களுக்கு 30 ஆயிரம் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி, அன்னதான பிரபுவாக இந்த ஆட்சியும், முதல்-அமைச்சரும் காட்சியளிக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் 4,192 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் 130 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆக இந்த மாத இறுதிக்குள் 4,322 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். மக்களோடு இறைவனையும், இறைவியையும் மகிழ்ச்சியோடு வைத்து கொண்டிருக்கிற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Tags:    

Similar News