காங்கிரஸ் ஓட்டுக்காக தி.மு.க.வுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன்
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்.
- காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு எவ்வளவோ உள்ளன.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இன்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க.-அ.தி.முக கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து நான் கருத்து கூற மாட்டேன். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது.
தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக இருக்கும். அதனை பெரிய தலைவர்கள் பார்த்து கொள்வார்கள். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்ட கட்சி தான்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. பேசிய கருத்து மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பெரிய தலைவரை கொச்சைப்படுத்தியுள்ளனர். அதற்கு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அப்படியே விட்டு விடுங்கள் என்கிறார். முதலமைச்சரும் அவரை கண்டுகொள்ளாமல் இதில் சிலர் குளிர் காய நினைக்கிறார்கள் விட்டு விடுங்கள் என்கிறார்.
அவர்களுக்கு யாருக்கும் பயம் இல்லை. ஓட்டுக்கு தான் பயம். காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு எவ்வளவோ உள்ளன.
காமராஜர் திருச்சியில் பெல் தொழிற்சாலை ஏற்படுத்தினார். இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதை சிவா எம்.பி. முதலில் சென்று பார்க்க வேண்டும்.
இந்த பிரச்சனையில் காங்கிரஸ் தி.மு.க.வுடன் ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மணல் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது. மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்த மண்டல தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினரை வீடு, வீடாக சென்று பேசுங்கள். 1½ கோடி உறுப்பினரை சேருங்கள்.
30 சதவீதம் வாக்காளர்களை சேருங்கள் என்று கூறி வருகிறார். மக்கள் தி.மு.க.வினரை நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.