தமிழ்நாடு செய்திகள்

காதலர் தினத்தையொட்டி ரோஜா மலர்கள் விற்பனை அமோகம்! ஒரு பூவின் விலை... இவ்வளவா?

Published On 2026-02-12 11:13 IST   |   Update On 2026-02-12 11:27:00 IST
  • சிகப்பு ரோஜா மலருக்கு இந்தாண்டும் கடும் கிராக்கி.
  • ஒரு மலரின் விலை ரூ.50 முதல் ரூ.55 என சாகுபடியாளர்கள் தகவல்.

ஓசூர்:

உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், பூக்களை (ரோஜா பூ) கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

பூக்கள் என்றாலே பெண்களுக்குப் பிடிக்கும். அதுவும் ரோஜா பூக்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதற்கு ஏற்றார் போல காதலர் தினத்தில் காதலர்கள் முதலில் தன் காதலிக்குக் கொடுப்பது ரோஜா மலர்களேயாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி ரோஜா மலர் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். இங்கு ரோஜா உற்பத்திக்கு ஏற்ற வகையில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக பேரிகை பகுதியில் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதம் ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. ரோஜா சாகுபடியாளர்கள் பல லட்சம் செலவில், பசுமைக்குடில்கள் அமைத்தும், தோட்டங்களிலும் மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் விவசாயிகள், ஆண், பெண் தொழிலாளர்கள், ரோஜா மலர் கொள்முதல் செய்வோர், மலர் வியாபாரிகள் என சுமார் 2 லட்சம் பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில், தாஜ்மகால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பேர்னியர், கார்வெட், டிராபிக்கல் அமேசான் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த ஆண்டுகளில் பலத்த வரவேற்பை பெற்ற தாஜ்மகால் வகை சிகப்பு ரோஜா மலருக்கு இந்தாண்டும் கடும் கிராக்கி ஏற்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனபோதிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு, பருவ நிலை மாற்றம் காரணமாக ரோஜா மலர் உற்பத்தி குறைந்து சுமார் 80 லட்சம் மலர்களே உற்பத்தி ஆனது. அதில் கடந்த 10-ந்தேதி வரை சுமார் 20 லட்சம் மலர்கள் ஏற்றுமதி ஆனது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.

இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பருவ நிலை மாற்றம், கடும் பனி மற்றும் குளிர்கால நோய்கள் ரோஜா செடிகளை தாக்கியதால், ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்து போனது. குறைந்த அளவிலான மலர்களே ஏற்றுமதி ஆன போதிலும் நல்ல விலை கிடைத்திருப்பதால், ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, காதலர் தினத்திற்கு மட்டுமின்றி, சுப நிகழ்ச்சிகள், மகாசிவராத்திரி உள்ளிட்ட மற்ற கொண்டாட்டங்களுக்கும் அதிகளவில் ரோஜா பூக்கள் தேவைப்படுவதால் உள்ளூர் சந்தையில், நல்ல வரவேற்பு கூடுதல் விலை மற்றும் உடனடியாக பணம் கிடைத்து வருவதால் உள்ளூர் விற்பனைக்கு, மலர் சாகுபடியாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பூ மார்க்கெட்டில் மொத்தமாகவும், சில்லறையாகவும் ஏராளமான ரோஜா பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

குறிப்பாக, தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, டபுள் ஷேடு ரோஜாக்கள் என பல வண்ணங்கள் ரோஜாப் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளன.

நேற்றைய நிலவரப்படி 20 மலர்கள் அடங்கிய கொத்து ரூ.650 முதல் ரூ.700 வரை விற்கப்பட்டது. ரோஜா மலர் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருப்பதால், ஒரு மலரின் விலை ரூ.25 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம், உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தரமான ஒரு மலரின் விலை ரூ.50 முதல் ரூ.55 என சாகுபடியாளர்கள் கூறினர்.

Tags:    

Similar News