தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திருச்சி வருகை- பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள்

Published On 2025-05-07 15:04 IST   |   Update On 2025-05-07 15:04:00 IST
  • பஸ் முனைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
  • முதலமைச்சரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையடுத்து திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருச்சி:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைகிறார்.

திருச்சி விமான நிலையத்தில்அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அன்று காலை 11.30 மணியளவில் துவாக்குடி ஜி.பி.டி. வளாகத்தில் ரூ.69 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதில் ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விடுதி வசதி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த விழா முடிந்து டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் நாளை மாலை 5 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் அலுவலகம், அரசு மருத்துவமனை, நான்கு ரோடு, தில்லை நகர் வழியாக கலைஞர் அறிவாலயம் செல்கிறார். கலைஞர் அறிவாலயத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். அதன் பின்னர், அரசு விருந்தினர் மாளிகை சென்று ஓய்வு எடுக்கிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்புரம் நால்ரோடு சந்திப்பு, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் வழியாக பிரம்மாண்ட பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பகுதிக்கு செல்கிறார்.

பின்னர் முதல் நிகழ்வாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள தந்தை பெரியார் உருவச்சிலையை திறந்து வைத்து ரூ.236 கோடி மதிப்பீட்டில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

அதனைத்தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புறம் ரூ.129 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அண்ணா உருவச்சிலையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் ஒருங்கிணைந்த பஸ் முனைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர், ரூ.408 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள 'முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை' திறந்து வைத்து, பஸ் முனைய வளாகத்தை முழுவதுமாக சுற்றிப்பார்த்து, பொது மக்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து, பஸ் முனையத்தின் முதல் தளத்தில் நகர பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஸ் முனையத்திற்கு அருகில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்குகிறார். அதன்பின் அவர் ரூ.463 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ.277 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.830 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழா நிறைவுற்றதும் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.

பின்னர் மாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், எம்.ஐ.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், அன்று இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

முதலமைச்சரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையடுத்து திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரை வரவேற்க தி.மு.க.வினர் மாநகர் முழுவதும் கட்சிகொடிகளையும், வரவேற்பு தோரணங்களையும், பிரம்மாண்ட பேனர்களையும் கட்டி வருகிறார்கள். மேலும் பஞ்சப்பூரில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News