செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த இ.பி.எஸ். புகைப்படம் மறைப்பு
- செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறார் செங்கோட்டையன்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார்.
இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.
இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்றது. இதில் பங்கேற்க செங்கோட்டையன் மதுரையில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன் சென்றார்.
அங்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவை சந்தித்து பேசினர்.
செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் சென்றது, சசிகலாவை சந்தித்த விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, கோபியில் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது குறித்து நாளை (அதாவது இன்று) விளக்கம் அளித்து பேச உள்ளேன். கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு இதற்கான விளக்கத்தை அளிப்பேன்,' என்றார்.
இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.விலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரின் படம் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.