#TNAssemblyElection 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு நடத்தி முடித்துள்ளோம்.
- மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்பது ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறி உள்ளோம்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளையும் மற்றும் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் உட்பட நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு நடத்தி முடித்துள்ளோம். நாளை மறுநாள் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடந்த உள்ளோம். தி.மு.க. தலைவர் சொன்னதற்கு பிறகு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம். நாங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மக்களை சந்தித்து வருகிறோம். முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், என அனைவரும் களத்தில் இருக்கிறோம்.
தி.மு.க.வை பொறுத்தவரை கலைஞர் சொன்னது போன்று சொன்னதை செய்வோம். செய்ததை சொல்வோம். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் கூறியதில் 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்பது ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறி உள்ளோம். இந்த நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் முடித்த பிறகு கட்சியின் தலைவரிடம் கொடுத்தார்கள். அதனை தி.மு.க. தலைவர் வெளியிடுவார். நான் போட்டியிடும் தொகுதி பற்றி தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ நான் அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.