தமிழ்நாடு செய்திகள்

9801 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் நாளை வழங்குகிறார்

Published On 2026-02-12 13:04 IST   |   Update On 2026-02-12 13:11:00 IST
  • "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலியையும் அறிமுகப்படுத்துகிறார்.
  • ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதி.

சென்னை:

சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து, சென்னை செனாய் நகரில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்துகிறார்.

அனைத்து விதமான நடைமுறைகளையும் கைபேசியிலேயே எளிதாகக் கையாளும் விதமாக "தேர்வுக்களம்" என்னும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

அரசு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக் கொள்ள கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணைய தளத்தை தொடங்கி வைத்து, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் பணியாளர்களுக்கு கல்லூரியின் வளாகத்திலேயே 3 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 அடுக்ககத்தில் 8 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News