3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்- எல்.முருகன் பேட்டி
- இந்தியா முழுவதும் மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய பட்டா பெண்கள் பெயரில் தான் வழங்கப்படுகிறது.
- புதிய பாராளுமன்றத்தில், சிறப்பு கூட்டத்தில் ஒரே ஒரு மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது. அது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்கப்பட்டது.
ஆலந்தூர்:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் கோவைக்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக நம்முடைய சகோதரிகள், தாய்மார்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பல நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக இந்தியா முழுவதும் மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய பட்டா பெண்கள் பெயரில் தான் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச கழிப்பிடமும் கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் புதிய டிரோன் டெக்னாலஜி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3 கோடி பேரை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு. அதுவே பாரத பிரதமருடைய இலக்காக இருந்து வருகிறது.
அதேபோல புதிய பாராளுமன்றத்தில், சிறப்பு கூட்டத்தில் ஒரே ஒரு மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது. அது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இப்படி பெண்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முன்னேற்ற பிரதமர் நரேந்திர மோடி வேலை செய்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.