தமிழ்நாடு செய்திகள்

குரூப் 2 தேர்வுகள் ரத்து எதிரொலி - டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்!

Published On 2026-02-08 22:07 IST   |   Update On 2026-02-08 22:07:00 IST
  • பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
  • புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டது. தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சில மையங்களுக்கு வினாத்தாள்கள் தாமதமாகச் சென்றது போன்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும். இதற்கான புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 13, 2026 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். 

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய அலுவலராக வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News