தமிழ்நாடு செய்திகள்

 கன்னியாகுமரி படகுதுறையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது எடுத்தபடம்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை- விவேகானந்தர் மண்டபத்துக்கு 56 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் பயணம்

Published On 2026-01-18 15:04 IST   |   Update On 2026-01-18 15:04:00 IST
  • மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.
  • அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி:

சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.

இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து அன்று முதல் இன்று வரை 2 மணி நேரம் முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. அதேபோல மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 1 மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடந்தது.

தொடர் விடுமுறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை 56 ஆயிரத்து 609 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர். போகிப்பண்டிகையான 14-ந்தேதி 9 ஆயிரத்து 593 பேரும், பொங்கல் பண்டிகையான 15-ந்தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 737 பேரும், காணும் பொங்கல் தினமான நேற்று 15 ஆயிரத்து 715 பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Tags:    

Similar News