டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை: ED-க்கு கிடைத்த சம்மட்டி அடி- திமுக, காங்கிரஸ் கருத்து
- பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மிரட்டும் அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படுகிறது.
- பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் யார் வாங்கினார்களோ அவர்களை சென்று விசாரியுங்கள்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தி.மு.கவின் நியாயமான கோரிக்கையை ஏற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் உத்தரவை வரவேற்கிறோம். டாஸ்மாக் வழக்கில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மிரட்டும் அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றார்.
டாஸ்மாக் நிறுவனம் மீதான அமலாக்கத்துறையின் வழக்கு என்பது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அமலாக்கத்துறை வரம்புமீறி செயல்படுவதால் தான் டாஸ்மாக் வழகில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சோதனைகள் கிடையாது, கைது கிடையாது, அமைச்சர்கள் மீது வழக்குகள் கிடையாது.
பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் யார் வாங்கினார்களோ அவர்களை சென்று விசாரியுங்கள். யாருக்கு மோசடியில் தொடர்பு உள்ளதோ அவர்களை விடுத்து அனைத்து அதிகாரிகளையும் விசாரிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறினார்.