8-ம் வகுப்பு மாணவன் ஓட்டிய கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்றவரின் மீது மோதியது- 2 பேர் காயம்
- அப்பகுதி மக்கள் காரில் இருந்த 2 சிறுவர்களையும் மடக்கி பிடித்தனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிய மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, வடபழனி, ராஜாங்கம் மத்திய வீதியை சேர்ந்தவர் சாம். தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக உள்ளார். இவரது 13 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் வாகனத்தை நிறுத்தும் வசதி இல்லாததால் சாம் தனது காரை அருகில் உள்ள குமரன் காலனி 7-வது தெருவில் நிறுத்துவது வழக்கம். நேற்று மாலை பணி முடிந்து திரும்பிய சாம் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது மகனை அழைத்து காரின் மேல் பகுதியில் கவரை போட்டுவிட்டு வருமாறு கூறி அனுப்பினார்.
இதையடுத்து மாணவன் காரின் சாவியை எடுத்துக் கொண்டு தனது நண்பரை உடன் அழைத்து சென்றார். பின்னர் மாணவர் காரை இயக்கி ஓட்டினார். உடன் அவரது நண்பரும் இருந்தார்.
அப்போது பிரேக் எது என்று தெரியாமல் மாணவன் ஆக்சிலேட்டரை மிதித்ததாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சாலையில் ஓடியது. பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் மோதியபடி சாலையோரத்தில் நின்ற அதே பகுதி தனலட்சுமி காலனியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியான முதியவர் மகாலிங்கம் (69) உட்பட 2பேர் மீது அடுத்தடுத்து மோதி நின்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்த 2 சிறுவர்களையும் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முதியவர் மகாலிங்கத்திற்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார். ஆட்டோ முழுவதும் நசுங்கியது. காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிய மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.