ஆபரேஷன் சிந்தூர் பற்றி மக்களவையில் விவாதிக்க எம்.பி. சு.வெங்கடேசன் ஒத்திவைப்புத் தீர்மானம்
- பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இன்று தொடங்கிய இந்தத் கூட்டத்தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ம் தேதி வரை பாராளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதேபோல, எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி இன்று மக்களவையில் விவாதிக்க மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஒத்திவைப்புத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.