தமிழ்நாடு செய்திகள்

புறநகர் ரெயில்கள் ரத்து: தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

Published On 2026-02-19 01:23 IST   |   Update On 2026-02-19 01:23:00 IST
  • எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • 45 நாட்கள் புதிய கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை:

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10, 11 நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்கள் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளது. வருகிற 20-ம் தேதி முதல் அனைத்து மின்சார ரெயில்களும் 5 மற்றும் 6 -ம் நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 45 நாட்கள் புதிய கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, பயணிகள் நலன் கருதி தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களின் சேவையில் பிப்ரவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகர் போக்குவரத்து கழகம் தற்போது ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண். இ18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18ஏ-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News