மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்
- சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
- ஐகோர்ட்டு, இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம், அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டது.
சென்னை:
பா.ம.க.வுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் தொடர்பாக அன்புமணியின் தி.நகர் முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
அதில், பா.ம.க., தலைவராக நான் தான் உள்ளேன். எனவே, என்னுடைய முகவரிக்குதான் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்ப உத்தரவிட வேண்டும். அன்புமணி முகவரிக்கு அனுப்பக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம், அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், அன்புமணி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.