தமிழ்நாடு செய்திகள்

கோவையில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்களுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

Published On 2026-02-12 13:21 IST   |   Update On 2026-02-12 13:21:00 IST
  • கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வெறும் 17,000 சம்பளத்துடன் தான் செல்ல வேண்டியது உள்ளது.

கோவை:

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவியாளர் நிலையில் ரூ.16 ஆயிரத்து 500, சமையலர் மற்றும் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.5 ஆயிரத்து 700 அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி முதல் கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை தெற்கு மாவட்ட தாசில்தார் அலுவலகம் அருகில் சாமியானா பந்தல் அமைத்து இரவும், பகலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், இரவிலும் அங்கேயே தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இன்று 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அவர், அங்கிருந்து நேராக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களை போராட்ட களத்தில் சந்தித்தார்.

அப்போது அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் இருந்தனர்.

பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போராட்ட பந்தலில் தரையில் அமர்ந்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுடன் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தாங்கள் 35 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் ஓய்வு பெறும்பொழுது வெறும் 17,000 சம்பளத்துடன் தான் செல்ல வேண்டியது உள்ளது. எனவே தங்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை, நிறைவேற்றி தர வேண்டும் என்றும், ஆனால் இதுவரை தங்கள் கோரிக்கைகள் எதுவும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது என்று தெரிவித்தனர்.

அதற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி உங்கள் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவோம் என அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும், அவர்களிடம் சட்டசபையில் இதுகுறித்து குரல் எழுப்பப்படும் என்றார். அவர்களுக்கு போராட்ட களத்தில் இருந்தவர்கள் நன்றி கூறினர். அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News