கூட்டணியில் கடைசி நிமிடத்தில் கூட மாற்றங்கள் வரலாம்- நயினார் நாகேந்திரன்
- எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்தால் தான் பிரச்சனை இருக்கும்.
- அரசியலில் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான்.
சென்னை:
பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவான்மியூர் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் தூய்மை பாரதம் என்ற பெயரில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு என்பது கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து பேசுவது நல்ல விஷயம் தான். எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்தால் தான் பிரச்சனை இருக்கும். அ.தி.மு.க.வை 4 ஆண்டுகள் காப்பாற்றியது பா.ஜ.க. தான் என்பதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு பெற்று தந்தார். டி.டி.வி. தினகரன் எதற்காக பா.ஜ.க.வையும், என்னையும் விமர்சனம் செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூரில் என்னை நண்பர் என்று சொன்னார். 30 ஆண்டு காலம் எனக்கு டி.டி.வி. தினகரன் நண்பர். அரசியலில் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது,பா.ஜ.க. என்றைக்கும் அடுத்த கட்சி பிரச்சனையில் தலையிடாது. பஞ்சாயத்தும் செய்யாது. நல்லதுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றம் வரலாம். பா.ம.க., அ.தி.மு.க. கட்சிகளில் பிரச்சனைகள் உள்ளன. புயலுக்குப் பிறகுதான் அமுத மழை பொழியும். அதுபோல பிரச்சனைக்கு பிறகு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார்.