தமிழ்நாடு செய்திகள்

'கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்' - தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு பெ.சண்முகம் பேட்டி

Published On 2026-02-27 15:05 IST   |   Update On 2026-02-27 15:05:00 IST
  • கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என மாநிலக்குழு தீர்மானித்துள்ளது
  • தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானித்துவிட்டுதான் அடுத்து எந்த தொகுதியில் போட்டி என்பது பற்றி கூறுவோம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிகளும், பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்,

"திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறது என முன்னறே கூறியிருந்தோம். அதனடிப்படையில் இன்று திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன், எங்கள் கட்சி சார்பில் நானும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல் ராஜ், கண்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என ஏற்கனவே மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. அந்த கோரிக்கையையும் பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் கலந்துபேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

தொகுதிப் பட்டியல் தொடர்பாக எதுவும் வழங்கவில்லை. முதலில் தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானித்துவிட்டுதான் அடுத்து எந்த தொகுதியில் போட்டி என்பது பற்றி கூறுவோம். தொகுதியை குறைக்கவேண்டும் என்பதுபோன்ற கோரிக்கையை எதுவும் திமுக வைக்கவில்லை. பாஜக-அதிமுக கூட்டணியை முறியடிக்கும் வகையில் யார் இந்த அணிக்கு வலுசேர்த்தாலும் அது நல்லதுதான். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். மாநிலங்களவை தேர்தலில் கூட்டணி கட்சியினர் யார் நின்றாலும் அவர்களுக்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்." என தெரிவித்தார். 

Tags:    

Similar News