தமிழ்நாடு

எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்- கனிமொழி எம்.பி. வேண்டுகோள்

Published On 2024-04-17 05:51 GMT   |   Update On 2024-04-17 05:51 GMT
  • திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

திருச்செந்தூர்:

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று காலை திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களை நுழைவுத் தேர்வு கொண்டு வந்து படிக்க விடாமல் தடுக்கிறார்கள். ஆதிக்க சக்தியை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். அதை தடுக்க நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார். இதுவரை வழங்கப்படாத பெண்களுக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகள் மூடப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும்.

திருச்செந்தூர் கோவிலில் அரசின் சார்பில் ரூ.100 கோடி, தனியார் பங்களிப்பாக ரூ.200 கோடி என ரூ.300 கோடியில் உலகமே வியக்கும் வகையில் திருப்பதி கோவிலை விட மேலாக சாமி தரிசனம் செய்வதற்கு தரம் உயர்த்தப்பட பெறும் திட்ட வளாகப்பணி நடந்து வருகிறது. இந்த பணியை தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பகுதி மக்களுக்காக குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடியில் சரி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தந்துள்ளார். இந்த திட்டம் தேர்தல் முடிந்ததும் தொடங்கப்படும்.

திருச்செந்தூர் பகுதியில் நகராட்சி அருகே உள்ள சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சி சொத்து வரி குறைக்கப்படும். தூத்துக்குடி எனது 2-வது தாய் வீடு. எனவே அனைத்து நல்ல திட்டங்களை செய்ய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News