தமிழ்நாடு செய்திகள்

#ADMK ஈரோட்டில் இன்றும், நாளையும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் - புதிய அறிவிப்பை வெளியிடுவாரா?

Published On 2026-03-07 14:05 IST   |   Update On 2026-03-07 14:05:00 IST
  • தமிழக முழுவதும் 189 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை மேற்கொண்டு முடித்துள்ளார்.
  • அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஈரோடு:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக சட்டமன்ற பகுதிகளில் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி வருகிறார். அதேபோல் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

இதுவரை தமிழக முழுவதும் 189 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை மேற்கொண்டு முடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் என 4 தொகுதிகளில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி முடித்துள்ளார்.

பல்வேறு கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்டமாக இன்று மாலை 190-வது தொகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அந்தியூர் அருகே கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் இடத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரசாரம் நடைபெறுகிறது. இதற்காக இன்று மாலை சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் அந்தியூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவருக்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரசாரம் நடைபெறும் இடத்தில் அ.தி.மு.க கட்சி கொடிகள் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) 191-வது பகுதியாக மாலை 4 மணி அளவில் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி கோவில் ரோட்டில் தாய்நகர் குடியிருப்பு எதிரே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.

இதை முடித்துக் கொண்டு நாளை மாலை 5.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக சேலம் மேட்டூர் ரோடு டி ஏ கே வளாகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரசார கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிடுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் அ..தி.மு.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News